Thursday, June 30, 2016

நீதிமொழிகள் - 13

'நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்.
நாவைக் காவாதவன் கெட்டழிவான்.'
(நீமொ 13:3)

'நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவுபெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுபடுத்த வல்லவர்கள்' (யாக் 3:3) என்றும் 'ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை...' (யாக் 3:8) என்றும் நாவடக்கம் பற்றி எழுதுகின்றார் திருத்தூதர் யாக்கோபு.

'வாக்குச் சுத்தம் நாக்குச் சுத்தம்' என்பார்கள்.

அதாவது, நாக்கினால் சொல்வதை நாம் செய்து முடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, தேவையற்றதைப் பேசுவதிலிருந்து நாக்கிற்கு தடை விதிக்க வேண்டும்.

இன்று நாக்கு என்பது வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், செல்ஃபோன் என நீட்சியாகிவிட்டது. யாரும் யாரையும் பற்றி, எதையும் பற்றி, என்னவும் பேசலாம். இந்தப் பேச்சிற்கு யாரும் பொறுப்பாளி கிடையாது. எனக்கு ஏன் அந்த செய்தியை அனுப்பினாய்? என்று நண்பனிடம் கேட்டால், 'எனக்கு வந்தது. உனக்கு அனுப்பினேன்' என நிறுத்திக் கொள்வான். ஆக, நண்பனிடமிருந்து வரும் செய்திக்கு நண்பன் பொறுப்பு கிடையாது. ஆக, பொறுப்பில்லாமல் பேசும் ஒரு கலாச்சாரத்தை இன்று நாம் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். அல்லது அந்தக் கலாச்சாரத்தில் நாம் வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாவினால் நாம் கடவுளுக்கும், மற்றவருக்கும் வாக்குறுதி கொடுக்கிறோம்.

இந்த நாவினால் கடவுளைப் புகழ்கிறோம். மற்றவர்களை இகழ்கிறோம்.

'ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?' எனக் கேள்வி எழுப்புகிறார் யாக்கோபு.

'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு' (குறள் 127) என்கிறார் வள்ளுவர்.

('ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகி விடும்')

தீய சொல், தேவையற்ற சொல், புறங்கூறும் சொல் தவிர்த்தல் நாவிற்கும் நமக்கும் நலம்!

இன்னும் சொல்வேன்...

2 comments:

  1. எக்காலத்திற்கும்,எல்லாத் தலைமுறையினருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பதிவு. ஒரு கூரான கத்திக்கிணையாக நம் நாக்கினால் ஒருவரைக் குத்த முடியும்; ஏன் கொலையும் செய்ய முடியும்.கடவுளைப் புகழ நாம் பயன்படுத்தும் நாவால் எப்படி அடுத்தவரை இகழ முடியும்? நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான்." ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும்,உவர்நீரும் சுரக்க முடியுமா?" இதற்கு நாம் சரியான பதில் தரமுடியுமெனில் நாம் நம் நாவைக் காத்தவர்களாவோம்." தீய சொல்,தேவையற்ற சொல்,புறங்கூறும் சொல் தவிர்த்தல் நாவிற்கும் நமக்கும் நலம்." எலும்பில்லாத நாக்கைக் காத்துக்கொள்ளும் முறை பற்றித் திருவள்ளுவரின் துணையோடு உரக்கக் கூறிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Tongue is like a fire... thanks Fr for the reflection...

    ReplyDelete