Friday, December 8, 2017

அலைக்கழிக்கப்பட்டு

நாளைய (9 டிசம்பர் 2017) நற்செய்தி: அலைக்கழிக்கப்பட்டு

மனிதர்களாகிய நம் வாழ்வின் இலக்கு பல நேரங்களில் 'மகிழ்ச்சி' என்று நினைக்கிறோம். ஆனால் மகிழ்ச்சி இல்லாமல் நம்மால் வாழ்ந்துவிட முடியும். ஏனெனில் மகிழ்ச்சி என்பது வெறும் உணர்வுதான். மகிழ்ச்சியையும் தாண்டி நமக்குத் தேவையாக இருப்பது 'அர்த்தம்' அல்லது 'பொருள்.' நான் எதற்காக வாழ்கிறேன்? அல்லது நான் எதற்காக வாழ வேண்டும்? என்ற கேள்விதான் நம்மை வாழவும், சாகவும் வைக்கிறது. இந்த அர்த்தம் தெளிவாக இருந்தால் வாழ்க்கையின் திசை அல்லது போக்கு சரியாக இருக்கும்.

நாளைய நற்செய்தியில் (மத் 9:35, 10:1,6-8) திசையில்லாத மக்கள் பற்றிக் குறிப்பிடுகிறது:
'திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவார்கள்மேல் பரிவுகொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.'

இயேசுவின் பரிவுக்கு மக்களின் இரண்டு பண்புகள் காரணமாகின்றன: ஒன்று, அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இரண்டு, அவர்கள் சோர்ந்து காணப்பட்டார்கள்.

இந்த பண்புகள் நம் வாழ்விலும் சில நேரங்களில் வரலாம்:
ஒன்று, அலைக்கழிக்கப்படுதல். இந்த நிலை நமக்குள்ளிருந்தும் வரலாம். வெளியிலிருந்தும் வரலாம். இன்றைய கன்னியாகுமரி மீனவர் போராட்டத்தை எடுத்துக்கொள்வோமே. அவர்களை இயற்கை ஓக்கி புயலால் வஞ்சித்துவிட்டது. அவர்களின் உயிர்களும், உடைமைகளும், உறவுகளும் காணாமல் போய்விட்டனர். இதற்கு ஏதாவது நிவாரணம் கிடைக்கும் என இவர்கள் அரசிடம் வந்தால் அரசும் இவர்களை வஞ்சிக்கிறது. அந்தப் பக்கம் கடல். இந்தப் பக்கம் கண்டுகொள்ளாத அரசு. நடுவில் வெறுமை. இவற்றில் எங்கு போவது என தெரியாமல் இருக்கும் இவர்களின் அலைக்கழிக்கப்படுதல் வெளியிலிருந்து வருகிறது. சில நேரங்களில் நாம் நமக்குள்ளிருந்தும் அலைக்கழிக்கப்படுகிறோம். நமக்கு முன் உள்ள இரண்டில் நாம் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அந்த தேர்வு நிலை கூட நமக்குள் அலைக்கழித்தலை ஏற்படுத்துகின்றது.

இரண்டு, சோர்வு. அலைக்கழிக்கப்படுதலின் குழந்தை சோர்வு. திசை தெரியாமல் பறக்கின்ற பறவை விரைவில் சோர்ந்துவிடுகிறது. முன்னும் பின்னும் பறப்பதால் அதன் ஆற்றல் குறைந்துவிடுகிறது. நேர்கோட்டில், நேர்திசையில் செல்லும்போது ஆற்றல் மிஞ்சுகிறது.

இன்று, என் வாழ்வில் அலைக்கழிக்கப்படுதல் மற்றும் சோர்வு எப்போதெல்லாம் இருக்கிறது?
என் வாழ்வில் எனக்கு திசையாக இருப்பது எது? நான் எதை நோக்கிப் பயணிக்கிறேன்?
அர்த்தம் இல்லாமல் அல்லது அர்த்தம் இழந்து நிற்பவரைக் கண்டு என் உள்ளத்தில் பரிவு எழுகிறதா?

1 comment:

  1. " திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயனில்லா ஆடுகள் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்." இந்த வரிகள் ஒவ்வொரு முறை என் கண்களில் படும்போதும்,செவிகளில் விழும்போதும் என் நெஞ்சம் கொஞ்சம் நெகிழ்ந்து போவது நிஜம்..ஒரவருக்கு " நமக்காக யாருமே இல்லை" எனும் விரக்தி வருகையில் அவரில் அலைக்கழிக்கப்படும் உணர்வும்,சோர்வும் ஒருசேரப் பொங்கி எழுவது நிஜம்.இந்த நிஜத்தைக் கன்னியாகுமரி மீனவர் போராட்டத்தின் துணைகொண்டு நம் கண்கள் நனையுமளவுக்கு விவரிக்கிறார் தந்தை.இந்த உணர்வை நாம் அனுபவிக்கும் போதுதான் அவ்வலியின் வீரியம் புரிகிறது.என் அலைக்கழிப்பின் போது நான் உணரும் சோகத்தைக்,கசப்பை மறந்து எனக்கதிரே அதே நிலையில் இருப்பவருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால் நாமும் "பரிவ" எனும் "ஈரத்தின்" அர்த்தம் புரிந்து கொள்ளலாம்.நம்மில் உறங்கிக்கொண்டிருக்கும் சில முக்கியமான உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தந்தைக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.!!!

    ReplyDelete