Wednesday, June 29, 2016

நீதிமொழிகள் - 12

'கவலை இல்லாமல் வாழ்வது எப்படி?' என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர், அந்தப் புத்தகத்தை எப்படி விற்பது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

கவலை - நம் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு உணர்வு.

உள்ளம் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும் என்று நாம் நம்மையே உசுப்பேத்திவிட்டு சிரித்தாலும், நாம் தனியாக இருக்கும் அந்தக் கவலை நம் முன்னால் வந்து நம் கன்னத்தில் அறையும்.

இத்தாலியனில் கவலை என்பதற்கு 'preoccupazione' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மற்றொன்று நம்மை occupy  பண்ணுவதற்கு முன் இது வந்து அந்த இடத்தை occupy பண்ணிக் கொள்வதால் அதற்கு இந்தப் பெயர். இது pre-occupy பண்ணிவிடுவதால் நம் மூளையும் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் தவிக்கிறது.

'மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்.
இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்' (நீமொ 12:25) என்கிறார் நீமொ ஆசிரியர்.

நாம் சந்திக்கும் எல்லாரும் ஏதோ ஒரு மனக்கவலையில் இருக்கின்றனர். ஏதோ ஒரு போராட்டத்தை தங்கள் உள்ளத்தில் போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதமாக இருப்பது நாம் சொல்லும் ஓர் இன்சொல்லே.

திருவள்ளுவர் மனக்கவலைக்கு வேறு ஒரு மருந்து சொல்கிறார்:

'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது' (குறள் 7)

ஒருவேளை என் மனக்கவலையை ஆற்ற யாருமே இன்சொல் சொல்லவில்லை என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நான் என்ன செய்வேன்? தொடர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பேனா.

அப்படிப்பட்ட நேரங்களில் வள்ளுவரின் அறிவுரை நமக்குப் பயன்படும்:

'தனக்குவமை இல்லாதவன்' என்பவன் 'இறைவன்'. இறைவனின் தாள் அல்லது பாதங்களைப் பற்றிக் கொள்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மனக்கவலை மாற்றுவது கடினம் என்கிறார் வள்ளுவர். இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொள்பவர் மனதின் கவலையை வெற்றி கொள்ள முடியும்.

இறைவனின் தாளும், அடுத்திருப்பவரின் இன்சொல்லும் மனக்கவலைக்கு மருந்துகள்.

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. ' கவலை'... இது நம் மனத்தைத் தின்றுவிடக்கூடிய கரையான்.இதை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்ளும் போது அது பாதியாகக் குறையலாம் என்பது பலபேருக்குத் தெரிவதில்லை.ஆனால் அந்த அடுத்தவர் யார் என்று தெரிந்துகொள்வதற்குள் நம் கவலையே கூட நம்மை விட்டுப் பறந்து விடலாம்.அப்படி ஒரு சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது." உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்று நம்மை நாமே உசுப்பேத்திவிட்டு சிரித்தாலும், நாம் தனியாக இருக்கையில் அந்தக் கவலை வந்து நம் கன்னத்தில் அறையும்". உண்மையே! இதைக்குறைக்க அல்லது போக்க மாற்று மருந்தாக தந்தை துணைக்கழைப்பது தெய்வப்புலவரை....அவரின் வார்த்தைகளை. நம் கவலையை மறந்து, கவலையோடு போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு நம் இன்சொல்லால் அவர் கவலை போக்கி மகிழ்விப்பதும், மலை போன்ற கவலைக்கும் மருந்தாக இருக்கும் இறைவனின் தாளைப் பற்றிக்கொள்வதும் தான் அது. எளிய விஷயம் தானே! முயன்றுதான் பார்ப்போமே!! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete