Sunday, September 22, 2013

நீ எந்த மகன்?


யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், 'என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன். நானோ மிருதுவான உடல் கொண்டவன். என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? ... ஈசாக்கு மறுமொழியாக, 'ஆம் மகனே, நீ எந்த மகன்?' என்று கேட்க, யாக்கோபு தன் தந்தையிடம், 'நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன்' ... 'இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?' ... 'நீ உண்மையிலேயே என் மகன் ஏசா தானா?' என்று வினவ, அவனும் 'ஆம்' என்றான். (தொடக்கநூல் 27:11-12,18,20,24)

நிறைய கேள்விகள். ஆனால் உட்பொருள் ஒன்றுதான்: ஏமாற்றுதல். யாக்கோபு இரண்டாம் முறை ஏமாற்றுகிறான் - முதல் முறை தன் சகோதரனையும், இரண்டாம் முறை தன் தந்தையையும். தன் சகோதரனைத் தானே ஏமாற்றுகிறான். இம்முறை இவனது தாயும் இதற்கு உடந்தை. இந்த நிகழ்விலும் கடவுளை வெளியே எடுத்து விடுவோம்.

1. ஏசாவைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அப்பாவி! சகோதரனும் ஏமாற்றுகிறான். தாயும் ஏமாற்றுகிறார். 'அவசரப்படுகின்ற' தந்தையும் ஏமாற்றுகிறார். ஒரு குடும்பத்திற்குள் ஏன் இந்த பாரபட்சம்! நம் வீடுகளிலும் இந்த பாரபட்சத்தைப் பார்த்திருக்கலாம். இது தெரிந்தோ, தெரியாமலா நடக்க வாய்ப்பு இருக்கின்றது. ஒருவன் நன்றாகப் படிப்பான். அவனை மேலும் மேலும் ஊக்குவிப்பார்கள். மற்றவன் சரியாகப் படிக்காமல் விளையாடிக் கொண்டே இருப்பான். ஆனால் அவனை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் மட்டுமல்ல, நாம் படிக்கும் இடத்திலும், நாம் பணிபுரியும் இடத்திலும் கூட இது நடக்கலாம். 'என்னதான் தவறு செய்தாலும்' ஒரு சிலர் புகழப்படுவார்கள். 'எல்லாம் நல்லதே செய்தாலும்' ஒருசிலர் மட்டம் தட்டப்படுவார்கள். மட்டம் தட்டப்படுபவர்களின் மனநிலைக்குள் சென்று பார்த்தால் அங்கே அழுகையும், கண்ணீரும், காயங்களும்தான் இருக்கும்.

கிளேடியட்டர் திரைப்படத்தில் ஒரு அருமையான காட்சி வரும். தன் தளபதி மேக்ஸிமஸின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருப்பார் சீசர் அவுரேலியு. அந்நிகழ்வில் பங்கேற்க அவரது மகன் கமாடஸ் வருவான். கமாடஸை இரவில் தனியாகச் சந்திக்கின்ற தந்தை ரோமை நகரை ஆளும் பொறுப்பை தன் தளபதியிடம் விட்டுச் செல்ல விழைவதாகக் கூறுவான். அப்போது அழுதுகொண்டே அவன் தன் தந்தையிடம் முறையிடுவான்:

'அப்பா ஒரு முறை நீங்கள் எனக்குக் கடிதம் எழுதினீர்கள். அதில் மேன்மையான மதிப்பீடுகளாக ஞானம் (wisdom), திடம் (fortitude), நீதி (justice) மற்றும் கட்டுப்பாடு (temperance) என்ற நான்கை எழுதியிருந்தீர்கள். இந்த நான்கில் எதுவுமே என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் வேறு நான்கு மதிப்பீடுகள் இருக்கின்றன: அதீத எண்ணம் (ambition) - ஆம் அதீத எண்ணமும் மதிப்பீடாகலாம். எப்போது எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கும்போது, தைரியம் (courage) - போரில் சண்டையிடுவதுதான் தைரியமல்ல, தைரியத்தின் பரிமாணங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன, நிறைஅறிவு (resourcefulness) மற்றும் அர்ப்பணம் (devotion) - உங்களுக்கும் நம் நாட்டிற்கும். இந்த நான்கில் எதுவுமே உங்க லிஸ்ட்டில் இல்லை. அதற்காக நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை. நான் உங்கள் மகன் அல்ல என்று மறைமுகமாகச் சொல்வதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'

இந்த ஸீனைப் பார்த்தவுடன் என்னையறியாமல் கண்ணீர் வந்து விட்டது. மகனின் மதிப்பீடுகளும் மதிப்பீடுகள்தாம். அவன் ஏதாவது தவறு செய்தால் திருந்துவதற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அல்லது அதற்கு விளக்கமாவது கொடுத்திருக்கலாம். 'நீ எனக்கு வேண்டாம்!' என்று சொல்லும் வார்த்தைகள் அவனை அதிகமாகக் காயப்படுத்துகின்றன. தன் தந்தையைக் கொல்லத் துணிகின்றான். மேலும் அவனது கோபம் தன் தளபதியின் மேல் பொறாமையாக மாறுகின்றது. இந்தச் செயலுக்கு யார் காரணம்? அவனா? அவனது தந்தையா?

'நீ எனக்கு வேண்டாம்' - இந்த வார்த்தைகளைத்தான் ஏசாவைப் பார்த்து ரெபேக்காவும், ஈசாக்கும் சொல்கின்றனர். பாவம், அவன் என்ன செய்வான்? அவனது நடவடிக்கை பிடிக்கவில்லையென்றால் சொல்லியிருக்கலாம்! 'அவன் நேரம் சரியில்லை. எல்லாம் தவறாகவே நடக்கிறது!' பாவம்!

இந்த வார்த்தைகள் உச்சகட்ட வெறுப்பை உமிழ்கின்றன. நம்மிடம் எல்லாத் தகுதியும் இருந்து நாம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும்போதும், ஒன்னுக்குமே உதவாத ஒருவன் மேலான நிலைக்கு வரும்போதும் (எடுத்துக்காட்டிற்காக மட்டுமே!) இந்த உணர்வு இன்னும் கொடூரமாக மாறுகிறது. நான் ஒரு பங்கிற்கு உதவிப் பங்குத்தந்தையாகச் செல்ல அப்பாய்ண்மன்ட் கொடுக்கப்பட்டபோது, அந்த பங்குத்தந்தையிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு, 'எனக்கு அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர் வந்துள்ளது. எப்போ உங்கள் பங்குத்தளத்திற்கு வரலாம்?' என்று கேட்டேன். 'என்ன நீங்களா! நான் வேறு ஒருத்தரையல்லவா கேட்டிருந்தேன். நீங்க வேண்டாம். நீங்க அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர திருப்பிக் கொடுத்திருங்க!' என்றார். 'என்ன வேண்டாம்னு சொல்ல நீ யாரு?' என்ற அவர்மேல் கோபம், வெறுப்பு, எரிச்சல். அந்தக் கோபம் என்மேல் திரும்பி சுயபச்சாதபாமவும் (guilt), தாழ்வு மனப்பான்மையாகவும்  (low self-esteem) சிலநிமிடங்களில் மாறிவிட்டது. ஆனால் அதே பங்கிற்குத்தான் நான் உதவிப் பங்குத்தந்தையாகச் சென்றேன். பின் நானும் அவரும் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம். 'என்னைப் பிடிக்கலயா?' அல்லது 'என்னிடமிருக்கும் குணம் பிடிக்கலயா?' - இரண்டிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன.

அன்றிலிருந்து, 'நீ எனக்கு வேண்டாம்!' என்று சொல்வதன் வலி புரிந்தது. நமக்கெல்லாம் பட்டால்தானே தெரியுது! இதே வார்த்தைகளை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாகவே இருக்கிறேன். 

2. முதல்முறை ஏமாற்றப்பட்ட ஏசா இரண்டாம் முறையும் ஏமாற்றப்படுகிறான். அப்போ தப்பு ஏசா மேல தான். சரி, முதல் தடவ ஏதோ தப்பு நடந்துடுச்சு. இரண்டாம் முறை கவனமாக இருந்திருக்க வேண்டாமா? 'ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்'. ஏமாற்றுவது தவறு என்றால் ஏமாறுவதும் தவறுதான். ஏமாற்றுவது 'நம்பிக்கைத் துரோகம்'. ஏமாறுவது 'என்ன சொன்னாலும் நம்புவது!' இரண்டையும் கட்டியிருக்கும் ஒரு வார்த்தை நம்பிக்கை. நம்பிக்கை ரொம்ப பலவீனமான வார்த்தை. யாரும் எளிதாக ஆட்டிப் பார்த்துவிடலாம். சின்ன வார்த்தை, சின்ன நடத்தை போதும் நம்பிக்கையைச் சரிக்க. 

என் நண்பர் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணியில் என்னை சென்னைக்கு வழியனுப்ப வந்தார். ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தவர் பழம் வாங்கி வருகிறேன் என்று சென்றார். பழங்கள் வாங்கி வந்தார். காலையில் எனக்கு ஃபோன் செய்தபோது, 'நீ கொடுத்த மாதுளம் பழங்களை நான் இன்னும் சாப்பிடவில்லை!' என்றேன். 'என்னது மாதுளம்பழமா, நான் ஆப்பிள் அல்லவா வாங்கிக் கொடுத்தேன்!' என்று அதிர்ந்தார். உண்மையில் என்ன நடந்தது என்றால், ஒருகிலோ ஆப்பிளுக்குக் கடைக்காரரிடம் பணம் கொடுத்திருக்கின்றார் நண்பர். ஆனால் கடைக்காரரோ ஆப்பிளுக்குப் பதில் மாதுளம் பழம் கொடுத்திருக்கின்றார். இந்தத் தவறு எப்படி நடந்தது? கடைக்காரர் நண்பரின் அவசரத்தைப் பயன்படுத்தி ஏமாற்றினாரா? நண்பர் கவனக்குறைவாக இருந்ததால் ஏமாற்றப்பட்டாரா?

காலை எழுந்தது முதல் நாம் ஏமாற்றிக் கொண்டும், ஏமாற்றப்பட்டுக் கொண்டேயும்தான் இருக்கின்றோம். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் மற்றவர்கள் மேல் உள்ள நம் நம்பிக்கை குறைகின்றது. நம்மேலும் வெறுப்பு உண்டாகிறது. ஒருவர் ஏமாற்றிவிட்டார் என்றால், அவரைப்போலவே நாம் எல்லோரையும் எடைபோடுகிறோம். இது நம் கண்களுக்கு 'முற்சார்பு எண்ணம்!' என்ற திரையை இடுகிறது. 

இன்றைக்கும் ரோமையில் எந்த மெட்ரோவிலும், எந்தப் பேருந்திலும் 'கறுப்பாய், பிரவுனாய்' யார் ஏறினாலும் வெள்ளைக்காரச் 'சீமாட்டிகள்' தங்கள் பேக்குகளை ஒளித்து வைப்பார்கள் அல்லது இறுகப் பிடித்துக்கொள்வார்கள். கறுப்பாய் இருப்பவர்கள் திருடுவார்களாம்! 'ரொம்பக் கறுப்பாய் இருந்தால்' சத்தம்போட்டு அவரை அடுத்த நிறுத்தத்திலேயே இறக்கி விடுவார்கள். இதில் எல்லாரும் சேர்ந்து தங்கள் ஒற்றுமையையும் காட்டுவார்கள். இது நடக்கும்போதெல்லாம் எனக்கு அவமானமாக இருக்கும். நிறைய கோபம் வரும். அந்தக் கோபத்தை அவர்கள்மேல் காட்டவேண்டும் என்று நினைக்கத் தோன்றும். ஆனாலும் மனதிற்குள், 'கிழக்கிந்தியக் கம்பெனி என்று வெள்ளைத் தோல்கள் எம் மண்ணிற்கு வந்தபோது நாங்களும் ஒளித்து வைத்திருக்க வேண்டும். நாங்கள் அன்று பல் இளித்தோம். ஆனால் நீங்கள் விவரமானவர்கள். ஒளித்து வைக்கிறீர்கள்' என நினைத்துக் கொண்டு எனக்குள்ளே சிரித்துக் கொள்வேன். இப்படி நடக்கும்போதெல்லாம் பைபிளின் ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டுதான் நினைவிற்கு வரும்: 'என் நாட்டில் என் உறவுகள் எத்தனையோ எனக்காகக் காத்துக்கொண்டு நிற்க, இங்கு நான் பன்றிகள் மேய்த்துக்கொண்டு அவற்றின் நெற்றுக்களால் வயிறு நிரப்பிக் கொண்டிருக்கின்றேனே!' ஆனா ஒன்னு: 'ரொம்ப ரோசப்பட்டால் வாழ முடியாது!' 

3. ரெபேக்காவின் partiality. எதற்காக இளைய மகன் மீது இத்தனை பிரியம் இவருக்கு? 'கடவுள் திட்டமா?' – கடவுள் இங்கு வேண்டாம் ப்ளீஸ். ஒரு கண்ணில் வெண்ணையையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துப் பார்க்கும் நிலையில் நம் குடும்பத்தில், நம் பணியிடத்தில், நம் படிப்பிடத்தில் நாமும் இருக்கின்றோம். ஒருவரைப் பற்றிய நம் மதிப்பீடு அப்படியே நம் உள்ளத்தில் பதிந்து விடுகிறது. 'காலம் தான் மருந்து!' என்பார்கள். 'காலம் அல்ல!' 'அன்புதான் மருந்து!' 'உனக்குரியது உனக்கு. உன் அண்ணனுக்குரியது அவனுக்கு' என்ற நீதி கூட இல்லாமல் இருக்கின்றார் ரெபேக்கா. 'அண்ணனுக்குரியதைத் திருடித் தம்பிக்குக் கொடுப்பதால்' அவரே திருடலுக்கு முதல் காரணமாகிறார். அறநெறியில் அழகாகச் சொல்வார்கள்: 'நல்ல நோக்கம் என்பதற்காக எந்த வழிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கிடையாது' – End never justifies the means!

இன்றும் என்றும் யாரையும் பார்த்து 'நீ எனக்கு வேண்டாம்!' என்று வார்த்தையிலும், செயலிலும் சொல்ல முனையும் முன் இதே வார்த்தைகளை அவர்கள் நம்மிடம் சொன்னால் எப்படி இருக்கும்? என யோசிப்போம்.

'ஆம் மகனே, நீ எந்த மகன்?'

No comments:

Post a Comment