Sunday, February 28, 2021

எந்த அளவையால்

இன்றைய (1 மார்ச் 2021) நற்செய்தி (லூக் 6:36-38)

எந்த அளவையால்

'நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' என்கிறார் இயேசு.

வாழ்க்கையின் எதார்த்தம் பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை. இல்லையா?

'ஒரு தந்தையும் இரு மகன்களும்' (லூக் 15) எடுத்துக்காட்டில், இளைய மகன் தன் தந்தையின் சொத்துகளை அழிக்கிறார். ஆனால், தந்தை அதே அளவையால் அவரை அளக்கவில்லை. வெற்று அளவையாய் வந்தவனின் அளவையை நிரப்பி அமுக்கிக் குலுக்கி சரிந்து விழுமாறு செய்கிறார்.

'விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு' ஏற்ற மோசேயின் அளவை 'கல்லால் எறிந்து கொல்லுதல்' என்றாலும், இயேசு ஒரு மாற்று அளவையையே பயன்படுத்துகிறார்.

தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை, அதே அளவையால் அளக்கவில்லை நம் ஆண்டவர்.

இன்றைய நற்செய்தியில் வரும் 'அளவை' என்ற வார்த்தையை 'இரக்கம்' என்ற வார்த்தையோடு இணைத்துப் பார்த்தால் மேற்காணும் குழப்பங்கள் நமக்கு எழாது.

கடவுளின் அளவையின் பெயர் இரக்கம். அந்த ஒரே அளவையால்தான் அவர் அனைவரையும் அளக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இறைவாக்கினர், 'நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு' என்று ஆண்டவராகிய கடவுளிடம் சரணடைகின்றார்.

இதையே இயேசு, 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்' என்கிறார்.

இந்த இரக்கம் எப்படி வெளிப்பட வேண்டும்?

யாரையும் தீர்ப்பளிக்காமல் இருப்பதில் ...

மற்றவர்களைக் கண்டனம் செய்யாமல் இருப்பதில் ...

மன்னிப்பதில் ...

நேரத்தை, ஆற்றலைக் கொடுப்பதில் ...

திருப்பாடல் ஆசிரியரும் (திபா 79), 'ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்!' என்கிறார்.

அவர் நம்மை நம் பாவங்களுக்கு ஏற்ப நடத்தாதபோது, நாம் ஏன் ஒருவர் மற்றவரை அவர்களின் பாவங்களுக்கு ஏற்ப நடத்த வேண்டும்.

2 comments:

  1. தவக்காலத்திற்கு ஏற்றதொரு பதிவு.நம்முடைய ‘அளவை’ எனும் வார்த்தை “கண்ணுக்குக் கண்”...:” பல்லுக்குப்பல்” எனத்தோன்றினாலும் இறைவனின் அகராதியில் அது “ “இரக்கம்” எனப்பொருள்படுகிறது.

    நம் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல் நாமும் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதோ தந்தையின் அறிவுறைகள்....யாரையும் தீர்ப்புக்கோ,கண்டனத்திற்கோ ஆளாக்காமல் இருப்பதில்... மன்னிப்பதில்... நேரத்தை,ஆற்றலைக,கொடுப்பதில்.....

    இத்தனையும் நான் செய்வேனாயின் உயிர்ப்பு ஞாயிறு எனக்கும் பொருள் தரும்.

    நம் பாவங்களை நினையாத தேவனைப்போல் நாமும் அடுத்தவரைத் தண்டிப்பதை மறப்போமே!

    “ ஆண்டவரே! எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்!”

    அர்த்தமுள்ள ஒரு தவக்காலத்தை வடித்துக்கொடுக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. அவர் நம்மை நம் பாவங்களுக்கு ஏற்ப நடத்தாதபோது, நாம் ஏன் ஒருவர் மற்றவரை அவர்களின் பாவங்களுக்கு ஏற்ப நடத்த வேண்டும்?

    ஏதார்த்தமான கேள்வி.

    பதிவு 👍

    ReplyDelete