Sunday, November 10, 2013

தம் மகனைத் தூக்கிச் செல்வது போல

ஆனால் நான் உங்களுக்குச் சொன்னேன்: 'நீங்கள் கலக்கமுற வேண்டாம். அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம். பாலைநிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தம் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே! (இணைச்சட்டம் 1:29,31)

இணைச்சட்ட நூலிற்கும், இதற்கு முந்தைய நான்கு நூல்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், இணைச்சட்ட நூல், 'இவை மோசேயின் வார்த்தைகள்' எனத் தொடங்குகிறது. யாவே இறைவனின் வழிநடத்துதல் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இனி முழுப்பொறுப்பும் மோசேயின் மேல்தான். 

பொறுப்பை ஏற்கின்ற மோசே கானான் நாட்டை உளவு பார்க்க ஒரு குழுவை அனுப்புகின்றார். சென்று திரும்புகின்ற குழுவினர் 'முடியவே முடியாது. நம்மால் கானான் நாட்டை உரிமையாக்க முடியாது. அங்கிருப்பவர்கள் அனைவரும் பலம் வாய்ந்தவர்கள்' எனப் பின்வாங்குகின்றனர். யோசுவா மட்டுமே 'முடியும்!' என்ற செய்தியைக் கொண்டுவருகின்றார். 

ஆண்டவரின் வார்த்தை அந்நேரம் மோசேக்கு அருளப்படுகின்றது. 'ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல' என்ற உருவகத்தின் வழியாக தன் வழிநடத்துதலை அவர்களுக்கு நினைவூட்டுகின்றார் இறைவன். நாம் பல இடங்களில் பார்த்திருக்கும் 'FOOTPRINTS' என்ற ஓவியத்தின், கவிதை வரிகளின் பின்புலம் இந்த உருவகம்தான்.

'இதுவரைக் காத்து வந்த இறைவன் இனியும் காப்பார்' என்ற நம்பிக்கை கொண்ட யோசுவாவின் மனநிலையை வாழ்த்துகின்றார் இறைவன். 

இதுவரை காத்த கிருபை இன்னும் வழிகாட்டும் என்ற நம்பிக்கை நம் வாழ்விலும் சில நேரங்களில் தளர்ந்துவிடத்தானே செய்கின்றது!

1 comment:

  1. Anonymous11/10/2013

    நம்மோடு நடந்து வரும் நம் இறைவனின் 'பாதச்சுவடுகள்'......எனக்கு மிகவும் பிடித்த இந்த பகுதியை படத்தோடு கூட சொல்லியிருக்கும் விதம் அழகு.'இதுவரை காத்த தேவன் இனியும் காப்பார்'.....யாராலும் மறுக்க முடியாத இந்த உண்மையை இறுதி வரிகளில் இன்னும் கொஞ்சம ஆணித்தரமாகக் கூறியிருக்களாமே! உங்களுக்கு என் ஞாயிறு வாழ்த்துக்கள்.

    ReplyDelete