Thursday, October 25, 2018

தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நாளைய (26 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:54-59)

தீர்மானிக்காமல் இருப்பதேன்?

'நாம் ஐந்து வருடங்களுக்குப் பின் எப்படி இருப்போம்?' என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா?

உங்கள் பதில் 'இல்லை' என்றால்,

'இன்று நாம் இருக்கும் இடத்தில் இருப்பது நாம் ஐந்து வருடங்களுக்கு முன் செய்த தெரிவுகளால்தான் என்றால், அது சரியா?'

நாளைய நற்செய்தி வாசகத்தில், 'நிலத்தின் தோற்றத்தையும், வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?' எனக் கேட்கும் இயேசு, 'நேர்மையானது எது என நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பது ஏன்?' என மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறார்.

ஆக, காலத்தின் அறிகுறிகளைக் கண்டுணர வேண்டும். பின் அதற்கேற்ற தீர்மானத்தை - நேர்மையானதை - எடுக்க வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எடுத்த எல்லா முடிவுகளுமே - கல்வி, குடும்பம், வேலை, நிதி, சேமிப்பு, உறவுநிலை - இன்று நான் இருப்பதை பாதிக்கின்றன. நான் மேற்கொண்ட தெரிவுகளால்தான் இன்று என் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்றால், நான் இன்று எடுக்கும் தெரிவுகள் நாளை என் வாழ்வை நிர்ணயிக்கும். இல்லையா?

தெரிவு செய்வது மட்டுமல்ல.

தெரிவு செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும்.

அதைவிட, தெரிவு செய்வதை விரைவாகச் செய்ய வேண்டும்.

அதற்கு எடுத்துக்காட்டாக இயேசு ஒரு எடுத்துக்காட்டும் தருகின்றார்.

'நடுவரிடம் ஒருவர் நம்மை இழுத்துச் செல்லும்போது வழியில் வழக்கை தீர்த்துக்கொள்ளும் ஆர்வமும் அவசரமும் வேண்டும்.'

வழக்கை தீர்த்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் அவர் சம்மதித்தால் அந்த சம்மதத்தால் ஒரு பயனும் இல்லை. ஆக, வழியில் - அதாவது, இப்போதே - தெரிவு செய்ய வேண்டும்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எபே 4:1-6), 'ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான்' என்று எபேசு நகரத் திருச்சபைக்குத் தன் அறிவுரையைத் தொடங்கும் பவுல், ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ப - அதாவது, தாங்கள் மேற்கொண்ட தெரிவுகளுக்கு ஏற்ப - வாழுங்கள் என்கிறார்.

தெரிவுகளே நம் அழைப்பை முடிவு செய்கின்றன.

நல்ல தெரிவுகள் நல்ல தெளிவுகளே.

2 comments:

  1. அண்மை காலங்களில் தந்தை தான் செய்யும் 'தெரிவுகள்' குறித்து தெளிவாக இருக்கிறார் போலும்.கண்டிப்பாக 5 வருடங்களுக்கு முன் நாம் நம் கல்வி.குடும்பம்,நிதி,சேமிப்பு ,உறவுநிலை முதலானவை குறித்து எடுத்த எல்லா முடிவுகளும் நம் எதிர்பார்ப்புகளுக்குள்ளேயே இருப்பின் நாம் ஜோசியராகத்தான் இருக்கவேண்டும்.நல்லது நடக்குமென முடிவுகள் எடுக்கிறோம்.நம் எண்ணங்களோடு இணைந்து இருப்பின் மகிழவும் ,வேறு விதமாக இருப்பின் ' எங்கே தவறினோம்?' என்று நம்மையே கேட்டு செய்த தவறிலிருந்து நம்மைத் திருத்திக்கொள்ளவும் நம் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நன்றாகச,செய்வதாய் நினைத்து நாம் எடுக்கும் சில முடிவுகள் தவறாகப் போவதற்கு நாம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? ஆனால் செய்யும் தெரிவுகளை விரைவாகச் செய்ய வேண்டுமென்பது மிகச்சரியே! சும்மாவா சொன்னார்கள் " சாட்சிக் காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்" என்று? நம் வாழ்வில் சரியான தெரிவுகளை எடுக்கவும்,எடுத்த தெரிவுகளுக்கேற்ப வாழவும் இறைவன் துணை உடன் வருவதாக! தன் வாழ்க்கையோடு இணைந்த சில 'தெரிவுகள' நமக்குப் பாடமாய்த் தரும் தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. Beloved father,
    You Kindle us to self-examine ourselves. thank you." தெரிவுகளே நம் அழைப்பை முடிவு செய்கின்றன.
    நல்ல தெரிவுகள் நல்ல தெளிவுகளே!"
    அந்த நல்ல தெரிவை யான் சொந்தமாக்கிக் கொள்ள நும் உடனிருப்பை தாரும் இறைவா!
    You ignite our life by your vibrations
    Key ideogram--- simply marvelous!
    Nobody can beat you in both aspects...
    Long live your aspirations & inspirations!
    Thank you.

    ReplyDelete