Saturday, May 28, 2016

பிரிவு துன்பமே

பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணம் ஒரு சோகமான நிகழ்வோடு தொடங்குகிறது (காண். திப 15:36-42)

முதல் தூதுரைப் பயணத்தில் நகமும் சதையும்போல இணைந்தே பணியாற்றிய பவுலும், பர்னபாவும் சண்டையிட்டுப் பிரிகின்றனர்.

'நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த அனைத்து நகரங்களுக்கும் திரும்பப் போவோம்' - பவுல்.

'நம்மோடு மாற்குவையும் அழைத்துச் செல்வோம்!' - பர்னபா.

'வேண்டாம்! மாற்கு நம்மைப் பாதிவழியிலேயே விட்டுவிட்டுப் போனவர்! அவர் நம்முடன் வேண்டாம்!' - பவுல்.

'மாற்கு வந்தால்தான் நான் வருவேன்!' - பர்னபா.

'அப்படியா? அப்போ நீ மாற்குவைக் கூட்டிட்டுப்போ. நான் சீலாவைக் கூட்டிட்டுப்போறேன்!' - பவுல்.

மாற்குவை முன்னிட்டு பவுலும், பர்னபாவும் பிரிகின்றனர்.

எந்தக் காரணத்திற்காக மாற்கு பாதிவழியில் இவர்களைவிட்டுப் பிரிந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. மாற்கு பவுலைவிட இளவயதினராகத்தான் இருந்திருக்க வேண்டும். இளவயதுக்கே உள்ள துடிப்பு பவுலுக்கு பிடிக்கவில்லையோ? அல்லது உடல்நலமின்மையை முன்னிட்டு அவர் பாதிவழியில் திரும்ப நேரிட்டதோ? அல்லது பவுலுக்கும், மாற்குவிற்கும் இடையே உள்ள ஒரு வாக்குவாதத்தை லூக்கா பதிவு செய்யவில்லையோ?

ஒவ்வொருவரும் தான் செய்யும் செயலுக்கு ஒரு காரணம் வைத்திருப்பார்.

'பாதிவழி அர்ப்பணம்' பவுலுக்குப் பிடிக்கவில்லை.

'அர்ப்பணம் செய்தால் முழுமையாகச் செய்யணும். அல்லது செய்யக்கூடாது.' - இதுதான் பவுலின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.

பவுலிடம் இன்னொரு விஷயத்தையும் பாராட்ட வேண்டும்.

அதாவது, நாம் பணியாற்றும் இடத்தில் நம் உடன் பணியாளரே நம்மோடு ஒத்துழையாவிட்டால், நாம் சோர்ந்து போகவோ, அல்லது 'எனக்கென்ன?' என்று ஓய்ந்துவிடவோ கூடாது. 'அடுத்து என்ன செய்யலாம்?' என முடிவெடுத்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

பவுல் தெளிவாக இருக்கிறார் தன் பணியில்.

'நான் உனக்காகவோ, மாற்குவிற்காகவோ நற்செய்திப் பணியைத் தேர்ந்து கொள்ளவில்லை. என் ஆண்டவருக்காகத் தேர்ந்து கொண்டேன். நீ பிரிந்தாலும் நான் என் பாதையில், என் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறேன்!' என புறப்படுகிறார் பவுல்.

ஆண்டவருக்காக தன் நட்பை தியாகம் செய்யும் பவுல் எனக்கு ஆச்சர்யமாகவே படுகிறார்.

பர்னபாவைப் பிரிந்த பின் பவுல் தன் தனிமையில் அழுதிருப்பாரா? அவரைக் காண ஏங்கியிருப்பாரா? சீலாவுடன் அவருடைய நட்பு எப்படி இருந்தது?

பவுல்-பர்னபா பிரிவு துன்பமே.

2 comments:

  1. பவுலின் இரண்டாம் தூதுரைப்பயணத்தின் போது அவருக்கும்,பர்னபாவுக்கும் இடையே நடந்த உரையாடல் அவர்களின் பிரிவிற்கான காரணத்தை விளக்குகிறது. இதில் தன் வேலையைத் தான் தொடர்ந்து செய்ய யாரும்,எதுவும் தடையாயிருக்க முடியாது என்பதில் குறியாயிருக்கிறார் பவுல். இதற்காக இவரை மெச்சலாம் எனினும் பர்னபாவை இங்கு குறைத்து மதிப்பிடுவதற்கும் காரணமில்லை.தங்களை விட்டுப் பிரிந்து சென்ற மார்க்குவைத் தங்களோடு மீண்டும் இணைத்துக் கொள்ள நினைப்பது அவரது பரந்த மனப்பான்மையையே காட்டுகிறது.ஆயினும் இங்கு வெற்றி பெறுவது 'தன் காரியமே கண்ணாயினார்' பவுல் தான்." பாதிவழி அர்ப்பணம் பவுலுக்குப் பிடிக்கவில்லை".... செய்யும் காரியத்தை சிரமேற்கொண்டு செய்வது என்பதை விளக்கும் ஒரு அழகான வாக்கியம்."இடியோ,மழையோ எது வந்திடினும் நான் செல்லும் பாதை தெளிவானது. என் அர்ப்பணத்தில் எனக்குப் 'ப்ரையாரிட்டி' இறைவனைத் தவிர யாருமில்லை" சொல்லாமல் சொல்கிறார் பவுல். பிரிவுத் துயரம் பர்னபாவுக்கு மட்டுமில்லை; பவுலுக்கும் கூடத்தான். ஆனால் யாருக்காக யாரை விட்டுக்கொடுக்கிறோம் என்ற விஷயத்தில் நாம் தெளிவாக இருந்தால் நாம் போகும் வழி சரியே! அழகான, நம் நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்படக் கூடியதொரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைவருக்கும் ஞாயிறு வணக்கங்கள்!!!

    ReplyDelete
  2. Many more happy returns of the day Father.... !!
    We praise God for the gift of 'you'...

    ReplyDelete