Monday, September 30, 2013

ஏன் என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?


லாபான் யாக்கோபை நோக்கி: 'நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா? எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்? ... என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்? ... நான் செய்த குற்றம் என்ன? நான் செய்த பாவம் என்ன? ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்? (தொடக்கநூல் 31:27,30,36)

தன் தாய்மாமன் லாபானால் ஏமாற்றப்பட்டு அவரின் மூத்த மகள் லேயாவை திருமணம் செய்து கொள்கின்றார் யாக்கோபு. தொடர்ந்து தான் அன்பு செய்த அவரின் இரண்டாம் மகள் ராகேலுக்காக மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்கின்றார். யாக்கோபின் கடின உழைப்பாலும், புத்திக்கூர்மையாலும், விடாமுயற்சியாலும் லாபான் மிகுந்த செல்வனாகிறார். சொத்து கூடி வரும் நேரத்தில், 'இந்தச் சொத்து நம் தந்தையின் இறப்பிற்குப் பின் யாருக்கு உரிமையாகும்?' என்று விவாதிக்கின்ற லாபானின் புதல்வர்கள், 'ஒருவேளை யாக்கோபு எடுத்துக்கொண்டால் என்ன செய்வது?' என விவாதிக்கின்றனர். இந்த விவாதத்தைக் கேள்விப்படுகின்ற யாக்கோபு தன் மாமனிடமிருந்து தப்பிக்க முடிவெடுக்கின்றார். லாபானின் மனமும் முன்புபோல் இல்லை. 'பழகப் பழகப் பாலும் புளிக்கும்!' என்பது போல் யாக்கோபு என்ற பால் லாபானுக்கு புளித்ததல்லாமல், கசந்தே போய்விடுகின்றது. 

தப்பித்துச் செல்வது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த யாக்கோபு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பச் செல்ல ஆண்டவர் அவரை அறிவுறுத்துகின்றார். தன் மனைவியருடன் ஆலோசனை நடத்திவிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் லாபனை விட்டு (காரான்) தன் சொந்த ஊருக்கு (பெயர்சேபா) புறப்படுகின்றார். யாக்கோபு தப்பிவிட்டதை மூன்று நாட்களுக்குப் பின் கேள்வியுற்ற லாபான் ஏழுநாட்கள் விரட்டிச் சென்று கிலயாதில் அவரைப் பிடிக்கின்றார். 'யாக்கோபிடம் எதுவும் கேட்காதே!' என்று ஆண்டவர் அவரை எச்சரிக்கின்றார். 

கிலயாதில் யாக்கோபும், லாபானும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டவைகளே இக்கேள்விகள். இருவருமே ஒருவர் மற்றவரை ஏதோ வகையில் ஏமாற்றியிருக்கின்றனர். இருவர் மேலும் தவறு இருக்கின்றது. 'சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டதைக் கூட நான் மன்னித்து விடுகிறேன். ஆனால் என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?' என்று கேட்கின்றார் லாபான். இஸ்ராயேல் மக்களின் மரபில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சிற்றாலயமும், அதன் தெய்வமும் இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவரே அந்தச் சிற்றாலயத்தின் பூசாரியாகவும் இருந்தார். ஒரே கடவுள் வழிபாடு, குருத்துவம் என்ற சித்தாந்தமும் இஸ்ராயேல் வரலாற்றில் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வருகிறது. 

குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது லாபானின் மகள் ராகேல். லாபான் அதைத் தேடியபோது அதன்மேல் அமர்ந்துகொண்டு, 'நான் மாதவிலக்காய் இருக்கிறேன். என்னால் எழுந்து நிற்க முடியாது!' என்று பொய்யுரைக்கின்றார் (!) ராகேல். சதித்;திட்டம், ஏமாற்றம், ஓட்டம், தேடுதல், விரட்டுதல், கோபம், பொய், விரக்தி என நகர்கின்றது நிகழ்வு. இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து உடன்படிக்கை செய்துகொள்கின்றனர். யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, நினைவுத்தூணாக நிறுத்தினார். மேலும் தன் உறவினர்களை, 'கற்களைச் சேகரித்துக்கொண்டு வாருங்கள்' என்கிறார். அக்கற்குவியல் அருகே உணவருந்துகின்றனர். அந்த இடத்திற்கு லாபான் 'எகர்சகதுத்தா' (அரமேயத்தில் 'சாட்சியக் குவியல்') என்றும், யாக்கோபு 'கலயேது' (எபிரேயத்தில் 'சாட்சியக் குவியல்') என்றும் பெயரிடுகின்றனர். இரண்டாவது முறையாக லாபான் அந்த இடத்திற்கு 'மிஸ்பா' (எபிரேயத்தில் 'கண்காணித்தல்') என்று பெயரிடுகின்றார். கற்குவியலும், நினைவுத்தூணும் உடன்படிக்கையின் அடையாளமாகத் திகழ்கின்றன.

இந்தக் கற்களை வைத்து நாம் இன்று சிந்திப்போம். கற்களால் நமக்குப் பயன் உண்டா? கண்டிப்பாக. 'கற்கள்' என்றாலே கற்களின் பயன்பாடுகளான 'கட்டிடம்', 'பாலம்', 'மலை' போன்றவைகளே நம் நினைவிற்கு வருகின்றன. ஒரு சில நேரங்களில் கற்கள் நமக்கு பயம் தருகின்றன: 'நமக்கு எதிரே வரும் பைத்தியக்காரரின் கையில் இருக்கும் கல்,' 'அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் மருத்துவர் கண்டுபிடிக்கும் நம் கிட்னி கற்கள்' - இந்தக் கற்கள் நமக்குப் பயம் தருகின்றன. இன்னும் சில நேரங்களில் கற்கள் நமக்கு எரிச்சலைத் தருகின்றன: 'நாம் வெளியே நடந்து செல்லும் போது நம் செருப்புகளுக்குள் நுழைந்து கொள்ளும் கற்கள், நாம் நடைப்பயிற்சி செய்யும் போதும் அல்லது ஓடும் போதும் நம் ஷூக்களுக்குள் நுழைந்து கொள்ளும் கற்கள்' - இந்தக் கற்கள் நமக்கு எரிச்சலைத் தருகின்றன.

நம் வேலையிலும், வியாபாரத்திலும் ஏன் நாம் பின்தங்கி விடுகின்றோம்? ஏன் திருமணங்கள் கசந்து விடுகின்றன? ஏன் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எரிச்சலாய் மாறுகின்றனர்? ஏன் நட்பு புளித்து விடுகின்றது? எல்லாவற்றிற்கும் காரணம் 'நம் செருப்பில் ஒளிந்திருக்கும் கல்!'. 'நாம் ஏறிக்கொண்டிருக்கும் பெரிய மலை நமக்கு சோர்வைத் தருவதில்லை. மாறாக, நம் கால் செருப்பில் ஒளிந்திருக்கும் ஒற்றைக் கல்லை நமக்கு சோர்வைத் தருகிறது' என்ற வார்த்தைகளோடு தொடங்கும் ஒரு மேலாண்மையியல் நூல் 'The Pebble in the Shoe: 5 Steps to a Simple and Confident Life'. இதை எழுதியவர் 'Jim Fannin'. ஒரு சில கற்கள் நம் அலுவலக வேலைகளிலும், ஒரு சில கற்கள் நம் படிப்பிலும், ஒரு சில கற்கள் நம் நட்பிலும், ஒரு சில கற்கள் நம் குடும்ப வாழ்விலும் ஒளிந்து கொண்டு நமக்கு அசௌகரியத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. சின்ன அசௌகரியம்தானே என்று நாம் பொறுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினால், கொஞ்ச நேரத்தில் அது நம் கால்களைக் கிழித்து விடுகின்றது. சில நேரங்களில் நாம் அணியும் செருப்பையும் பதம் பார்த்து விடுகின்றது. 

'ஏமாற்றினாய் - ஏமாற்றப்பட்டேன்!' - இந்த இரட்டைக் கற்கள் யாக்கோபு மற்றும் லாபானின் காலணிகளுக்குள் நுழைந்து கொள்கின்றன. உடன்படிக்கையின் கற்குவியலுக்கு முன் தங்கள் காலணிகளில் ஒளிந்த கற்களை வெளியே எடுக்க முன்வருகின்றனர். காயங்கள் மறைந்து மன்னிப்பு பிறக்கின்றது. 

நம் வாழ்வில் சில கற்கள் நம் சின்ன வயசில இருந்தே நம்மைத் தொடர்கின்றன. சின்ன வயசு ஏமாற்றம், மனக்காயம், தவறான வழிகாட்டுதல், அவமானம், குற்றவுணர்வு போன்றவைகளும், பின் நம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளும், சில நேரங்களில் நம் சொந்தங்களும், உறவுகளும் கற்களாய் மாறி நம்மை உறுத்திக் கொண்டே இருக்கின்றன. 

முதலில் கற்கள் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். அந்தக் கற்கள் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். பின் அவைகளைக் களைய முனைய வேண்டும். இந்தக் கற்களை நாம் எப்படிக் களைவது? வாழ்வை எப்படி இனிமையாக்குவது? Jim Fannin சொல்லும் வழிகள் இவை:

Step 1: Be like the palm tree - sway with the hurricane but don't break.

Step 2: Learn to be like a light switch - know how to turn off the negative and turn on the positive.

Step 3: Learn to reboot - when you are feeling overwhelmed it is time to pause and reboot.

Step 4: Find a mentor - someone who will bring the best out of you.

Step 5: Learn the most powerful four-letter word: NEXT

சின்னஞ்சிறியவைகளே நம் வாழ்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சின்னஞ்சிறியவைகளில் கவனமாய் இருப்போம்! பெரியவற்றைச் சாதிப்போம்!

'ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்?'

'ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?'

1 comment: