Wednesday, May 25, 2016

எருசலேம் சங்கம்

திருத்தூதர்கள் எல்லாரும் இயேசுவின் இறையரசுப் பணியைச் செய்தாலும், ஒரே தலைவரையும், ஒரே ஆண்டவரையும் கொண்டிருந்தாலும், கருத்தியல் என்று வந்தபோது தங்களுக்குள் பிளவுபடத்தான் செய்தனர்.

'விருத்தசேதனம்' பற்றிய பிரச்சினைதான் முதல் பிரச்சினை.

கிறிஸ்தவர்களாக மாறுவது எப்படி?

யூதர்களாக இருப்பவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு திருமுழுக்கு பெற்றனர். யூதரல்லாதவர்கள் நேரிடையாக திருமுழுக்கு பெறலாமா? அல்லது முதலில் அவர்கள் விருத்தசேதனம் பெற வேண்டுமா?

பேதுரு குழுவினர் விருத்தசேதனம் அவசியம் என்றும், பவுல் குழுவினர் விருத்தசேதனம் தேவையில்லை என்றும் வாதிடுகின்றனர். திருச்சட்டத்தில் கைதேர்ந்த, உடல்-மனம்-ஆன்மா என முழு யூதராக இருந்த பவுல் இப்படிப்பட்ட மாற்றுச்சிந்தனை கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.

பிரச்சினை இரண்டு திருத்தூதர்களுக்கு இடையே என்பதால், மேலிடம் தலையிட வேண்டியிருக்கிறது. அக்காலத்தில் எருசலேம் திருஅவையின் ஆயராக இருந்தவர் யாக்கோபு. இவர் இயேசுவின் உறவினர் என்பதாலும், எருசலேம் மீட்பு வரலாற்றில் மிக முக்கிய இடம் வகித்ததாலும், பிரச்சினை இவரிடம் கொண்டு செல்லப்படுகிறது (காண். திப 15:1-35). அவர் தானே முடிவெடுக்காமல் எருசலேம் சங்கத்தைக் கூட்டுகின்றார். இரண்டாம் வத்திக்கான் சங்கம் வரை இன்று நிறைய சங்கங்கள் நடந்தேறியிருந்தாலும், எருசலேம் சங்கமே அனைத்து சங்கங்களின் முன்னோடி.

பவுல் தன் விவாதத்தை ரொம்ப எளிதாக முன்வைக்கிறார்:

கடவுள் எல்லார் மேலும் தூய ஆவியைப் பொழிகிறார். அவர் பாரபட்சம் காட்டவில்லை. அப்படியிருக்க நாம் ஏன் காட்ட வேண்டும்?

மேலும், அடுத்தவர் சுமக்க முடியாத சுமையை நாம் ஏன் அவர்கள் மேல் சுமத்த வேண்டும்?

இது இன்று நம் திருஅவை தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடம்.

பல நேரங்களில், 'சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுப்பதில்லை' என்பதுபோல, விவிலியம் அனுமதித்தாலும், நம் திருஅவை பாரம்பரியம் அனுமதிப்பதில்லை. மேலும், திருஅவையின் சட்டங்கள் பல நேரங்களில் சுமக்க முடியாத சுமைகளாக மாறிவிடுகின்றன.

பவுலின் இரண்டாவது வாதத்தை நம் வாழ்க்கை சிந்தனையாக எடுத்துக்கொள்வோம்:

'அடுத்தவர் சுமக்க முடியாத சுமையை நாம் அவர்கள் மேல் சுமத்தக் கூடாது.'

அதாவது, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு கண்ணீர்க்கடல். தன் உள்ளத்தில் நிவர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை வைத்துக்கொண்டு அதை நிரப்ப நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட வேளையில், நம் சொல் மற்றும் செயலினால் அடுத்தவரைக் காயப்படுத்தி, அவர் சுமக்க முடியாதவாறு சுமையை, வெற்றிடத்தை நாம் அதிகமாக்கிவிடல் கூடாது.
பவுலின் இந்த பரந்த மனத்தால்தான் இன்று நாம் நேரிடையாக திருமுழுக்கு பெற முடிகிறது. அல்லது முதலில் நாம் விருத்தசேதனம் பெற வேண்டி இருந்திருக்கும்!

2 comments:

  1. "திருத்தூதர்கள் அனைவரும் ஒரே பணியைச் செய்தாலும்,ஒரே ஆண்டவரை ஏற்றுக்கொண்டாலும் கருத்தியல் என்று வந்த போது தங்களுக்குள் பிளவுபடத்தான் செய்தனர்".....நான்கு பேர் கூடும்போது கருத்தியல் வேறுபாடு என வருவது சகஜமே. அப்படி வரும்போது தான், விஷயங்கள் விவாதிக்கப்படும் போதுதான் நல்ல எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டு ,தேவையற்றவை ஓரங்கட்டப்படும். ஆனால் இதை காரணம் காட்டி பிளவு வருவது திருஅவையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். இந்தப் பின்னனியில் தான் பவுல் தன் கருத்தைப் பகிர்ந்து கொள்வதாகச் சொல்கிறது இன்றையப் பதிவு." அடுத்தவர் சுமக்கமுடியாத சுமையை நாம் ஏன் அவர்கள் மேல் சுமத்த வேண்டும்?"நாமே நம் மனம் நிறைய வெற்றிடத்தை வைத்துக்கொண்டு அதை நிரப்ப இயலாமல் துடிக்கையில், நம் சொல்,செயலினால் எதற்காக அடுத்தவரைக் காயப்படுத்தி அவர்களின் வெற்றிடத்தை அதிகப்படுத்த வேண்டும்? பவுலின் இந்தக் கேள்விக்கு விடைகாணத் துடிக்கும் யாரும் யாரையும் காயப்படுத்த முடியாது. முடிந்தால் அடுத்தவரின் சுமையைத் குறைப்போம்..இல்லையேல் நமது நுகத்தை அடுத்தவரின் தோளில் ஏற்றுவதையாவது தவிர்ப்போம்.நல்லதொரு சிந்தனைக்காகத் தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete
  2. Dear Father,Very Excellent.

    ReplyDelete