Tuesday, November 22, 2016

மீக்காவும் லேவியும்

இன்று நீத 17-18 பிரிவுகளை விவிலிய பாடமாக எடுத்தேன்.

இரண்டு மூன்று எண்ணங்கள் உதித்தன.

அவற்றை இங்கே பதிவு செய்கிறேன்:

1. 'நீ எனக்கு தந்தையாகவும், குருவாகவும் இருப்பீர்!'

மீக்கா ஒரு பணக்காரர். தன் வீட்டில் ஒரு ஆலயம் ஏற்படுத்துகின்றார். அங்கே சிலைகளை செய்து வைக்கின்றார். அவரைத் தேடி லேவி குலத்து இளைஞன் ஒருவன் வருகிறான். வந்தவனை தன் வீட்டிற்குள் அழைத்து, அவரை அருள்பொழிவு செய்து 'நீ எனக்கு தந்தையாகவும், குருவாகவும் இருப்பீர்' என்கிறார். 16 வயது பையனைப் பார்த்து 60 வயது உள்ள ஒருவர், 'நீ எனக்கு அப்பாவாக இரு!' என்றால் அது பொருத்தமாகவா இருக்கிறது? - இந்தக் கேள்வி என்னுள் எழுந்தது. ஆனால், மலாக்கி 2:1-10ஐ இணைத்து வாசித்தால் இதன் அர்த்தம் புரிகிறது: 'ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவரது நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் நாட வேண்டும். ஏனெனில், படைகளின் ஆண்டவரின் தூதர் அவர்.' அதாவது, குருவாக நியமிக்கப்பட்ட ஒருவர் எந்த வயது என்றாலும் அவர் இறைவனின் பிரதிநிதி ஆகிவிடுகிறார். ஆக, இங்கே உரிமை மட்டுமல்ல. குருவுக்கான பொறுப்பு, குறிப்பாக அவர் தன் வாயை பயன்படுத்தும் விதம், சொற்களைப் பயன்படுத்தும் விதம் பற்றிய அக்கறை இன்னும் அதிகமாகிறது.

2. 'லேவி மீக்காவின் மகன்களில் ஒருவராக இருந்தார்!'

'நீ எனக்கு அப்பா போல இருப்பீர்!' எனச் சொல்லிவிட்டு அவரை மகனைப் போல நடத்துகின்றார் மீக்கா. இதை நேர்முகமாக பார்க்கலாம் அல்லது எதிர்மறையாக பார்க்கலாம். எந்த நிலையிலும் சமநிலை அவசியம். மேலும் மகன்போல தன்னையே மற்றவர்கள்முன் தாழ்த்தும் மனப்பக்குவம் குருவுக்கு அவசியம்.

3. யார் முதலில் பேசுகிறார்?

மீக்காவின் வீட்டைத்தேடி தான் குல மக்கள் வருகிறார்கள். வழக்கமாக தன் ஆலயத்திற்கு வருபவர்களைப் பார்த்து, 'நீங்க யாரு? எங்க இருந்து வர்றீங்க?' என்று குருதானே கேட்கணும். ஆனால், இங்கே மக்கள் முந்திக் கொள்கிறார்கள். 'நீ யாரு? இங்க என்ன செய்ற? உன்னை யார் இங்கே கூட்டி வந்தார்கள்?' என குருவை மக்கள் கேட்கிறார்கள்.

நல்லா கவனச்சோம்னா ஒன்னு தெரியும். யார் முதல்ல வாயை திறக்கிறார்களோ அவர்கள்தான் வாதத்தில் வெற்றி பெறுவார்கள். இங்கே குருவின் வாய் கட்டப்பட்டிருக்கிறது. காரணம் அவர் மீக்காவை சார்ந்திருக்கிற படியால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.

ஆக, யார் பக்கமும் சாராமல் இருக்கிற ஒரு குருதான் வாய்திறந்து பேச முடியும்.

4. எது நல்லது?

'உனக்கு எது நல்லது? ஒரு தனிமனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? அல்லது ஒரு குலத்திற்கு, ஒரு இனத்திற்கு குருவாக இருப்பதா?' என எதிர்கேள்வி கேட்கின்றனர் தான் மக்கள். இந்த லேவி சந்தர்ப்பவாதியாக இருக்கிறார்.

அதாவது, எது அதிக லாபம் என்று பார்த்து அந்த பக்கம் சாய்ந்து கொள்கிறார்.

குரு லாபம் பார்த்து செயல்படல் கூடாது அல்லவா?

5. 'குழந்தைகளும், கால்நடைகளும், உடைமைகளும் முன் செல்ல...'

வழக்கமாக நாம சப்பரம் தூக்குனா என்ன அறிவிப்பு சொல்வோம்? குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னால் செல்லுங்கள் என்றுதானே. இந்த வழக்கம் நீத 18:21ல் இருந்துதான் வந்திருக்க வேண்டும். மீக்காவின் ஆலயத்தில் உள்ள சிலைகளை எடுத்துக்கொண்ட தான் மக்கள் அவற்றை ஒய்யாரமாக சுமந்து கொண்டு போகிறார்கள்.

நீதித்தலைவர்கள் நூல் குருக்கள் பற்றியும், நம் வழிபாட்டு முறை பற்றியும் நிறைய சொல்கிறது.

1 comment:

  1. குருக்கள் பற்றிய பல விஷயங்களை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.1.குருக்களின் வாயினின்று உதிரும் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.2. ஒரு குரு என்பவர் தன் வசம் ஒப்படைக்கப் பட்ட மக்களுக்கு ஒரு தனயனாக மட்டுமல்ல,தந்தையாகவும் இருக்க வேண்டும்.3.ஒரு குருவானவர் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.இங்கே தந்தை கூடுதலான ஒரு உண்மையை பகிரங்கப்படுத்துகிறார்.ஆம்...யார் முதலில் வாய் திறக்கிறார்களோ,அவர்கள் தான் வாதத்தில் வெற்றிபெறுவர் என்பது நம் வீடுகளில் நாம் அன்றாடம் சந்திக்கும் உண்மைதானே! 4. சுயலாபம் கருதி எந்த குருவும் வேலை செய்யக்கூடாது.5.இறுதியாக நாம் திருவிழாக்களில் சப்பரம் தூக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முறைமை. ஆமா...இத்தனையும் குருக்களைப்பற்றிய விஷயமல்லவா? இதைப்பற்றி நமக்கென்ன? எனும் கேள்வியும் என்னைப்போன்றவர்களுக்குக் கூடவே வருகிறதல்லவா? ஆம் குருக்களின் நிலைப்பாடு என்னவென்று தெரிந்தால்தானே மக்கள் அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்? குருக்களுக்கும்,அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கும் இடையே 'சரியான புரிதல்' எனும் பாலம் கட்ட தந்தை எடுத்திருக்கும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete