Tuesday, September 22, 2015

ஓர் அங்கி

இன்று இரவு உணவருந்திக் கொண்டிருந்தபோது உணவறைக்கு சப்பாத்தி கொண்டு வந்த உதவி சமையற்காரர் திரு. அகஸ்டஸைப் பார்த்தவுடன் ஒரு ஃபாதர், 'அப்பாடா! இன்னைக்குதான் சட்டையை மாத்தியிருக்கிறான்!' என்றார்.

'ஒருவேளை அவரிடம் ஒரு சட்டைதான் இருக்கிறதோ என்னவோ!' என நான் நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்துவிட்டு அவரைப் பார்க்கும் போது, என் பார்வை வேறு மாதிரி இருந்தது.

நாளைய நற்செய்தியில் தன் சீடர்களை பணிக்கு அனுப்பும் இயேசு அவர்களுக்குக் கொடுக்கும் அறிவுரையில், 'ஓர் அங்கி போதும்!' என்கிறார்.

பணிக்குச் செல்பவர்களுக்கு மாற்று ஆடைகூட இயேசு அனுமதிக்காமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

நான் இறையியல் பயின்றபோது அணில் என்ற ஒரு மாணவன் உடன் பயின்றார். அவன் கொஞ்சம் ரேடிகலான கிறிஸ்தவன். மொத்தமே இரண்டு பேண்ட், இரண்டு சட்டைதான் வைத்திருந்தான். ஒன்றை அணிந்திருக்கும்போது மற்றது கொடியில் காயும். மூன்று வருடங்கள் அவன் அப்படியே வாழ்ந்தும் விட்டான். மழை, வெயில், பனி, ஈரம் போன்ற எதுவும் அவனை அசைக்கவில்லை.

இயேசுவின் 'ஓர் அங்கி' கட்டளையின் பொருள் என்ன?

ஒரே அங்கி அணிந்து ஒருவர் பணி செய்தால் மற்றவர் அவரைப்பற்றி என்ன நினைப்பார்?

இப்படி அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கேள்விதான் இங்கே முக்கியமானது.

நாம் ஆடை அணிவதன் நோக்கம் நம் நிர்வாணம் மறைக்க மட்டுமல்ல. மற்றவர்கள்முன் 'நான் இதுதான்!' என்று காட்டுவதற்குத்தான். குறிப்பாக 'பிராண்டட்' ஆடை அணியும்போது மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து பிரமிக்கும் ஒரு பிராண்டை நாம் அணியும்போது நம்மையறியாமலேயே நம்மேல் பெருமிதமும், மற்றவர்கள்மேல் பரிதாபமும் வருகிறது.

அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாதே. அடுத்தவர்களை மகிழ்விப்பதில் அக்கறையாய் இருக்காதே. நீ உன் வேலையைச் செய்.

இவைதான் இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.


3 comments:

  1. மனிதன் ஒரு 'சமூக விலங்கு'.என்னதான் அவன் சுயமரியாதைக்்களஞ்சியமாயிருப்பினும்,இந்த சமூகம் அவனை எப்படிப் பார்க்கிறது,என்ன நினைக்கிறது என்பதும் அவனுக்கு முக்கியம்.'ஆள் பாதி ஆடை பாதி', 'ஆடையில்லா மனிதன் அரைமனிதன்'...என்றெல்லாம் கூறுகிறோம்.ஏனெனில் ஓரளவுக்கு ஒரு மனிதன் அணியும் ஆடையிலிருந்து அவனுடைய குணாதிசயத்தைப் புரிந்து கொள்ளலாம்.ஆனால் இங்கு இயேசு ' ஒருவரோடு எடுத்துச்செல்ல ஒரு அங்கி போதும்' எனக் கூறும்போது இன்றைய கால கட்டத்திற்கு அது சாத்தியமா? தெரியவில்லை.நல்ல ஆடை அணியும் போது பெருமிதம் கொள்வதில் தப்பில்லை.மானம் மறைப்பதற்குத் தான் ஆடை என்ற காலம் மலையேறி ஆடைக்குறைப்பு செய்பவர்கள் தான் இன்று சமூகத்தின் ஐகான்களாகப் போற்றப்படுகிறார்கள்.இப்படியொரு நிலைமையில் நாம் எதை,யாரைப் பின் பற்றுவது?" அடுத்தவர்களைப்பற்றிக் கவலைப்படாதே; அடுத்தவர்களை மகிழ்விப்பதில் அக்கறையாய் இராதே; நீ உன் வைலையைச்செய்"..... இயேசுவும்,அவரது வார்த்தைகளும் நமக்கு விளக்காய்
    வரட்டும். தந்தையுடன் உடன் படித்த 'அணில்' என்ற சகோதரனைக் கூட நாம் முன்மாதிரியாய் எடுப்பதில் தப்பில்லை.யோசிக்க வைக்கும் பதிவு நல்கிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் ! "ஓர் அங்கி" ஒரு எளிமையான பதிவு இன்றைய வாசகத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக படைத்துள்ளீர்கள் நன்றி தந்தையே! அடுத்தவர்களைப் பற்றி கவலைப்படாதே. அடுத்தவர்களை மகிழ்விப்பதில் அக்கறையாய் இருக்காதே. நீ உன் வேலையைச் செய் மிக மிக அர்த்தமுள்ள வார்த்தைகள்.என் அப்பா என்னிடம் சொல்வார் ஒரு திருவிழா வருவதற்கு முன்னாலே உன் சகோதரிகள் அனைவரும் அது வேணும் இது வேணும் என்று கேட்கிறார்கள் நீ ஏன் எதை பற்றியும் கவலைபடுவதே இல்லை என்று. நான் கூறுவேன் அப்பா அளவுக்கு மீறிய செல்வமும் ஆபத்து, தேவைக்கு மிஞ்சிய வறுமையும் ஏற்கத் தகாதது அதனால் எனக்கு எதுவும் வேண்டாம் கடவுள் துணையும் உங்கள் ஆசீரும் போதும் . ஆக, பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டவர்கள் பிற பற்றுகளிலிருந்து விடுதலை பெறும்போதுதான் கடவுளின் பணியை நன்முறையில் ஆற்ற இயலும் என்பது இன்று வாழும் நமக்கு விடப்படுகின்ற சவால் என்பதனை தந்தை அவர்கள் தங்களது பதிவில் கூறியதற்கு நன்றிகள். கடவுளின் பணிக்கு பற்றில்லா தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய தந்தைக்கு எனது பாராட்டுக்கள் !..........

    ReplyDelete
  3. i really like this one.
    i have one elder sister.she very often mentions this point by saying one Tamil proverb "oorukka olai vakkira".when we cook we cook for ourselves and we don't worry about others.but when we dress up or wanted to do anything differently we look at others.
    ur reflection is good.

    ReplyDelete