Tuesday, November 19, 2013

ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்?

இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவை பற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவரின் சினம் மூண்டது ... ... யோசுவா, 'ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார்' என்றார். (யோசுவா 7:1,25)

இஸ்ரயேல் மக்கள் எரிகோவைக் கைப்பற்றும்போது அந்நகரில் உள்ள அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்றும் எதையும் அவர்கள் கவர்ந்து கொள்ளக் கூடாது என்பதும் யாவே இறைவன் அவர்களுக்கு அளித்த கட்டளை. 'இந்த மக்கள் தன் பராமரிப்பின் மேல் நம்பிக்கை கொள்கிறார்களா? அல்லது தங்கள் பாதுகாப்பிற்கென தாங்களே சம்பாதிக்க (திருடிக்கொள்ள) நினைக்கிறார்களா?' என்ற யாவேயின் திருவிளையாடலே இது. ஆக்கான் என்ற ஒருவன் மட்டும் ஓர் அழகான மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் தனக்கென எடுத்துக் கொள்கிறான். இது ஆண்டவருக்குக் கோபத்தை வருவிக்கின்றது. எமோரியருடன் நடக்கும் போரில் இஸ்ரயேல் மக்களைத் தோல்வியடையச் செய்கின்றார் இறைவன்.

ஒருவரின் புண்ணியம் அவரைச் சார்ந்தவருக்கும் புண்ணியம் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே போல ஒருவரின் பாவமும் அவரைச் சார்ந்தவருக்கும் பாவமாக மாறுகிறது. ஒரு தனி மனிதனின் பாவம் அவனைச் சார்ந்த இஸ்ரயேல் இனத்திற்கே அழிவைக் கொண்டு வருகின்றது. மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு வலைப்பின்னலாய் ஒருவர் மற்றவரோடு இணைந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அப்படித்தான் பின்னப்பட்டுள்ளது. 'நீ உன் சுன்டு விரலை நகர்த்தும்போது எங்கோ தூரத்தில் உள்ள நட்சத்திரத்தையும் நகர்த்துகின்றாய்' என்கிறது டாவோ மதம். அந்த அளவிற்கு நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்துள்ளோம். ஒரு மரத்தில் பட்டுப்போன ஒரு கிளை அதையொட்டிய மற்ற கிளைகளையும் பட்டுப்போகச் செய்கின்றது. ஆகையால் நல்லவராய் இருப்பது நமக்கு மட்டும் நல்லதன்று. நம்மைச் சார்ந்த அனைவருக்குமே நன்று.

இரண்டாவதாக, ஆக்கான் எதற்காகத் திருடியிருக்க வேண்டும்? ஆசை! என்ன ஆசை? மற்றவர்களைவிட தான் மேலானவனாய் இருக்க வேண்டும் என்ற ஆசை! 'திருட்டு' ஒரு நோயல்ல. அது ஆசை என்ற நோயின் அறிகுறி. தான் மற்றவரைவிட அதிகம் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கொண்டிருத்தலுக்காக என்னவும் செய்வேன் என்ற நோயே திருட்டு என்ற அறிகுறியாக வெளிப்படுகின்றது. 'நம்மைச் சாராத ஒன்றை நாம் எடுத்துக்கொள்ள நினைக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம் திருடத்தான் செய்கின்றோம்!'. திருட்டு என்பது வெறும் பணத்தையோ, பொருளையோ திருடுவது மட்டுமல்ல. திருட்டிற்குப் பல முகங்கள் உண்டு. மற்றவர்களின் நேரத்தை நாம் திருடுகிறோம். மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதன் வழியாக அவர்களின் மகிழ்ச்சியைத் திருடுகிறோம். மற்றவர்கள் தங்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று அவர்களைக் கைப்பாவையாக நினைக்கும்போது அவர்களின் சொந்த ஆளுமையைத் திருடுகிறோம். 'அவரவர்க்குரியதை அவரவருக்கென விட்டுக்கொடுக்கும் பரந்த மனம்' வந்தால் திருட்டு மறைந்து விடும்.

மூன்றாவதாக, 'நீ தொல்லை வருவித்தாய்?' என்று ஆக்கானைச் சாடுகின்றார் யோசுவா. 'நீ ஒரு பெரிய தொல்லை!' என நாம் ஒரு சில நேரங்களில் மற்றவர்களையும், மற்றவைகளையும் கடிந்து கொள்வதுண்டு. 'நீ என் மகிழ்ச்சியாய் இருக்கிறாய்!' என்ற நிலைப்பாடு ஒரு சில நேரங்களில் 'நீ என் தொல்லையாக இருக்கிறாய்!' என்று மாறும்போது அங்கே அந்த மாற்றம் வர யார் காரணம் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். இங்கு ஆக்கான் தான் காரணம். ஆனால் நம் உறவுகளில் பல நேரங்களில் இதைச் சொல்பவரே காரணமாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

'ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்?'

No comments:

Post a Comment