Wednesday, October 3, 2018

மீட்பர் வாழ்கிறார்

நாளைய (4 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:1-2)

மீட்பர் வாழ்கிறார்

இயேசு தனக்கு முன் எழுபத்திரண்டு சீடர்களை நியமித்து, அவர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்பும் நிகழ்வை நாம் நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.மற்ற நற்செய்தியாளர்கள் இந்நிகழ்வை பதிவு செய்வதற்கும், லூக்கா பதிவு செய்வதற்கும் உள்ள பெரிய வித்தியாசம் இயேசுவின் அறிவுரைப் பகுதியின் முதல் வரியில் அடங்கியிருக்கிறது:

'...அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.'

இங்கே அறுவடையின் உரிமையாளர் கடவுள். ஆக, அனுப்பப்படுபவர் 'பணியாளருக்குரிய' நிலையில் இருக்கிறார். அவர் ஒருபோதும் உரிமையாளர் என்று தன்னை ஆக்கிக்கொள்ளக்கூடாது.

இரண்டாவதாக, 'மன்றாடுவது' அல்லது 'செபிப்பது.' நாம் நம் மொபைல் ஃபோனை சார்ஜ் செய்தால் அடுத்தவரோடு பேச முடியும். என்னதான் அழகான ஃபோனாக, ஸ்மார்ட்ஃபோனாக இருந்தாலும், அதன் பேட்டரி சார்ஜ் ஆகவில்லை என்றால், அது வெறும் பேப்பர் வெயிட்தான். ஆக, பணிக்குச் செல்பவர் முதலில் தன் உரிமையாளரோடு தொடர்பில் இருக்க வேண்டும். அவர் தன் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இது ஒன்று இருந்தது என்றால், மற்றவை தானாகவே நிகழ்ந்துவிடும்.

ஏனெனில், தான் பணிக்குச் செல்லும் இடத்தில் உள்ள நெருக்கடி மற்றும் வசதியின்மையை அணுகுவதற்கு, தான் எதிர்கொள்ளும் வெறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு இந்த இறைவேண்டல் துணைநிற்கும்.

இதே சிந்தனைதான் நாளைய முதல் வாசகத்திலும் (காண். யோபு 19:21-27) மிளிர்கிறது.

தன் துன்பம் ஒருபுறம். தன் நண்பர்களின் குற்றம் சுமத்துதல் மறுபுறம். இப்படி அமர்ந்திருக்கும் யோபு, மிகவும் நம்பிக்கை தரும் நல்வார்த்தைகளை மொழிகின்றார்:

'என் மீட்பர் வாழ்கின்றார். என்றும் இறுதியில் மண்மேல் எழுவார்.'

அதாவது, தான் இப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், தன் மீட்பர் வாழ்கின்றார் என்ற நம்பிக்கையை யோபு இழந்துவிடவில்லை.

'இது வெறும் மண்தான்' என பல நேரங்களில் ஒன்றுமில்லாமையை உருவகப்படுத்துகிறோம். நாம் சாப்பிடும் உணவில் சுவை இல்லை என்றால், 'சாப்பாடு மண்ணு மாதிரி இருக்கு!' என்கிறோம். நாம் பேசிக்கொண்டிருக்கும் நபர் எந்தவித பதிலுணர்வும் காட்டாமல் இருந்தால், 'என்ன மண்ணு மாதிரி இருக்க!' என்கிறோம். நாம் பாடம் எடுக்க, படிக்கும் மாணவர் ஒன்றும் படிக்காமல் வந்தால், 'என்ன மண்ணு மாதிரி உட்கார்ந்திருக்க!' என்று சாடுகிறோம். இவ்வாறாக, 'மண்' என்பது 'வெறுமை' அல்லது 'ஒன்றுமில்லாமையின்' உருவகமாக இருக்கிறது.

வெறுமை அல்லது ஒன்றுமில்லாமை இருந்தாலும் அதிலிருந்து தன் மீட்பர் எழுவார் என்ற எதிர்நோக்கு கொண்டிருக்கிறார் யோபு.

இந்த எதிர்நோக்கு அவரில் உருவாகக் காரணம் அவர் கொண்டிருந்த இறை அனுபவமே.

ஆகவே, 'மீட்பர் வாழ்கிறார்' என்ற நம்பிக்கை செய்தியை, இறைவாக்காக அறிவிக்க அனுப்பப்படுபவர்கள் தாங்கள் முதலில் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அனுபவம் பெற்றவர்கள் எந்தவொரு வாழ்க்கை நிலையையும் எதிர்கொள்வர்.

2 comments:

  1. இந்த காலகட்டத்திற்கு ஏற்றதொரு பதிவு.வெற்றி கண்டு வீறு கொள்வதையும்,தோல்வி கண்டு துவண்டு போவதையும் வாழ்க்கையாகக் கொண்டுள்ள நமக்கு யோபுவின் வார்த்தைகள் வாழும் வழி சொல்கின்றன." வாழும் என் இறைவன் மண்மீது எழுவார் " எனும் நம்பிக்கை என்னில் இருப்பதால் " என் இந்த நிலையும் கடந்து போம்" என ஒவ்வொரு முறையும் தன்னை சமன் செய்து கொள்கிறார். இந்த மனப்போக்கு அவரிடம் ஸ்திரப்படக் காரணமான " இறை நம்பிக்கையை" நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென நமக்கு உரைக்கிறது இன்றையப்பதிவு.' மன்றாடுவது' அல்லது ' , 'செபிப்பது' என்பது அருட்பணியாளர்களுக்கே உரிய வேலை எனும் எண்ணத்தைக் கைவிட்டு 'அவரால்' பெயர் சொல்லி அழைக்கப்பட்ட அனைவருமே தங்கள் உரிமையாளரோடு உள்ள உறவை இணக்கமாகவும், ,தங்கள் பாட்டரியை எப்பொழுதும் உயிரோட்டத்தோடும் வைத்திருக்க வேண்டுவது அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வைக்கின்றன தந்தையின் வரிகள்." இறைவேண்டலின்" இன்றியமையாமையை உணர்த்தும் அழகான பதிவு. 'மண்' என்பது 'வெறுமை'யைக் குறிக்கும் ஒரு சொல் என்பதற்குத் தான் எத்தனை விளக்கம்! வாழ்த்துக்களும்,இறைவேண்டலும் தந்தைக்கு உரித்தாகட்டும்!!!

    ReplyDelete
  2. அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாட-ஒன்றுமில்லாமையின் போதும் அவரோடு தொடர்பில் இருக்க-இறை அனுபவ இனிமையைச் சுவைத்து எல்லாவற்றையும் எதிர் கொள்ள நான் பார்த்துக் கற்றவர் இஞ்ஞாசிமுத்து அடிகளார்.கூப்பிய கரங்களோடு பேழையுள் உறையும் பேரன்போடு பேசிய அவரின் வாழ்வு ஒவ்வொரு கணமும் இயக்குகிறது.
    செபிக்கின்ற வாழ்வு-செழிக்கின்ற சிந்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழ்விக்கும்...இயேசு அடிகளார் பைபிளை இன்றைய வாழ்வோடு தொடர்பு படுத்தும் விதம் புதிர்களை அவிழ்க்கிறது;புதியன புலர்கிறது.
    வாழ்க்கையப் பின்னோக்கிப் பார்த்து முன்னோக்கி நடக்க கற்பிக்கிறது...
    தாழ்நிலை நின்ற நான்,கசியும் கண்களோடு அறுவடையின் உரிமையாளரை நன்றியோடு பணிகிறேன்.

    ReplyDelete