Monday, October 22, 2018

எரியும் விளக்குகள்

நாளைய (23 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:35-38)

எரியும் விளக்குகள்

'விழிப்பாயிருங்கள், தயாராக இருங்கள்' என்ற அறிவுரைப் பகுதியில் இயேசு வித்தியாசமானதொரு உருவகத்தைக் கையாளுகின்றார்: 'விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.'

'மறுசுழற்சி மின்சாரம்,' 'மாற்று எரிசக்தி,' 'தீங்கற்ற எரிசக்தி,' 'சூரிய எரிசக்தி' என்று பேசப்படும் இக்காலத்தில், 'விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்' என்று இயேசு சொன்னால், அவர் ஒரு சுற்றுச்சூழல் எதிரியாகவே பார்க்கப்படுவார். திடீர் திடீரென உயரும் மின்கட்டணம், அடிக்கடி கட்-ஆகும் மின்சாரத்தின் பின்புலத்தில் 'விளக்குகள் எந்நேரம் எரிந்துகொண்டிருப்பது' சாத்தியமல்ல.

ஆனால், நம் கைகளில் இன்று ஒரு விளக்கு எப்போதும் எரிந்துகொண்டே இருக்கிறது. அதுதான் ஸ்மார்ட்ஃபோனில் திரை விளக்கு அல்லது திரை வெளிச்சம். நமக்கு அழைப்பு வரும்போது, குறுஞ்செய்தி வரும்போது எனத் தொடங்கி, நாமாகவே அதை எடுத்து, எடுத்து பார்க்கும் நேரமும் அது எரிந்துகொண்டேதான் இருக்கிறது. ஸ்மார்ட்ஃபோன் திரையின் வெளிச்சம் அது தயாராக இருப்பதை உணர்த்துகின்றது.

கிராமங்களில் வீட்டில் எரியும் விளக்குகளை வைத்து வழிசொல்வார்கள்.

'வெளியில் குண்டு பல்பு எரியும் வீடு,' 'டியுப் லைட்ட எரியும் வீடு,' 'இருட்டான வீடு,' 'மாடியில் விளக்கெரியும் வீடு,' 'தெருவிளக்கின்முன் உள்ள வீடு,' 'திண்ணையில் பல்ப் எரியும் வீடு' என்றெல்லாம் அங்கே அடையாளங்கள் சொல்லப்படும். மேலும், 'விளக்கெல்லாம் அணைஞ்சிடுச்சே, அவங்க தூங்கியிருப்பாங்க, நாளைக்கு வாங்க' என விளக்கு வெளிச்சத்தின் மறைவும் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறாக, விளக்கு உறங்காநிலையின் அடையாளமாக இருக்கிறது.

இயேசுவின் சமகாலத்தில் வீட்டில் விளக்கு எரிதல் வீட்டுத் தலைவருக்கு தன் வீட்டை அடையாளம் காணவும் உதவியது - கலங்கரை விளக்கம் போல.

நாளைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு 'உறங்காநிலை' அல்லது 'விழிப்புநிலை.'

பல நேரங்களில் நம் கண்கள் விழித்திருந்தாலும் நம் எண்ணங்கள் உறங்குகின்றன. அல்லது நாம் முழு தயார்நிலையில் வேலைகள் செய்வதில்லை. நம் களைப்பு, கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பு இவை அனைத்தும் நம் எண்ணங்கள் என்னும் விளக்கை மங்கவைக்க அல்லது அணைக்கக் கூடியவை.

இரண்டாம் காவல் வேளை, மூன்றாம் காவல் வேளை என எந்நேரமும் விழித்திருக்கும் ஒரு நிலை இருந்தால் எத்துணை நலம்.

கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் இணைந்திருத்தல் நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரும் என்றும், அங்கே நாம் இசைவாகப் பொருந்தி இருப்போம் என்றும் எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார் பவுல் (காண். 2:12-22).

அவரோடு இணைந்துள்ள நிலையில் நாம் அவர்போல் ஒளிர்வோம்.

ஆக, இன்று ஸ்மார்ட்ஃபோனை எடுத்து அதன் வெளிச்சத்தில் என் கண்களைப் பதிக்கும்போதெல்லாம், 'என் உள்ளத்து விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா?' என்று நான் கேட்பேனாக!


3 comments:

  1. விளக்குகள் எரிவதன் 'மூலம்' பற்றியோ இல்லை எரியும் விளக்குகள் தரும் வீடுகள் குறித்த அடையாளம் பற்றியோ இத்தனை விளக்கமாக இதுவரை கேட்டதில்லை." விளக்கு உறங்கா நிலையின் அடையாளம்" எனும் விஷயம் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க அழைக்கிறது. .நம் மன விளக்கை அணைக்கக் கூடிய கவலை,களைப்பு,ஏக்கம் போன்ற விஷயங்கள் நம்மைப்படை எடுக்காமலும்,எடுத்தாலும் நம் விளக்கை அணைத்து விடாமலும் பார்த்துக்கொள்வோம்.'அவரோடு இணைவோம்; அவர்போல ஒளிர்வோம்." ஸ்மார்ட் ஃபோனை வைத்து நம் உள்ளத்து விளக்கின் நிலையைத் தெரிந்து கொள்ள தந்தை விடுக்கும் யுத்தி மெச்சத்தகுந்தது.
    பி.கு "இரண்டாம் காவல் வேளை,மூன்றாம் காவல் வேளை என எந்நேரமும் விழித்திருக்கும் நிலை இருந்தால் எத்துணை நலம்" என்கிறார் தந்தை.அவர் எத்துணை அதிர்ஷ்டம் பெற்றவர் என்பது அவருக்குத் தெரியவில்லை.என்னைப்போன்றவர்கள் விடிய,விடிய விழித்திருப்பினும் சாதிப்பது ஏதுமில்லை என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும்! " இக்கரைக்கு அக்கரை பச்சை."

    ReplyDelete
  2. "என் உள்ளத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதா?" என்று நான் கேட்பேனாக!நன்றி.

    ReplyDelete
  3. Father, மிகவும் அருமையான சிந்தனைகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete