Wednesday, November 16, 2016

கண்ணீர் கடவுள்

'ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை!' (காண். லூக் 19:41-44)

'எல்லாம் எனக்குத் தெரியும்!' என்று நாம் நினைக்கும் சில நேரங்களில், நமக்கு அருகில் நடப்பது நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது.

அப்படித்தான் நடக்கிறது எருசலேமுக்கும்.

இங்கேதான் கடவுளின் ஆலயம் இருந்தது.

இங்கேதான் மன்னாதி மன்னர்கள் முடிசூட்டி ஆண்டார்கள்.

இந்த ஊரைத் தேடித்தான் ஒட்டுமொத்த பட்டிதொட்டிகளும் படையெடுத்தன.

இங்கேதான் திருச்சட்டங்கள் கற்பிக்கப்பட்டன.

இங்கேதான் நாகரீகம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இவ்வளவு நடந்த இடத்தில் கடவுளின் பிரசன்னம் மட்டும் கண்டுகொள்ளப்படவே இல்லை.

கடவுளின் பிரசன்னத்தை எப்படி கண்டுகொள்வது.

இஞ்ஞாசியாரின் தியான முறையில் இதை 'டிஸர்ன்மென்ட்' என அழைக்கிறார்கள்.

எங்கள் கல்லூரியில் ஒரு வயசான அருட்தந்தை இருக்கிறார்.

அவரின் டிஸர்ன்மென்ட் ரொம்ப சிம்பிள்.

ஏதாவது பற்றி முடிவெடுக்க வேண்டுமானால் கண்களை மூடிக்கொண்டு இயேசுவின் முகத்தை சில மணித்துளிகள் கற்பனை செய்து பார்ப்பாராம். அந்த முகம் சிரித்தால் தான் செய்ய முனைவதை செய்வாராம். அந்த முகம் சிரிக்க மறுத்தால் அந்தச் செயலை அப்படியே விட்டுவிடுவாராம்.

ஏனெனில் இயேசுவை அழவைத்துவிட்டு நாம் செய்யும் செயல்கள் கல்லின்மேல் கல் இராதபடி ஆகிவிடுமாம்.

இதைத்தான் கமாலியேல் திருத்தூதர் பணிகளில் மிக அழகாகக் கூறுவார்:

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்!' (திபா 5:39)

1 comment:

  1. நாளைத் திருப்பலிக்கான இந்தப் பகுதியை வாசிக்கையில் மனத்தில் கொஞ்சம் பயம் அப்பிக்கொண்டதென்னவோ உண்மை.ஆனால் தந்தை அந்த பயத்தை விடுத்து கொஞ்சம் மனத்துக்கு இதமாக்கித் தந்துள்ளார்.உண்மைதான்....' 'எல்லாம் தெரியும்' எனும் இறுமாப்பு ஒருவனுக்கு வரும்பொழுது அது அவனுடைய அழிவின் ஆரம்பம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.'இறைப் பிரசன்னம்' இவனிடம் விடை பெற்று கொண்டுவிட்டது என்பதுவே இதன் பொருள்.நம் வாழ்வின் மையமாய் இருக்க வேண்டிய இந்த இறைப்பிரசன்னத்தை, வயதான ஒரு தந்தையின் வாழ்வியலாகச் சொல்லியிருக்கும் விதம் அழகானது. இது அவரது குழந்தையுள்ளத்தைப் பிரதிபலிக்கிறது.உண்மைதான்...பரம்பொருளே கண்ணைக்கசக்கும் நிலை வந்திடின் பாவிகள் நாம் பரமபதம் அடைவது எவ்விதம் சாத்தியமாகும்?தன் கல்லூரியின் வயதான தந்தையின் மூலமாகவும், 'திருத்தூதர் பணிகளின்' வரிகள் மூலமாகவும் நாம் வாழ்க்கைச் சிக்கல்களில் முடிவெடுக்கும் வித்தையைச் சொல்லித்தந்த தந்தைக்கு என நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete