Tuesday, September 15, 2015

ஆதலினால் இணையதளத்தில்

இன்று புனே ஞானதீப பல்கலைக்கழக நூலகத்தில் புத்தகம் ஒன்று பார்த்தேன். ஆரோன் பென்-சே'வ் (Aaron Ben-Ze'ev) அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய, Love Online: Emotions on the Internet 'ஆன்லைன் அன்பு: இணையதளத்தில் உணர்வுகள்'. புத்தகத்தைப் புரட்டிய நான்கைந்து பக்கங்களில் மணி ஒன்றாகிவிட்டது. அப்படியே அதை விட்டுவிட்டு வர மனமில்லாததால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து படித்தேன். மிக எதார்த்தமான ஒரு புத்தகம். சாட்டிங், சைபர் செக்ஸ், டெலிஃபோன் செக்ஸ் என போகிற போக்கில் இணையதள எதார்த்தங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இணையதள உரையாடல்களில், ஸ்கைப் மற்றும் ஃபேஸ்டைம் செயலிகளில் பகிரப்படும் ஒலி, ஒளி தரவுகளைக் கேட்டால் அல்லது பார்த்தால், நாம் பெற்றோர் காலத்தில் இயல்பாக நடந்த கடிதக் காதலும், காத்திருந்த காதலும், ஏதோ கற்கால நிகழ்வுகள் போல நமக்குத் தோன்றுகின்றன.

'எவ்வளவு மனிதர்கள்! ஆனால் எவ்வளவு குறுகிய நேரம்!' என்று இன்ற இணையதளக் காதலுக்கு நேரமில்லாமல் தவிக்கின்றோம்.

இன்று அன்பு, காதல், நட்பு, செக்ஸ் எல்லாம் வேறு புதிய தளத்திற்குக் கடந்து சென்றுவிட்டன. இந்த ஓட்டத்தோடு சேர்ந்து ஓடாதவர்கள் ஏதோ 'ஏலியன்கள்' போலவே பார்க்கப்படுகின்றனர்.

சரி எதற்கு இந்தப் பின்புலம்?

மேற்காணும் ஓட்டத்தோடு சேராதவர்கள் அல்லது ஓட்டத்தில் பங்கேற்காதவர்கள், பங்கேற்கும் மற்றவர்களை எப்படிப் பார்ப்பார்கள் என்பதை நாளைய நற்செய்தியில் சொலவடையாக இயேசு சொல்கின்றார்:

'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை.
நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் அழவில்லை!'

இதை இன்றைய இயங்குதள வார்த்தைகளில் சொன்னால்,

'நாங்கள் ஸ்கைப்பில் கூப்பிட்டோம். நீங்கள் பதில் தரவில்லை.
நாங்கள் இன்ஸ்டன் மெசஜ் அனுப்பினோம். நீங்கள் கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் ஸ்டேடஸ் போட்டோம். நீங்கள் லைக்ஸ் போடவில்லை.
நாங்கள் சாட்டிங்க செய்தோம். நீங்கள் ஆஃப்லைன் போய்விட்டீர்கள்!'

அதாவது, உண்டு குடிக்காத திருமுழுக்கு யோவானை 'பேய்பிடித்தவன்' என்று சொல்லும் மக்கள் கூட்டம், உண்டு குடித்த இயேசுவை 'பெருந்தீனிக்காரன்' என்கிறது.

அதாவது, திருமுழுக்கு யோவான் காலத்தில் இருந்த சமூகத்தின் மதிப்பீடுகள், சட்டென்று மாறும் வானிலை போல இயேசுவின் காலத்தில் மாறிவிடுகிறது. ஆகையால், இயேசு அவர்களின் எதிர்பார்ப்பு என்ற கட்டத்திற்குள் பொருந்த மறுக்கின்றார். அவப்பெயரைச் சம்பாதிக்கின்றார்.

இப்போ நாம என்னதான் செய்வது?

நம் உலகின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றனவே. நாமும் மாறிக்கொண்டே இருப்பதா? நம் மதிப்பீடுகள், வாக்குறுதிகள் போன்றவவையும் மாற வேண்டுமா?

இல்லை...

'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று!' என மிக அழகாகச் சொல்கின்றார் இயேசு.

அதாவது, ஒரு சிலர் இதை முட்டாள்தனம் என்று சொல்வதால், ஞானம் மடமை ஆகிவிடுமா. இல்லை. மனிதர்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும், மாறினாலும், மாறாவிட்டாலும், ஞானம் என்றும் ஒன்றே. ஆக, இதை ஏற்றுக்கொள்பவரின் செயல்களும் ஒன்றே. அவைகள் மாறத்தேவையில்லை.

சரி...இப்போ இண்டர்நெட் ஆன் செய்வதா, ஆஃப் செய்வதா?

ஆதலினால் இணையதளத்தில் காதல் செய்வீர்! - என்று சொல்வது யாருடைய ஞானம்?


2 comments:

  1. தந்தைக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்."ஆதலினால் இணையதளத்தில்" இந்த தலைப்பை பார்த்தவுடன் எனக்குள் மகிழ்ச்சி ஏனென்றால் தலைப்பு வித்தியாசமாக இருந்தது மற்றும் இதில் நீங்க நிறைவா பேச போறீங்களா குறைவா பேச போறீங்களா என்ற குழப்பம் . பிறகு நான் இதை மூன்று நேரம் படித்து நன்கு புரிந்த பிறகே இதை நான் புரிந்துகொண்டேன் .இந்த பதிவை வைத்து என் வாழ்வை ஒப்பிட்டு பார்த்தால் என் மனதில் படுவது இதுதான் வேண்டாதவன் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பார்கள். அன்பு இருக்கும் இடத்தில் குறைச்சொல்லுக்கு இடமே இல்லை. என்ன நடந்தாலும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோம்.அன்பு, அது ஆண்டவன் மொழி, ஆண்டவனோடு தொடர்புடையோர் பேசும் மொழி. குழந்தையும் பேசலாம், முதியவரும் பேசலாம். எந்த நாட்டவரும் மொழியினரும் பேசலாம். எல்லாரும் புரிந்துகொள்ளலாம். அங்கே குழப்பத்திற்கு இடமே இல்லை.அன்பு இல்லாத இடத்தில் புகார்களுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவே இருக்காது. "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை" என்ற சிறுபிள்ளை விளையாட்டாகத்தான் இருக்கும். அதுவே அன்புச்சூழலில் நிகழுமாயின் எந்த புகாருமின்றி புன்முறுவலோடு ஏற்றுக்கொள்வார்கள்.திருமுழுக்கு யோவானைக் குறை சொல்லக் காரணமும் இயேசுவை பெருந்தீனிக்காரன், குடிகாரன் என்று கேவலமாகப் பேசியதற்கு காரணமும், மொத்தத்தில் அந்த பரிசேயரிடையே அன்பு இல்லாததுதான். இவ்வாறு அன்பு இல்லாததால் பிறரை புகார் செய்பவரும் குறை சொல்பவரும் தன் மகிழ்ச்சியையும் கெடுத்து, பிறர் வாழ்வையும் வளர்ச்சியையும் கெடுக்கின்றனர். ஆதலால் நம்ம இணையதளத்திலும்,இயங்குதளத்திலும் இறைமதிப்பீடுகளான அன்பு,அமைதி ,நீதி, சமாதானம்,சகோதரத்துவம் போன்றவைகளை ஆன்லைனில் கொண்டு இறையரசை தந்தையோடு சேர்ந்து கட்டி எழுப்புவோம்.
    அன்பிலும் நீதியிலும் உறவை வளர்த்து அனைவரையும் மகிழ்விப்போம்.தந்தைக்கு என் பாராட்டுகள்!..........

    ReplyDelete
  2. இன்றையத் தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஒரு பதிவு.தந்தை தன்னுடைய நவீன விஞ்ஞானத்தின் அனைத்து வார்த்தைகளையும் பிசைந்து கொடுத்திருக்கிறார்.என் போன்றோருக்கு புரிந்து கொள்வது கூட கடினமே! அதற்காக வருத்தமுமில்லை.எத்தனை .அழகான உண்மையை எவ்வளவு பகிரங்கமாக தந்தை போட்டு உடைத்துள்ளார்.ஆம்.....நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நேசத்தையும்,மனித உணர்வுகளையும் மாற்றிக்கொண்டிருப்போருக்கு நம் பெற்றோரின் காலத்தில் இயல்பாக நடந்த கடிதக்காதலும்,காத்திருந்த காதலும் ஏதோ கற்கால நிகழ்வுகள் போலத் தோன்றுகின்றன இந்தத் தலைமுறையினருக்கு.அது மட்டுமா?... இந்த கால நட்பு,காதல் செக்ஸ்....இவற்றைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு 'ஏலியன்ஸ்' என்ற பட்டம் வேறாம்.இவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.நேற்று தப்பு என்றது இன்று சரி என்றால் இன்று சரி என்பதும் நாளைக்குத் தப்பாக்க் கூடியதொரு விஷயம் தானே! எதுவும் கடந்து போம்....இதுவும் கடந்து போம்.' ஆகாத பெண்டாட்டி கால் பட்டாலும் குற்றம்; கை பட்டாலும் குற்றம் என்பார்கள்.அப்படித்தான் இருக்கிறது இயேசுவின் தலைமுறையினரின் விமர்சனம் பற்றி இயேசு குறிப்பிடுவது.திருமுழுக்கு யோவான் கால மதிப்பீடுகளுக்க்கும்,இயேசுவின் கால மதிப்பீடுகளுக்குமே இத்துணை முரண்பாடு இருக்குமேயானால் அவை இன்றைய மதிப்பீடுகளுக்கு எப்படி நியாயம் செய்ய முடியும்? கண்டிப்பாக மாறிவிடும் மதிப்பீடுகளோடு நாமும் மாற வேண்டுமென நினைப்பது முட்டாள் தனம்.இதை இயேசுவின் வார்த்தைகளே மெய்ப்பிக்கின்றன..." ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று." என்று. இதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ' ஞானம்' ஒன்றே! தந்தையின் இந்த இறுதி வரிகளுக்கு ஒரு ' லைக்'( சபாஷ்) போடலாமே! இதற்கப்புறமும் இணைய தளத்தில் காதல் செய்பவர்களைப்பற்றியும்,செய்யாதோர்களைப்பற்றியும் நமக்கென்ன கவலை??!!

    ReplyDelete