Sunday, May 15, 2016

தொற்கா

கடந்த வெள்ளிக்கிழமை (13 மே 2016), வத்திக்கானில் அகில உலக பெண் துறவியர்களின் தலைமைச் சகோதரிகளைச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ், 'பெண் திருத்தொண்டர்கள் நியமனம்' குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்படும் என்று முன்மொழிந்துள்ளார்.

பெண்களை அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்துவது குறித்து யாரும் பேசக்கூடாது என்று சவப்பெட்டியில் ஆணி அறைந்தார் (இது ஒரு ஆங்கில சொலவடை) முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல். அந்த ஆணியை மெதுவாக உருவி எடுத்துவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இது படிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, முன்மொழியப்பட்டு, நடைமுறைக்கு வர இன்னும் பல வருடங்கள் ஆகலாம். அதுவும், பெண் திருத்தொண்டர்கள் நம் ஊரில் மறையுரை வைக்கும் நிலைக்கு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகலாம்.

எம்.ஆர். ராதா சொல்வது போல, 'நாம் இதுபற்றி எல்லாம் பேசக்கூடாது' என்று சொல்லிவிட்டு நம் நிகழ்வுக்கு வருவோம்.

திருத்தூதர் பணிகள் நூலில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் பற்றிய குறிப்பு இருக்கின்றது (காண். 9:36-43).

இவருக்கு மக்கள் செல்லமாக வைத்த பெயர் 'தொற்கா' (நம்ம ஊர் 'துர்க்கா' மாதிரி இருக்கு!). 'தொற்கா' என்றால் கிரேக்கத்தில் 'பெண்மான்' என்பது பொருள்.

இவர் 'நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் முற்றிலும் ஈடுபட்டிருந்தவர்.' ஒருநாள் இவர் இறந்துவிட பேதுரு உடனடியாக அழைத்துவரப்படுகின்றார். எலியா, எலிசா, இயேசு என்ற வரிசையில் பேதுருவும் இறந்த இந்தப் பெண்ணுக்கு உயிர் கொடுக்கின்றார்.

இந்த நிகழ்வில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கிறேன்:

அ. இவர் அழகாக இருந்திருக்க வேண்டும். அல்லது ஓடியாடி வேலை செய்திருக்க வேண்டும். ஆகையால்தான் இவர் 'பெண்மான்' என அழைக்கப்படுகின்றார். அதுவும் நன்மை செய்யவும், இரக்கச் செயல்கள் செய்யும் ஓடியிருக்கின்றார். நிறைய கைவேலைப்பாடுகளால் துணிகளும் செய்து கொடுக்கின்றார் தன் அண்டை வீட்டாருக்கு. என்னை மற்றவர்கள் எப்படி அழைப்பார்கள்? என்பது நான் கேட்க வேண்டிய முதல் கேள்வி.

ஆ. கைம்பெண்கள். இந்த நிகழ்வில் கைம்பெண்கள்தாம் உடனடியாக எல்லா வேலைகளையும் செய்கின்றனர். அதாவது, இறந்த பெண்ணைக் குளிப்பாட்டுகிறார்கள். பேதுருவுக்கு ஆள் அனுப்புகிறார்கள். அவர் வந்தவுடன் தொற்காவைப் பற்றிப் பாராட்டிப் பேசுகின்றனர். உயிர் பெற்று எழுந்த தொற்காவை ஆரத் தழுவிக்கொள்கின்றனர். 'கைம்பெண்கள்' எல்லாம் கடவுளர்கள் என்றே நான் எண்ணுவதுண்டு. அதாவது, அவர்கள் கணவன் என்ற கட்டைக் 'கடந்தவர்கள்.' இருந்தாலும் இல்வாழ்க்கையில் தொடர்ந்து 'உள்ளவர்கள்.' ஆக, அவர்கள் 'கடந்து உள்ளவர்கள்' - 'கடவுளர்கள்.' கடவுளைப் போலவே மற்றவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் கைம்பெண்கள். (மனிதர்கள் இருக்கும்வரைதான் கடவுளர்களும் இருப்பார்கள்!). இந்தக் கைம்பெண்கள் தங்கள் நிலை பற்றி வருந்திக் கொண்டிராமல், அடுத்து புதியதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். உலகில் ஒரு புதிய உயிரைப் படைத்த கைம்பெண் தொடர்ந்து தன் படைப்புத் திறனைப் பயன்படுத்தி புதிய படைப்புச் செயலை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறாள்.

தொற்கா - தன் அன்பால் இந்த கைம்பெண்களை வென்றாள்.

கைம்பெண்கள் - தங்கள் பதிலன்பால் அவளுக்கு மறுஉயிர் தந்தனர்.

1 comment:

  1. எளிய வார்த்தைகளால் தெரிவு செய்யப்பட்ட அழகானதொரு பதிவு. 'தபித்தா' எனும் பெண் அவரின் நற்பண்புகளுக்காக ' தொற்கா' என அழைக்கப்படுகிறார். அவர் இறந்தபின்னும் எப்படியாவது மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் என்று விரும்பும் சுற்றம். இதில் ஈடுபட்ட ' கைம்பெண்களை' கடவுளுக்கு இணையாகச் சொல்கிறார் தந்தை. இந்தக் கைம்பெண்களையும் கவர்ந்தவர் தான் நம் ' 'பெண்மானுக்கினையான ' தொற்கா' எனும் தபித்தா! தன் அன்பால் கைம்பெண்களை வென்ற தொற்காவும்,தங்கள் பதிலன்பால் அவளுக்கு மறு உயிர் தந்த கைம்பெண்களும் போற்றுதற்குரியவரே! இதில் நான் எந்த இரகம்! பிறரின் உயிருக்கு உரமேற்றுபவரா...இல்லை உயிரை எடுப்பவரா? யோசிப்போம்.'என்னை என் இறப்பிற்குப் பின் பிறர் எப்படி அழைப்பார்கள்?'....இப்படி ஒரு கேள்வியை நம் பின்னனியில் கொண்டு வாழ்ந்தால் நம் வாழ்வு இன்னும் கொஞ்சம் நெறிப்படலாம் என்று தோன்றுகிறது. எப்படித்தான் தந்தையால் இப்படியொரு கோணத்தில் யோசிக்க முடிகிறதோ....தெரியவில்லை. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete