Monday, November 25, 2013

ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?

தெபோரா பாராக்கிடம், 'எழுந்திரும். இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?' என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறைவாக்கினர். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். (நீதித் தலைவர்கள் 4:14)

இஸ்ரயேல் மக்களை வழிநடத்துவதாகச் சொல்லப்படும் முதல் நீதித் தலைவர் ஒரு பெண். ஆம். தெபோரா. தெபோராவும் பாராக்கும் இணைந்து சீசராவை எதிர்கொள்கின்றனர். சீசரா என்பவனின் பலம் அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அந்தக் காலத்தில் இரும்புத் தேர்கள் என்பவை இந்தக் காலத்து அணு ஆயுதங்கள் போன்றவை. இஸ்ரயேல் மக்களிடம் எந்த ஆயுதமும் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்கிறது தொல்பொருள் ஆராய்ச்சி. ஏனெனில் சவுலின் காலத்திலேயே ஒட்டுமொத்த இஸ்ரயேல் நாட்டில் வெறும் இரண்டு வாள்கள் மட்டும் தான் இருந்தன என்கிறது விவிலியம்: ஒரு வாள் சவுலிடமும் மற்றொரு வாள் அவரது மகன் யோனத்தானிடமும்.

நீதித் தலைவர்கள் காலத்தில் வெறும் வேற்கம்புகளை நம்பித்தான் இஸ்ரயேல் மக்கள் போருக்குச் சென்றிருந்திருக்க வேண்டும். வேற்கம்புகளுக்கு முன்னால் இரும்புத் தேர்களா? 

அணுஆயுதங்களுக்கு முன் வெறும் விளக்கமாறுகள் என்ன செய்ய முடியும்? இறைவன் துணையிருந்தால் எல்லாம் சாத்தியம் என்கிறது இன்றைய தெபோராவின் வார்த்தைகள். 

ஆபத்துக்கள் நம்மைச் சூழும்போது அரண்டு போய்விட வேண்டாம்.

'ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?'

No comments:

Post a Comment