Sunday, December 31, 2017

தாய்மையுடன் புத்தாண்டில்

01 ஜனவரி 2018: மரியாள் இறைவனின் தாய் மற்றும் புத்தாண்டு பெருவிழா

I. எண்ணிக்கை 6:22-27
II. கலாத்தியர் 4:4-7
III. லூக்கா 2:16-21

தாய்மையுடன் புத்தாண்டில்

கிரகோரியன் காலண்டரின் முதல் நாளாகிய இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (1) இது ஆண்டின் தலைநாள். இன்று புத்தாண்டுப் பெருவிழா. புதிய குழந்தை, புதிய மலர், புதிய ஆடை, புதிய மனிதர், புதிய இடம், புதிய வீடு, புதிய வாகனம், புதிய வேலை என புத்துணர்ச்சி அளிக்கும் வரிசையில் புதிய ஆண்டும் அடக்கம். காலண்டர், டைரி என அனைத்தையும் புதிதாகத் தொடங்குகின்றோம்.  (2) இன்று கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள். இந்த நாள்தான் 'இயேசுவுக்கு' பெயர்சூட்டப்படும் நாள். 'பெயரில் என்ன இருக்கிறது?' எனக் கேட்கிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் பெயரில் நிறையவே இருக்கிறது. தனக்குச் சூட்டப்பட்ட பெயர்போலவே வாழ்ந்து முடிக்கிறார் இயேசு. நம் மீட்பராகின்றார். (3) இன்று மரியாளின் தாய்மையின் விழா. மூவொரு இறைவனின் இரண்டாம் நபரை திருவயிற்றில் தாங்கியதால் இறைவனின் தாய் என்ற நிலைக்கு உயர்கின்றார். 

கிரேக்க கடவுள் Janus (from here is derived 'January') போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கின்றோம்.

முதல் வாசகம் எண் 6:22-27

'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே (காண். லேவி 9:22) இன்றைய முதல் வாசகம். இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த வார்த்தைகளை வைத்தே திருத்தூதர் பவுலும் பிற்காலத்தில் தன் கடிதங்களில் திருஅவையினரை வாழ்த்துகிறார் என்பதையும் நினைவில்கொள்வோம். 

இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த ஃபார்முலாவைத்தான் கால்வின் பயன்படுத்தி தன் சபையில் உள்ள எல்லாரையும் செல்வராக்கினார். எப்படி? கடவுள் உனக்கு ஆசீர் தருகிறார் என்றால் நீ செல்வந்தனாய் இருப்பாய். இதை அப்படியே கொஞ்சம் நீட்டி, நீ நன்றாக உழைத்து, செல்வம் சேர்த்தால், ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்று உணரலாமே என்று சொன்னார். இந்த பின்புலத்தில்தான் மேற்கத்திய ஐரோப்பாவில் தொழில்புரட்சி உருவானது.

தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ.

மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.

மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்.

1. 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! 
உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். இருந்தாலும், இங்கே அந்த பணியை இங்கே அருட்பணியாளர்தான் செய்கிறார். ஆக, அருட்பணியாளர் தன் கரத்தில் ஆண்டவரின் கரம் கொண்டு ஆசீரளிக்கின்றார். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். 'பராகா' என்பதை 'புகழ்வது' என்றும் 'ஆசீர்வதிப்பது' என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்திலும் இதை நாம் பார்க்கலாம்: 'Let us bless the Lord' என்னும் வாக்கியத்தில் 'ப்ளஸ்' என்பது மனிதர்கள் இறைவனைப் புகழ்வதையும், 'God பளஸ் யூ' என்னும் வாக்கியத்தில் 'ப்ளஸ்' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. 'பராகா' என்பதை நாம் இரண்டாம் அர்த்தத்தில் எடுத்துக்கொள்வோம். இரண்டாவதாக, 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான்.

2. 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. ஆக, ஆண்டவரின் ஒளி சூரியனின் ஒளி போல எல்லாருக்கும் பொதுவாக இல்லாமல், ஒவ்வொருவர் மேலும் அவரின் தனிப்பட்ட அருளாக ஒளிர்கிறது.

3. 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார். 

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது?

நான் என் உள்ளங்கையில் ஐஃபோனை வைத்திருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு வெளியில் இருப்பது ஐஃபோன். இந்த ஐஃபோனை தொட்டுக் கொண்டிருப்பது என் தோல். இந்த ஐஃபோனின் நிறையை, குளிர்ச்சியை, வெதுவெதுப்பை உணர்வது என் உள்ளுணர்வு அல்லது மூளை. ஆக, எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது.

இதை ஆண்டின் முதல் நாளில் நாம் வாசிக்க என்ன காரணம்?

இறைவனின் ஆசி நமக்கு வெளியில் இருக்கவும் - அதாவது, நம் வெளிப்புற காரணிகளால் நமக்கு தீங்கு நிகழாமல் இருக்கவும், நம் மேற்புறத்தில் தொடர்ந்து, நம் உள்புறத்தில் அமைதியாக நிலைத்திருக்கவும் வேண்டும். இல்லையா?

இந்த ஆசியை ஆண்டின் முதல் நாள் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் நாமும் ஒருவர் மற்றவருக்கு வழங்கலாம். வழங்குவதன் வழியாக நாமும் பெறலாம்.

இரண்டாம் வாசகம் கலா 4:4-7

கலாத்திய திருச்சபைக்கு தான் எழுதும் கடிதத்தில் சட்டம் மற்றும் தூய ஆவி என்ற இரண்டு கூறுகளை விளக்கும் பவுலடியார், சட்டத்தின் வழி பிறப்பவர்கள் அடிமைகள் எனவும், தூய ஆவி வழி பிறப்பவர்கள் உரிமைக் குடிமக்கள் எனவும் முன்வைக்கின்றார். சட்டத்திலிருந்து, தூய ஆவியானவரை நோக்கிய நம் பயணம் இயேசுவில் தொடங்குகிறது. 

காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார்.

'கடவுளின் மகன்.' இயேசுவை ஆண்டவர் என்றோ, கிறிஸ்து என்றோ அழைப்பதற்குப் பதிலாக 'கடவுளின் மகன்' என அழைக்கின்றார். இயேசுவின் இந்த கடவுளின் மகன் நிலையை ஏற்றுக்கொள்ளும் அனைவரும், அந்த நிலையில் பங்கேற்கின்றனர். இந்த நிலைதான் தூய ஆவி. இந்த நிலையினால்தான் நாமும் கடவுளை, 'அப்பா, தந்தையே' என அழைக்க முடிகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தை இன்று நாம் ஏன் வாசிக்கின்றோம்?

1. 'காலம்.' இன்று ஆண்டின் புதிய நாளைத் தொடங்குகிறோம். ஆண்டு அல்லது காலம் என்பது கடவுளுக்கும், நமக்கும் வௌ;வேறு எதார்த்தங்கள் அல்ல. காலம் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானது. ஏனெனில் கடவுளின் மகனே இந்தக் காலம் என்னும் நீரோட்டத்தினுள் இறங்கிவிட்டார்.

2. 'கடவுளின் மகன்.' இன்று அன்னை மரியாளை 'இறைவனின் தாய்' என்று கொண்டாடுகிறோம். இயேசு கடவுளின் மகன். ஆகையால், இந்த மகனை கருத்தாங்கிய மரியாள் கடவுளின் தாயாக மாறுகிறார்.

3. 'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்!' - இது புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு நல்ல பாடம். நாம் யாருக்கும், எந்தப் பழக்கத்திற்கும், எந்த சூழலுக்கும் அடிமைகள் அல்லர். நாம் அப்படி யாருக்காவது அல்லது எதற்காவது அடிமையாக இருந்தால் அதை நாம் கண்டறிந்து அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். எந்த சின்ன நூற்கண்டும் நம்மை சிறைப்படுத்திவிடக் கூடாது.

நற்செய்தி வாசகம் லூக் 2:16-21

i. பாட பின்புலம்
இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல் பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி வாசகம்.

ii. பாட அமைப்பு
இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
அ. இடையர்களின் வருகை
ஆ. இடையர்களின் வியப்பு
இ. மரியாளின் பதிலுணர்வு
ஈ. இடையர்களின் செல்கை
உ. இயேசுவின் விருத்தசேதனம்

அ. இடையர்களின் வருகை
இடையர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பெத்லகேம் நோக்கி புறப்படுமுன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர். 'வாருங்கள்!' 'போவோம்!' 'பார்ப்போம்!' - இந்த மூன்று வினைச்சொற்களால் ஒருவரையொருவர் வேகப்படுத்துகின்றனர். மேலும், 'ஆண்டவர் நமக்கு அறிவித்ததை' என அவர்கள் சொல்வதன்வழியாக தங்களுக்குத் தோன்றிய தூதர் வெறும் கனவோ அல்லது காட்சியோ அல்ல, ஆண்டவரின் தூதரே என நம்புகின்றனர். 

ஆ. இடையர்களின் வியப்பு
திருக்குடும்பத்தை காணும் பேறு முதலில் இடையர்களுக்கே கிடைக்கின்றது. சமூகத்தில் யாரும் அங்கீகரிக்காத ஒரு குழுவை இறைவன் அங்கீகரிக்கிறார். குழந்தையைப் பற்றி அவர்கள் மரியாள் மற்றும் யோசேப்பிடம் என்ன சொன்னார்கள்? இக்குழந்தையே 'ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்' என்பது ஒரு புதுமையான செய்தி. இந்த செய்தியை கபிரியேல் மரியாளிடம் சொல்லவில்லை. இப்படித்தான் தங்களுக்கு இக்குழந்தை வெளிப்படுத்தப்பட்டது என்று இவர்கள் சொன்னவுடன், அது மரியாளுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும்.

இ. மரியாளின் பதிலுணர்வு
மரியாளின் பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல் இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன் உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து போகின்றார்.இங்கே 'சும்பல்லூசா' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு 'தியானித்தில்' அல்லது 'உள்ளத்தில் இருத்துதல்' அல்லது 'மனனம் செய்தல்' என்பது பொருள் அல்ல. மாறாக, 'ஒன்றுகூட்டுதல்' என்பதே பொருள். அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத் துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில் கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள். இன்று மட்டுமல்ல. இயேசுவின் வாழ்வின் இறுதிப்பொழுது வரை இவள் இப்படி குட்டித் துண்டுகளை ஒன்றுகூட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

ஈ. இடையர்களின் செல்கை
இது லூக்காவின் கமெண்ட். அதாவது, இடையர்கள் ஏமாற்றம் அடையவில்லை. தாங்கள் கேட்டவையும், கண்டவையும் நிறைவேறியது குறித்து மகிழ்ந்தவர்களாக இல்லம் திரும்புகின்றனர்.

உ. இயேசுவின் விருத்தசேதனம்
இந்த நிகழ்வு பெத்லகேமில் நடந்ததா, அல்லது நாசரேத்தில் நடந்ததா, அல்லது எருசலேமில் நடந்ததா என்ற குறிப்பு நற்செய்தியில் இல்லை. நாள் பற்றிய குறிப்பு - எட்டாம் நாள் - இருக்கிறது. மேலும் இந்த நாளில்தான் 'இயேசு' என்ற பெயரும் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. 'யசுவா' என்றால் 'ஆண்டவர் மீட்பார்' என்பது பொருள். இந்த 'மீட்பர்' என்ற பெயர் இடையர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. ஆக, இடையர்களின் வருகை வானதூதர் மரியாளுக்கு அறிவித்த முதல் செய்தியை உறுதிப்படுத்துகிறது.

iii. 'இறைவனின் தாய்' - இறையியல் விளக்கம்
மரியாளை 'கடவுளின் தாய்' என்று சொல்வது சிலருக்கு நெருடலாக இருக்கும். எல்லாம் கடந்த கடவுளுக்கு மனிதர் ஒருவர் எப்படி தாயாக இருக்க முடியும்? என்பது முதல் கேள்வி. மேலும், மரியாள் கடவுளுக்கே தாய் என்றால், கடவுள் தோன்றுமுன்னே மரியா இருந்தாரா? கடவுள் மரியாளிடம் தோன்றினார் என்றால், அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? - தோற்றம் இல்லாத தோன்றல்தானே கடவுள்!

ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

iv. இடையர்களின் பத்து கட்டளை

இன்றைய நாளில் நாம் சந்திக்கும் இடையர்கள் நாம் புதிய ஆண்டில் இனியவர்களாக வாழ நமக்கு பத்துக்கட்டளைகத் தருகின்றனர். (இவை பவுலோ கோயலோ அவர்களின் 'ரசவாதி' என்ற நூலில் வரும் 10 வாழ்க்கை பாடங்களைத் தழுவியவை. ரசவாதியின் ஹீரோ சந்தியாகுவும் ஆடுமேய்க்கும் சிறுவன்தான். ஆக, இந்த தழுவல் எளிதாக இருக்கிறது. பவுலோ கோயலோவின் வலைப்பூவில் காண இங்கே சொடுக்கவும்: )

1. பயப்பட வேண்டாம்.
அடையவர்களுக்கு வானதூதர் நற்செய்தியை அறிவித்தபோது சொன்ன முதல் வார்த்தை: 'அஞ்சாதீர்!' என்பதுதான். தடைகளை விட தடைகள் வரும் என்ற பயமே நம்மை பல நேரங்களில் பலவீனமாக்குகிறது. நாளை நமக்கு தேவைப்படும் என்ற அச்சத்தில் நாம் சரியாக சாப்பிடாமல் இன்றே உணவைச் சேர்த்து வைத்து பட்டினி கிடக்கின்றோம். படிக்கும்போது வேலையைப் பற்றி பயப்படுகிறோம். வேலையில் திருமணம் பற்றி பயப்படுகிறோம். திருமணத்தில் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயப்படுகிறோம். நமக்கு மேலிருப்பவர்களைப் பார்த்து பயப்படுகிறோம். புதியவர்களைப் பார்த்து பயப்படுகிறோம். புதிய முயற்சிகள் எடுக்க பயப்படுகிறோம். ஏற்கனவே எடுத்து வைத்த புதிய ஆடைகளை அணியப் பயப்படுகிறோம். வாசனை திரவியங்களை மூடி மூடி வைக்கிறோம். நகைகளை நல்ல நாட்களில் அணிந்து கொள்ளலாம் என்று பத்திரப்படுத்கிறோம். மொத்தத்தில், நாம் நம் கண்முன் இருக்கும் பொழுதை வாழாமல், கண்முன் இல்லாத ஒரு பொழுதில் வாழ்வதற்காக நாம் நம் வாழ்வை தள்ளிப்போடுகிறோம். வாழ்வதற்காக தயாரிப்பதை நிறுத்திவிட்டு நாம் வாழத் தொடங்கலாமே!

2. உண்மை என்றும் நிலைத்திருக்கும்
தேன் ஒரு போதும் கெடுவதில்லை. சூரிய ஒளி பட்டால் மின்னும். சூடாகும். பனிக்கட்டி பட்டால் குளிரும். ஆனால், வெயிலோ, மழையோ, பனியோ அதன் இயல்பு மாறுவதில்லை. யாரும் அதைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், சுவைத்தாலும், சுவைக்காமல் விட்டாலும் அது அப்படியேதான் இருக்கின்றது. உண்மையும் அப்படித்தான். யாராலும் அதை மூடி வைக்கவோ, கலங்கப்படுத்தவோ முடியாது. இடையர்கள் பொய்யர்கள் என்றும், திருடர்கள் என்றும், அழுக்கானவர்கள் என்றாலும் அக்கால சமுதாயம் சொன்னாலும், அவர்களின் உண்மையான இயல்பை அவர்கள் மறைக்க முடியவில்லை. அவர்கள் மனிதர்கள். அதுதான் உண்மை. இந்த உண்மை வானதூதர்களால் உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்த இடையர்கள் தங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதது பற்றி வருத்தப்படவில்லை. குப்பையில் கிடந்தாலும் வைரம் மின்னும் என்று தங்கள் கடமையை தாங்கள் செய்கிறார்கள். இறுதியில் தாங்களே உலகின் மெசியாவை முதலில் காணும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

3. ஒரே போல் வாழ்வதை விடுங்கள்
'வாருங்கள்! பெத்லகேம் செல்வோம்!' என்று ஒருவர் சொன்னவுடன், எல்லாரும் உடனடியாக வந்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா? 'ஐயயோ! அப்போடு ஆடுகளை யார் பார்ப்பார்?' என்று யாராவது ஒருவர் கண்டிப்பாக கேள்வி கேட்டிருப்பார். எழுதல், ஆடுகளை எழுப்புதல், நடத்தல், மேய்த்தல், உண்ணுதல், உறங்குதல் என்ற ஒரே போல் வாழ்க்கையை உடைக்கிறது இடையர்களின் பயணம். தங்கள் வாழ்வில் இதுவரை செய்திராத செயல்களை இனி அவர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவற்றைச் செய்ய துணிவோடு புறப்படுகின்றனர். திங்கள் தொடங்கி வெள்ளி வரை ஒரு வாழ்வு, சனி-ஞாயிறு வேறொரு வாழ்வு என நம் வாழ்வும் ஒன்றுபோலவே இருக்கின்றதா?

4. நிகழ்காலத்தை தழுவிக்கொள்ளுங்கள்
தங்கள் கடந்த காலம் இடையர்களின் கண்முன் வரவில்லை. தாங்கள் போய் குழந்தையைப் பார்த்தால், குழந்தையின் பெற்றோர்கள் தங்களை நம்புவார்களா என்ற கலக்கம் இல்லை. ஒவ்வொரு பொழுதும் நமக்கு கொடுக்கப்படும் வேலையை நன்றாக செய்து முடிப்பதே சால்பு என நினைத்துப் புறப்படுகின்றனர்.

5. உன் மகிழ்ச்சி அடுத்தவரையும் பற்றிக்கொள்ளும்
'ஆடுகளோடு இருந்தால் ஆடுகளின் வாடைதான் அடிக்கும்' என்று அவர்களுக்குத் தெரியும். ஆக, மகிழ்வாரோடு இருந்தால், தாங்களும் மகிழலாம். மெசியாவோடு இருந்தால் தாங்களும் மீட்கப்படலாம் என புறப்படுகின்றனர். இவர்களின் மகிழ்ச்சி இவர்களோடு முடியவில்லை. அது திருக்குடும்பத்தையும், மற்றும் சுற்றத்தார், நண்பர்களையும் பற்றிக் கொள்கிறது.

6. முடிவெடு - அதை நீயே எடு!
'போவோம் - பார்ப்போம்!' என உடனடியாக முடிவெடுக்கின்றனர் இடையர்கள். 'நாளைக்குப் போவோம்!' 'நாளைக்குப் பார்ப்போம்!' என்று முடிவை தள்ளிப் போடவோ, 'போகவா?' 'வேண்டாமா?' என்று இழுத்துப் பறிக்கவோ இல்லை.

7. முடியாது என்பதை முடியும் எனக் காட்டு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம் மற்றவர்கள் முடியாது என்று சொன்னதை 'முடியும்' என முடித்துக் காட்டினார்கள். இடையர்கள் எப்படி நற்செய்தி அறிவிக்க முடியும்? அது குருக்களின் வேலைதானே - என நினைத்தவர்கள்முன், தாங்களே முதல் திருத்தூதர்களாக வலம் வந்தனர் இடையர்கள்.

8. மேல் நோக்கி பயணம் செய்
மெசியாவைப் பார்க்க வேண்டுமானால், ஆடுகளை விடத்தான் வேண்டும். மெசியாவும் வேண்டும், ஆடுகளும் வேண்டும் என கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற நிலை அறவே கூடாது. மேலானது கைகூடும்போது, தாழ்வானதை விட்டுவிட வேண்டும். மேல் படிக்கட்டில் ஏற வேண்டுமென்றால், கீழ் படிக்கட்டில் இருந்து காலை எடுக்க வேண்டும். எல்லாரிடமும் அன்பு பாராட்ட வேண்டுமென்றால், நம் கோபத்தை விட வேண்டும். கீழிருப்பதை விட்டால்தான் மேலிருப்பது கிடைக்கும் என உணர்ந்தவர்கள் இடையர்கள்.

9. உன் பயணத்தில் கருத்தாயிரு
இன்று நாம் எல்லாரும் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கருத்தாயிருக்கிறோமே தவிர, நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்ப்பதில்லை. பீப் சாங் பாடிய நடிகரை கடிந்து கொள்ளும் நாமே அந்த 'பீப்' வார்த்தையை பயன்படுத்துவதில்லையா? அடுத்தவரின் பாதை எப்படி இருக்கிறது என்று ஆராய நேரம் எடுக்கும் நாம் நம் பாதையை ஆராய்வதற்கு நேரமில்லையே. மேலும், அடுத்தவர்களின் பாதையும், பயணமும் நம் பாதையையும், பயணத்தையும் பாதிக்க கூடாது. ஒரு சிலர் எல்லாரையும்போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆசிரியரைப் பார்த்தால் ஆசிரியராக வேண்டும் போல இருக்கும். டாக்டரைப் பார்த்தால் டாக்டராக வேண்டும் என இருக்கும். இப்படி தினமும் ஆயிரம் ஐடியாக்கள் வந்து போகும். நான் ஒரே ஆளே எல்லாவற்றையும் வாழ முடியாது. என் சிறு வட்டத்தில் நான் எனக்கு சரியெனப்படுவதை ஆய்ந்து வாழ்தல் தான் சால்பு. இடையர்கள் திருக்குடும்பத்தை பார்த்துவிட்டு, தங்கள் வழியில் செல்கின்றனர். மேலும், 'மரியா! நீங்க கவனமாக இருக்கணும். மெசியா பிறந்திருக்காரு! யோசேப்பு, பத்திரமா இருப்பா!' என்று யோசனை எதுவும் சொல்லவில்லை. தங்கள் வியாபாரத்தை மட்டும் பார்க்கின்றனர் இடையர்கள் (மைன்ட யவர் பிசினஸ்).

10. எப்போதும் செயல்படு
நான் டிரைவிங் பழகும்போது எனக்கு சொல்லிக் கொடுத்த சதீஷ், 'ஃபாதர், ப்ரேக்கைப் பார்த்தால் மட்டும் வண்டி நிற்காது. ப்ரேக் போட்டால்தான் வண்டி நிற்கும்!' என்பார். இலக்கு முன் நின்று அம்பு எய்ய வேண்டுமென்றால், இலக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும்போதாது. அம்பை எய்ய வேண்டும். இடையர்களும் தங்களுக்கு செய்தி அறிவிக்கப்பட்டவுடன், குழந்தையைக் காண ஓடுகின்றனர். கண்டவுடன் அதை மற்றவருக்கு அறிவித்துக்கொண்டே வழிநடக்கின்றனர்.

மேலும் சிந்திக்க,

இயேசு நம் அனைவரின் சகோதரர் என்ற அடிப்படையில் மரியாள் நம் ஒவ்வொருவரின் தாய் ஆகிறார் இன்று.

இந்த புதிய ஆண்டை இனிய ஆண்டாக வாழ இறைவனின் தாய் வைக்கும் ஏழு வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுங்க!

வானதூதரின் மங்கள வார்த்தையைக் கேட்ட மரியாவின் முதல் உணர்வு ஆச்சர்யம். 'இது எங்ஙனம் ஆகும்?'  (லூக் 1:34) என்னும் மரியாவின் வார்த்தைகள் அவரின் நம்பிக்கையின்மையில் உதித்த கேள்வி அல்ல. மாறாக, வியப்பில் உதித்த ஆச்சர்யக்குறி. தன்னந்தனியே அமர்ந்திருந்த ஒரு இளவலுக்குத் தோன்றிய தேவதூதன், 'நீ அப்படியாக்கும்! இப்படியாக்கும்! நீ அப்படி இருப்ப! இப்படி இருப்ப!' என அடுக்கிக்கொண்டே போனபோது அந்த இளவல் மௌனமாக ஒரு புன்னகை பூக்கின்றாள். அனைத்தையும் வியந்து பார்க்கின்றாள். நாம் வளர வளர இழந்துபோன ஒரு அற்புதமான உணர்வு 'ஆச்சர்யம்'. இரயில் ஏன் முன்னால போகுது? செடி ஏன் பச்சையா இருக்கு? பஸ் போகும்போது மரங்கள் ஏன் ஓடுகின்றன? அது ஏன்? இது ஏன்? என்று அனைத்தையும் பற்றி கேள்வி கேட்ட நாம் இன்று எதைப்பற்றியும் கேள்வி கேட்க மறுக்கின்றோம். நம் உள்ளத்தில் ஆச்சர்யம் போய் இன்று சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகத்தின் உடன்பிறப்பு எல்லாம் தெரியும் என்ற மனநிலை. 

மரியாள் மாதிரி எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுவோம் இந்த புதிய ஆண்டில்.

'சார், உங்களுக்கு சுகர் இருக்கு!' 'மேடம், உங்க ப்ரஸர் கூடியிருக்கு!' என்று யார் என்ன சொன்னாலும், 'அப்படியா!' என வியந்து பார்ப்போம்.

2. சரண் அடையுங்க!

வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது அவற்றை எதிர்கொள்ள மிகச்சரியான வழி அவற்றிற்குச் சரணாகதி ஆவதே. 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே நிகழட்டும்!' (லூக் 1:38) என சரணடைகின்றார் மரியாள். நாம் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. அல்லது நாம் விரும்பும் விடை இல்லை. ஒரு விடையே அடுத்த கேள்வியாகிவிடுகிறது சில நேரங்களில். விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் நேரம் மற்றும் ஆற்றல் விரயமாகிறது.

'அவன் ஏன் என்னைப் பார்த்து இப்படிச் சொன்னான்?' என்ற கேள்விக்கு நான் விடை தேடத் தொடங்கி, இறுதியில் அப்படிச் சொன்னவனை என்னால் அன்பு செய்ய முடியாமல் போய்விடுகிறது. 'அவன் ஏன் இப்படி இருக்கிறான்?' 'எனக்கேன் இப்படி நடக்கிறது?' 'அவள் நல்லவளா?' 'அடுத்து என்ன நடக்கும்?' 'நான் இப்படி செய்தால் அப்படி இருக்கலாமா?' என கேள்விகள் தவிர்த்து மரியாளின் சரணாகதி மனம் கொள்தல் இரண்டாம் பாடம்.

3. மனிதர்களை நாடி ஓடுங்க!

காலையில் நாம் தொடங்கும் வாழ்க்கை ஓட்டம் இரவு ஆகியும் இன்று முடியாமல் போகிறது. பணம், பொருள், பதவி, புகழ், பெயர் என இவற்றை நாம் தேடி ஓடுகிறோம். ஆனால், நாம் எதைத் தேடி ஓட வேண்டும்? மனிதர்களை அல்லவா.

கபிரியேல் தூதரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மரியாள் நேராக எருசலேம் ஆலயத்திற்கோ, தலைமைக்குரு அல்லது ஆளுநரின் அலுவலகங்களுக்கோ ஓடவில்லை. மாறாக, தன் உறவினரான எலிசபெத்தின் வீட்டை நோக்கி ஓடுகின்றார். ஒரு பிள்ளைத்தாங்கி (பிள்ளைத்தாச்சி) மற்றொரு பிள்ளைத்தாங்கியை நோக்கி ஓடுகின்றார். சென்ற அவர் தன் பெருமை பற்றிப் பேசாமல் எலிசபெத்தை வாழ்த்துகின்றார்.

மனித உறவு மேம்பட மிக முக்கியமான ஒன்று, 'அடுத்தவருக்கும் எனக்கும் எது பொதுவானது' என்று பார்க்கும் மனநிலைதான். 'நான் உன்னைவிட பெரியவன், படித்தவன், தெரிந்தவன்' என்ற நிலையில் வேற்றுமையை மையப்படுத்தி நான் மற்றவரோடு உறவை வளர்க்க முடியாது. 

'நான் மெசியாவின் அம்மாவாக்கும்!' 'நீயோ முன்னோடியின் மகன்தானே!' என்று தன் நிலையை உயர்த்தி, எலிசபெத்து நிலையை தாழ்த்தவில்லை மரியாள். 'உன் நிலையில் நீ பெரியவள்!' என அவருக்கு உரியதை அவருக்கு கொடுக்கின்றார். 'நீயும், நானும் இறைத்திட்டத்தால் வழிநடத்தப்படுபவர்கள்' என்ற பொதுப்பண்பில் மரியாள் எலிசபெத்தோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

மேலும், தன்னை விலக்கி விட நினைத்த யோசேப்பின்மேல் எந்த வெறுப்பும் இல்லாமல் வாழ்கின்றார் மரியா. ஆக, பரந்த உள்ளம் கொண்ட மரியா அனைவரையும் தன் அன்புக் கரத்தால் தழுவிக்கொள்ள நினைக்கின்றார்.

4. பாத்ரூம்லயாவது பாடுங்க!

எலிசபெத்தோடு அன்பு பாராட்டும் மரியாள் தன் உள்ளம் நிறை உணர்வுகளைப் பாடலாக வடிக்கின்றார். 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது' (1:47) என்று பாடுகின்றார் மரியாள். மரியாளின் பாடல் கடவுள் வரலாற்றில் நிகழ்த்திய அனைத்து புரட்டிப் போடுதல்களையும் ஒருசேரப் பதிவு செய்கின்றது. இறுதியாக, 'இஸ்ரயேலுக்குத் துணையாக ஆண்டவர் இருந்து வருகிறார்' என பாடலை நிறைவு செய்கிறார் மரியாள்.

'வாயில் பாடலை ஹம் செய்து கொண்டிருப்பவர்களை சாத்தான் நெருங்காது!' என்பது போர்த்துகீசிய பழமொழி.

பாடல்கள் மற்றும் நமக்கு இசை பிடிக்கக் காரணம் அவைகளுக்கு நம் மனத்தை ஆட்கொள்ளும் திறன் உண்டு என்பதால்தான். பாடலின் ஒற்றைச் சொல் கூட நம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.

இந்தப் புதிய ஆண்டில் நல்லதோ, கெட்டதோ அதைப் பாடலாக பாடிவிடுவோம் - பாத்ரூம்லயாவது!

5. இணைந்து தேடுங்க!

காணாமல் போன 12 வயது இயேசுவை தேடுகின்றார் மரியாள். இந்தத் தேடலில் யோசேப்பும் உடன் நிற்கின்றார். மனித குலத்தின் பெருமுயற்சிகள் எல்லாம் கூட்டு முயற்சிகளே. மூன்று ஞானியர் விண்மீன் வழிகாட்டுதலில் இயேசுவைக் கண்டதும் கூட்டுமுயற்சியாலே.

இன்று நாம் தனிமரங்களாக வாழ நினைக்கின்றோம். நான் யாரையும் சாராதவன், சாராதவள் என்று தன்னந்தனியாக நிற்க நினைக்கின்றோம். ஆனால், அது நம்மால் இயலாத ஒன்று. நாம் இருப்பதே அடுத்தவரின் இருப்பால்தான்.

கணிணியை இயக்கும் ஒரு மென்பொருளின் பெயர் 'உபுந்து.' 'உபுந்து' என்றால் ஸ்வாகிலி மொழியில், 'நான் இருக்கிறேன். ஏனெனில், நாம் இருக்கிறோம்' என்பது பொருள். 'நான்' என்று என்னை அடையாளப்படுத்தக்கூட, 'நீ' அல்லது 'அவர்;' என்ற ஒருவர் தேவைப்படுகிறார்.

இதையே மேலாண்மையியலில், ஒன்றும், ஒன்றும் மூன்று என்றும், ஒருங்கியக்கம் என்றும் சொல்கின்றனர்.

6. தூலிப்ஸ் விதை போல இருங்க!

எல்லா மலர்களுக்கும் விதைகள் உண்டு. ஒவ்வொரு மலரின் விதையும் அந்தந்த மலரை மட்டுமே உருவாக்க முடியும். உங்க கைநிறைய நான் தூலிப்ஸ் விதைகளைக் கொடுத்து, ரோஜா மலர் கொண்டு வாங்க என்று சொன்னால், உங்களால் உருவாக்க முடியுமா? அழுதாலும், புரண்டாலும் தூலிப்ஸ் தூலிப்ஸை மட்டுமே உருவாக்க முடியும். அப்படி இருக்க மனிதர்கள் மட்டும்தான், 'நான் அவரைப்போல இருக்க வேண்டும். இவளைப் போல இருக்க வேண்டும்' என மெனக்கெடுகிறோம்.

'விஜய் வீட்ல இருக்கு, சூர்யா வீட்ல இருக்கு, தனுஷ் வீட்ல இருக்கு, உங்க வீட்ல இருக்கா' என கேட்கும் டேபிள்மேட் விளம்பரம் முதல், நாம் குளிக்கும், துவைக்கும் சோப் வரை நாம் அடுத்தவரைப் போல இருக்க விரும்புகிறோம். 

அவனாக, அவளாக நான் இருக்க முனைந்து கொண்டே கடைசியில் என்னைப்போல இருக்க என்னால் முடியாமல்போய் விடுகிறது.

மரியாள் இறுதி வரை தன்னைப்போல மட்டுமே வாழ்ந்தார்.

'மெசியாவின் தாய்' என்ற புதிய நிலை வந்துவிட்டதால் அவர் உருமாறிவிட விரும்பவும் இல்லை. உருமாறவும் இல்லை.

7. பூக்களிடம் கற்றுக்கொள்ளுங்க!

என்னதான் பூக்கள் அழகாக காலையில் பூத்துக் குலுங்கினாலும் மாலையில் அவை கீழே விழத்தான் வேண்டும். கீழே விழுந்தால்தான் புதிய விதைகளை அவைகள் உருவாக்க முடியும். எனக்கு இந்த காம்பு பிடித்திருக்கிறது என அவைகள் செடிகளையே பற்றிக்கொண்டிருந்தால் அவைகள் வதங்கிவிடும்.

கைகளை விரித்துக் கொடுப்பதுதான் மரியாள் சொல்லும் இறுதிப் பாடம்.

நாம் சேமித்து உழைத்து வாங்கிய ஒரு பைக் அல்லது கார் மேல் ஒரு ஸ்க்ராட்ச் விழுந்து அதை மெக்கானிக்கிடம் எடுத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர் அதை கடா முடா என்று கையாள்வார். அது நமக்கே வலிப்பது போல இருக்கும். ஆனால், நம்மால் என்ன செய்ய முடியும்? என்னதான் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அதை நாம் விடத்தான் வேண்டும். அப்படி விடுவதற்கு தயாராக இருப்பவர்தான் மகிழ்ச்சியை சொந்தமாக்க முடியும்.

கல்வாரியில் தன் மகனை விரித்துக்கொடுக்குமுன், மரியா தன் உள்ளத்திலிருந்து இயேசுவை விரித்துக் கொடுத்தார்.

எடுத்து வைத்தல்போல, விரித்துக் கொடுத்தலும் இனிய செயலே!

இறுதியாக,

இளவல் ஒருத்தி கடற்கரை ஓரம் நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் ஏதோ ஒரு குழந்தை விளையாடுவது போல தெரிந்தது. அந்தக் குழந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். குழந்தை கரையிலிருந்து எதையோ கடலுக்குள் தூக்கிப் போடுவது தெரிந்தது. கரைக்கும் நீருக்குமாய் குழந்தை ஓடிக்கொண்டிருந்தது. அதன் கையில் நட்சத்திர மீன். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்கிறாள் இளவல். 'இந்த நட்சத்திர மீனை கடலில் தூக்கி போடுகிறேன். கரையில் இருந்தால் அது இறந்துவிடும்' என்கிறது குழந்தை. 'கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒதுங்கியிருக்கின்றன. அனைத்தையும் உன்னால் தூக்கிப் போட முடியுமா?' எனக் கேட்கிறாள் இளவல். 'அனைத்தையும் தூக்கிப் போட முடியாதுதான். ஆனால், நான் தூக்கிப்போடும் ஒவ்வொரு மீனும் மீண்டும் வாழ ஆரம்பிக்கிறதே!' என்று சொல்லி தொடர்ந்து கரையை நோக்கி, கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது குழந்தை.

கடலுக்கும், கரைக்கும் நடுவில் நாம் நிற்கிறோம் இன்று.

நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உலகத்தையே மாற்றவில்லை என்றாலும், என்னையும், என் உடனிருப்பவரையும் மாற்றும். பெரிய மாற்றங்கள் சிறியவற்றில்தான் தொடங்குகின்றன.

புத்தாண்டில் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைப்போம். ஒவ்வொரு அடியிலும் அன்னை மரியாள் கற்றுத்தரும் தாய்மை நிரம்பட்டும்.

இத்தாலியன் மொழியில் ஒரு விநோதமான பழமொழி உண்டு:

'உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்து போகட்டும்!' 

வாக்குறுதிகள் எடுக்காத புத்தாண்டு மலரட்டும்!
வாழ்த்துக்களும், செபங்களும்!

5 comments:

  1. இது ஆண்டின் தலைநாள்; இது இயேசு பிறந்த எட்டாம் நாள்; அன்னை மரியாளின் தாய்மையைக் கொண்டாடும் நாள்.இத்தனையும் உள்ளடக்கி தந்தை தந்துள்ள இந்த நீண்ட பதிவுக்கு என் வாழ்த்துக்களும்; நன்றிகளும்.ஆண்டவர் ஆரோனுக்காக மோசேயிடம் கூறிய வார்த்தைகளையே "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக்காப்பாராக!ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தன் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி தருவாராக!".... ஆண்டவர் இப்பதிவின் அனைத்து வாசகர்களுக்காகவும் எடுத்துக்கொள்கிறேன்.புதிய ஆண்டில் நம் மகிழ்ச்சிக்காகத் தந்தை குறிப்பிடும, அத்தனையையும் இல்லாவிடினும் சிலவற்றையாவது வாழ்வாக்க முயற்சிப்போம்.தந்தைக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய,அருள் நிறை புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய ஆண்டு நமக்கு அனைத்து வரங்களையும்,நலன்களையும் அள்ளித்தரும் ஆண்டாய் அமைந்திட வாழ்த்துகிறேன்!!! அன்புடன்......

    ReplyDelete