Friday, November 15, 2013

விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர்

நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், 'நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்' என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர். சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது. (யோசுவா 2:1-2)

யோசுவாவின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் இஸ்ரயேல் மக்களின் பயணம் தொடர்கிறது. வாக்களிக்கப்பட்ட நாடு என்று சொல்லப்படும் இடத்திலெல்லாம் 'பாலும் தேனும் பொழியும் நாடு' என்று சொல்லப்படுகிறதே அதன் பொருள் என்ன தெரியுமா? 'பாலும் தேனும் பொழியும்' என்றால் எங்கும் பாலும், தேனும் ஓடிக்கொண்டிருக்கும் என்பதல்ல. 'பாலும் தேனும்' என்பது 'அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்' என்பதன் உருவகம். நாடும், நாட்டின் மக்களும், கால்நடைகளும் அழிக்கப்படும். அழிவு ஏற்பட்டு தரைமட்டமான இடத்தில் புல்வெளி உண்டாகும். மலர்கள் பூக்கும். புல்வெளியில் பசுமாடுகள் மேயும். பூக்களில் தேனீக்கள் அமரும். அங்கே பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடும். இப்படியாக யாவே இறைவன் 'அனைத்தையும் புதியனவாக்குவார்' என்பதை 'பாலும் தேனும்' என்ற உருவகம் முன்வைக்கின்றது.

யோசுவாவின் முதல் இலட்சியம் 'எரிக்கோ' நகரம். இந்த எரிக்கோ நகருக்குள் உளவு பார்க்க இரண்ட ஒற்றர்களை அனுப்புகிறார் யோசுவா. ஒற்றர்கள் நேரே விலைமாதின் வீட்டிற்குள் செல்கின்றனர். வேவு பார்க்கச் செல்பவர்கள் ஏன் விலைமாதின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்? பழைய ஏற்பாட்டுக் காலத்தில் விலைமாதர்கள்தாம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்று கருதப்பட்டனர். 'அவர்களுக்கு எப்படி எல்லாம் தெரியும்?' ஏனெனில் அங்குதான் பல ஆண்கள், குறிப்பாக, ஆட்சிப்பீடத்தில் இருக்கின்ற ஆட்கள் வந்து போவார்கள். ஆகையால்தான் ஒற்றர்கள் விலைமாதின் வீட்டைத் தேடிச் செல்கின்றனர்.

வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் பயணம் முதலில் விலைமாதின் வீட்டில் தொடங்குகிறது என்று நினைக்கக் கொஞ்சம் நெருடலாக இருக்கின்றதா? விலைமாதர்கள் என்றால் யார்? 

நம் இந்திய மரபில் தேவதாசி என்ற அமைப்பு இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். இறைவனுக்காக, இறைவனின் ஆலயத்திற்காக என்று சில பெண்களை நேர்ந்து விடுவார்கள். அந்தப் பெண்களை ஆண்கள் தங்கள் உறவுக்குப் பயன்படுத்துவார்கள். இது எப்படியோ நிறுத்தப்பட்டு விட்டது. நல்லது! பெண்களை வெறும் உபயோகப் பொருளாகப் பார்த்த இந்த மரபு மாறியது நல்லதே!

சமூகம் மற்றும் அதன் அடிப்படை அலகு என்ன என ஆய்வு செய்கின்ற சமூகவியல் அறிஞர்கள் 'குடும்பம்' என்பதை அடிப்படை அலகாகக் காண்கின்றனர். ஒரு குடும்பம் ஒரு சமூகத்தில் எந்த அளவிற்குத் தொன்மையானதோ அதே அளவிற்கு விபச்சாரம் (prostitution) அல்லது 'செக்ஸ்-லேபர்' (sex labour) என்பதும் தொன்மையானது. குடும்பம் என்ற நிறுவனத்தைக் கட்டிக் காப்பதே 'விபச்சாரம்' தான். Please wait. Let me explain. ஆதம்ஸ் என்ற சமூகவியல் அறிஞரின் கூற்று இது. அவர் தரும் விளக்கம் இதுதான். 'Men are polygamous by nature'. 'தங்கள் இயல்பிலேயே ஆண்கள் (பொதுவாக!) பலதார மணம் செய்யும் தூண்டுதல் உள்ளவர்கள்'. விலங்குகளின் வாழ்க்கை முறையையும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இணைப்புக் கோடாக இருக்கும் ஒராங்கொட்டான் குரங்கு வகையை ஆய்வு செய்யும் அவர் இதே இயல்பு அவைகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். ஒரு ஆண் குரங்கு பல பெண் குரங்குகளைத் தன்னிடம் ஈர்க்கும் திறன் கொண்டது என்றும் இதே திறன் மனிதர்களிடம் இருந்தாலும் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், சமயம் போன்று கட்டுப்பாடுகளால் தான் அவர்கள் ஒருதார மணம்  (monogamous) செய்யும் தூண்டுதல் கொண்டவர்களாகவும் மாறுகின்றனர் எனவும் முடிக்கின்றார். இவரின் கூற்றுப்படி பலதார மணம் கொள்ள முடியாத ஆண் 'செக்ஸ்-தொழில்' வழியாக அந்த ஆசையை நிறைவு செய்து கொண்டு, தன் குடும்பத்தை, தன் ஒருதாரத்தை பேணிக்காக்கின்றான் ஆகவே விலைமாதர்கள் குடும்பம் என்ற நிறுவனம் சீராக இயங்க, சமூகம் என்ற எந்திரம் சீராக இயங்க உதவி செய்கிறார்கள் - அன்றும், இன்றும்.

இந்தக் கூற்று ஒருபோதும் 'செக்ஸ்-தொழிலை' நியாயப்படுத்த முடியாது என்பதையும் நான் இங்கு பதிவு செய்கிறேன்.

இப்போது நம் எரிக்கோ நகர் ராகாபைப் பார்ப்போம். 'ராகாபு' என்றால் எபிரேயத்திலும், அராமேயத்திலும் 'அகன்றது' (wide) என்றும் 'தெரு' (street) என்றும் பொருள். 'அகன்றது' என்பது செக்ஸிஸ்ட் வார்த்தையாகவும், 'தெரு' என்பது காரணப்பெயராகவும் (யார் வேண்டுமானாலும் போகலாம்!) பயன்படுத்தப்படுகிறது. 'ராகாபு' என்ற வார்த்தை விலைமாதர்கள் மேல் பண்டைக்கால கிழக்கத்திய நாடு கொண்ட 'கிண்டலை'க் குறிக்கின்றது. ராகாபு என்பதுதான் விலைமாதரின் பெயரா அல்லது எல்லா விலைமாதர்களும் 'ராகாபு' என code word-ல் அழைக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. 

இன்றும் 'அயிட்டம், கேஸ், சிலுக்குமாக்கி' என்று விலைமகளிரை cord word-ல் திரைப்படங்கள் சொல்லக் கேட்கும்போது மனம் வலிக்கிறது. செக்ஸையும் ஒரு தொழிலாக அரசு அங்கீகரித்தாலும் இது ஒரு 'exploitation', 'social evil' என்றே நம் மனம் சொல்கிறது.

வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் இஸ்ரயேல் மக்களின் பயணம் ஒரு பெண் வழியாகவே தொடங்குகிறது. பெண் இயல்பிலேயே வாழ்வு கொடுப்பவள். ஒரு பெண்ணை நல்லவள் என்று உலகம் புகழ்ந்தாலும், கெட்டவள் என்று வெறுத்து ஒதுக்கினாலும் அவளால் பிறருக்கு எப்போதுமே வாழ்வுதான். பெண் தானே விரும்பி யாருக்கும் தீமை நினைப்பதில்லை. மற்றவர்களின் செயலால்தான் அவள் அந்த நிலைக்கு ஒரு சில நேரங்களில் தள்ளப்படுகிறாள். இன்று கடவுள் படைப்பின் பலவீனம் எனச் சொல்லப்படும் பெண்ணை தன் பணிக்காகத் தெரிவு செய்கின்றார். பெண்ணின் வழியே இஸ்ரயேலரின் பயணம் தொடரப்போகின்றது. 

பெண் எத்தனையோ நிலைகளில் நம் முன் வந்து போகின்றாள்: தாயாக, தங்கையாக, அக்காவாக, மகளாக, தோழியாக, காதலியாக. அவள் தண்ணீர் போன்றவள். எந்த உருவில் தங்குகிறாளோ அந்த உருவாகவே மாறிவிடுகிறாள். தொட்டால் தண்ணீரைப் போலவே நெகிழக் கூடியவள். தீண்டினால் ஹெயான் போல அழிக்கக் கூடியவள்.

இறைவன் யாரையும் தன் திட்டத்திற்குப் பயன்படுத்தலாம். நாம் பலவீனர்கள் என்று நாம் நினைத்தாலும், நாம் கெட்டவர்கள் என மற்றவர்கள் நினைத்தாலும் ராகாபை நினைத்துக் கொள்வோம். நாமும் 'பாலும், தேனும்' பொழியும் நாட்டிற்கு மற்றவர்களை அழைத்துச் செல்ல முடியும்!


1 comment:

  1. Anonymous11/15/2013

    என்னதான் விளக்கம் கொடுப்பினும் "குடும்பம் என்ற ஸ்தாபனத்தைக் கட்டிக்
    காப்பதே விபச்சாரம்ன் தான்''...கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது.ஆயினும் ரசிக்கும்படியான விஷயங்களும் நிறைய இருந்தன.''பாலும் தேனும்'' என்பதற்கான விளக்கம் புதுமையாக இருந்தது.சக்கேயுவில் தொடங்கி இறைவன் பலவீனர்களை அதிலும் குறிப்பாகப் பெண்களைத் தன் பணிக்காகத தெரிவு செய்கிறார் என்ற தகவல் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.தங்களின் அத்தனை முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete