Wednesday, November 6, 2013

உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வர்களிடமும் சொல். நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:

'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள்பொழிவாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!'

(எண்ணிக்கை நூல் 6:22-26)

லேவியர் நூலுக்கு அடுத்ததாக இருக்கும் எண்ணிக்கை நூல் 'எண்ணிக்கை' என்ற பெயர் பெறுவதற்குக் காரணம் இந்த நூலில் இஸ்ரயேல் மக்கள் இருமுறை எண்ணப்படுகின்றனர். அதாவது கணக்கெடுக்கப்படுகின்றனர். 'எண்ணிக்கை' என்பதன் அர்த்தம்: 'நீங்கள் மதிப்பிற்குரியவர்கள்!'. நாம் எண்ணுகிறோம் என நினைத்தவுடன் நம் மனதிற்குள் வருவது நாம் மதிப்பாக வைத்திருக்கும் ஒரு பொருள்தான்: அது பணமாக இருக்கலாம். ஆடைகளாக இருக்கலாம். ஆபரணங்களாக இருக்கலாம். நாம் இவற்றையெல்லாம் அடிக்கடி எண்ணிப்பார்க்கிறோம். எண்ணிப்பார்ப்பதால் அவற்றின் மதிப்பு நமக்குத் தெரிகின்றது. அவற்றின் மதிப்பு தெரிவதால் நாம் எண்ணிப்பார்க்கின்றோம். கடவுள் இஸ்ரயேல் மக்களை எண்ணிப்பார்க்கின்றார். அவருக்கு அவர்களின் எண்ணிக்கை தெரியாது என்பது அல்ல. மாறாக, இஸ்ரயேல் மக்களின் மதிப்பை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே அவர் அவ்வாறு செய்கின்றார். 

'உங்கள் தலைமுடி ஒவ்வொன்றும் எண்ணப்பட்டுள்ளது' என்று இயேசு சொல்வதும் இறைவன் நம்மேல் கொண்ட அக்கறையையும், அவரின் பார்வையில் நமக்குள்ள மதிப்பையுமே காட்டுகிறது. 

இஸ்ரயேலுக்கு ஆரோனும் அவரின் புதல்வர்களாகிய குருக்களும் எவ்வாறு ஆசி வழங்க வேண்டும் என்று இறைவன் அவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த முவ்வகை ஆசியுரையே நாம் புத்தாண்டுத் திருப்பலியின் நிறைவில் பெறுகின்றோம்.

முதல் ஆசி: பாதுகாப்பு. 'காப்பாராக!' என்ற வினைச்சொல் இறைவன் தரும் பாதுகாப்பை உணர்த்துகின்றது. நம் தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த நாள்முதல் நாம் உணரும் ஒரு உணர்வு 'பாதுகாப்பின்மை'. 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற கேள்வியே இந்தப் பாதுகாப்பின்மைக்குக் காரணம். நம் முன்னால் எப்போதும் ஒரு திரை இருந்து கொண்டே இருக்கின்றது. திரைக்குப் பின் என்ன இருக்கும் என்பதை நாம் அறியோம். 'திரைக்குப் பின் என்ன இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அந்தத் திரையைப் பிடித்திருப்பவன் நான். கவலைப்படாதே!' என்கிறார் இறைவன்.

இரண்டாம் ஆசி: அருள். டொரினோ விளம்பரத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் இவை: 'இறையருள் பெறுக!' என்னவொரு வித்தியாசமான சிந்தனை. வியாபார நோக்கத்தையெல்லாம் விடுத்து எல்லா மக்களையும் தொடுகின்ற வார்த்தைகள்தாம் இவை. அவரின் அருள் பெற்றவரே இவ்வுலக இருளில் வாழ முடியும். நம் வாழ்வின் எதார்த்தங்கள் இருளாய் இருக்கும்போதெல்லாம் ஒளி தருவது அவரின் அருளே.

மூன்றாம் ஆசி: அமைதி. நாம் செய்யும் வேலை, படிக்கும் படிப்பு, மேற்கொள்ளும் பயணம், நம் வாழ்வின் அனைத்துச் செயல்களின் நோக்கம் இந்த ஒற்றைச்சொல் தான்: அமைதி. உயிர்த்த ஆண்டவரும் தம் சீடர்களுக்குக் கொடையாக 'அமைதி'யையே வழங்குகின்றார். கடந்த காலக்காயங்களையும், எதிர்கால ஏக்கங்கங்களையும் விடுத்து இன்றில் நாம் வாழும்போதே அமைதி பெறுகிறோம்.

பாதுகாப்பு, அருள், அமைதி - இந்த மூன்றையும் இறைவன் நமக்கு ஆசியாக வழங்கி இருக்கின்றார்.  நாமும் அவற்றை ஆசியாகப் பிறருக்கு வழங்குவோம்.

ஒருவரையொருவர் வாயார வாழ்த்துவோம்! ஆசி கூறுவோம்!

No comments:

Post a Comment