Sunday, November 27, 2016

மாற்றம்

இன்று திருவருகைக்காலத்தை தொடங்குகிறோம்.

இன்றுதான் வழிபாட்டு ஆண்டின் புத்தாண்டு நாள்.

கடந்த திருவருகைக்காலம் முதல் கட்டளை செபம் வாசிப்பதை தவறாமல் செய்து வருகிறேன். அப்படின்னா அதுக்கு முன்னால செய்யலயா என்று கேட்கிறீர்களா?

நேற்று பெங்களுர் சென்றுவிட்டு திரும்பினேன்.

விமான நிலையத்தில் நிறைய நேரம் உட்கார வேண்டியிருந்ததாலும், கையில் படிக்க ஒன்றும் இல்லாததாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு முன்னால் இரண்டு இளவல்கள். இருவர் கையிலும் அரைலிட்டர் பிஸ்லரி பாட்டில். அதைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். புலியை முறத்தை அடித்து விரட்டிய தமிழச்சியும், உருளைக்கல் தூக்கி திருமணம் செய்த மறத்தமிழனும் இன்று பிஸ்லரி பாட்டில் மூடியோடு மல்லுக்கட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது.

கால்மேல் கால்போட்டு மற்றொரு இளவல். மஞ்சள் நிற தேநீர் ஆடை (டிசர்ட்) அணிந்திருந்தாள். கையில் மோட்டோ ஃபோன். அவரைக் கடந்து சென்ற ஒருவருக்கு வழி காட்டும் முகமாக, தன் ஷூ காலை 45 டிகிரி நகற்றி வழிகாட்டினாள். அடுத்தவர் வந்தால் எழுந்து வழிவிடும் மரியாதை இன்று பாதத்தைத் திருப்புவதாக மாறிவிட்டது ஆச்சர்யமாக இருக்கிறது!

தெரிந்தவர்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அவர்கள் ஃபோன் பேசும்போது கடந்து சென்றால்போதும். பேசிக்கொண்டே புன்முறுவல் செய்கிறார்கள்.

ஆண்கள் எல்லாம் நேற்று என்ன நடந்தது என்பதைப் பற்றி விமர்சனம் செய்துகொண்டும், நாளை என்ன நடக்கும் என்று ஊகித்துக் கொண்டும் உரையாடிக்கொண்டிருந்தனர்.

பெண்கள் தங்களைப் போல யாராவது ஆடை அணிந்திருக்கிறார்களா என்று பார்த்து அவர்களிடமிருந்து விலகி நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், குழந்தைகள் புத்திசாலிகள்.

கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தையும் விளையாடி மகிழ்ந்தனர்.

நிறைய இடங்களைப் பார்த்து ரசிப்பதற்கு மறந்தவர்கள் பார்ப்பவற்றை எல்லாம் தங்கள் ஃபோனில் படம் எடுத்து தங்கள் மெமரியை விட ஃபோன் மெமரியை அதிகரித்துக்கொண்டிருந்தனர்.

சப்வேயில் வாங்கிய பர்கரை கையிலே பிடிக்க முடியாமல் இருந்தபோது, அதை தங்கள் லிப்ஸ்டிக்கில் படியாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் இரு சாப்ட்வேர் கிளிகள்.

இது எல்லாமே மாற்றம்தான்.

எல்லாவற்றிற்கும் பெரிய மாற்றம் கடந்த வாரம் என் வகுப்பறையில் பார்த்தது.

இரண்டு பேர் பப்பிள் கம் மென்றுகொண்டே பாடம் கவனித்துக்கொண்டிருந்தனர். நான் போர்ட் பக்கம் திரும்பும்போதெல்லாம் போட்டிக்கு வாயில் முட்டை வேறு விட்டு சிரித்துக்கொண்டனர்.

திருவருகைக்காலத்தில் நாம் சிந்திப்பதும் மாற்றம்தான்.

இந்தக்காலத்தில் நாம் வாசிக்கும் எல்லா வாசகங்களும் மாற்றம் பற்றித்தான் இருக்கும்.

நிறைய நேர்முகமான செய்தியைத் தாங்கிவரும் இத்திருவருகைக்காலம் நமக்கு அருளின் காலமாக அமைவதாக.

1 comment:

  1. தான் பார்க்கும் அத்தனை சம்பவங்களையும் சரித்திரமாக வடிக்கும் தந்தையின் வித்தை நமக்குப் புதிதல்ல.நேற்றுத் தான் பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் மாற்றங்களின் படையெடுப்பாகச் சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனது, தந்தையின் வகுப்பறையில் நடந்ததை ஓரங்கட்ட வேண்டிய ஒரு அசிங்கமாகத்தான் பார்க்கிறதேயன்றி மாற்றமாக அல்ல.திருவருகைக் காலத்தில் நம்மை சிந்திக்க வைக்கும் தந்தைக்கு ஒரு சல்யூட்! நேர்முகமான செய்திகளைத் தாங்கிவரும் இத்திருவருகைக் காலம் நம்மில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர இறைவன் துணை புரிவாராக!!!

    ReplyDelete