Tuesday, November 19, 2013

மதில் இடிந்து விழுந்தது!

ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், 'இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார்' என்றார். ... ... மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். (யோசுவா 6:15-16,20)

'எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்...' என்ற பாடல் வரி தான் இன்று நம் நினைவிற்கு வருகிறது. யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எரிகோவில் குடிபுகத் தொடங்குகின்றனர். எரிகோ பூமிப்பந்திலேயே மிகவும் பழைமை வாய்ந்த மக்கள் வாழ்விடம் எனச் சொல்கின்றனர் தொல்லியல் நிபுணர்கள். ஏறக்குறைய 21 புதிய குடியேற்றங்கள் நடந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் பூமிப்பந்தின் மிகவும் தாழ்வான இடமும் இதுதான். இங்குதான் சாக்கடல் அமைந்துள்ளது. பூமித்தாயின் கன்னத்தில் விழுந்த குழி என்று இதைச் சொல்லலாம். நம் ஊரில் யாராவது சிரிக்கும் போது குழி விழுந்தால் 'பணக்குழி' என்பார்கள். எரிகோவிற்கு இது நன்றாகவே பொருந்தும். பண்டைக்கால இஸ்ரயேலின் பணக்குழி இதுதான். 

மற்றொரு பக்கம் எரிகோவிற்கு ஒரு கெட்ட பெயரும் இருந்தது. எரிகோ அந்தக்காலத்தில் தீமைகளின் உருவாக இருந்ததாம். மேலும் எருசலேமிலிருந்து இது மிகவும் தாழ்வாக அமைந்திருந்தது. ஆகையால் யாரையாவது 'கெட்ட வார்த்தையில்' பேச வேண்டுமென்றால் 'நீயெல்லாம் எரிகோவிற்குத்தான் போவாய்' எனச் சொல்வார்களாம்.

வாக்களிக்கப்பட்ட நாடு மிகவும் தாழ்வான பகுதியிலிருந்தே தொடங்குகிறது. இறைவன் தாழ்வானவர்களின் பக்கம் என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு.

நம் வாழ்வில் நாம் தாழ்வாக இருக்கும் தருணங்களில் நம் தளர வேண்டாம். நம்மிலிருந்துதான் வாக்களிக்கப்பட்ட நாடு தொடங்குகிறது!

No comments:

Post a Comment