Thursday, September 19, 2013

இவரோடு போகிறாயா?

பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. அவரோ, 'நான் வந்த காரியத்;தைப் பற்றிச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன்' என, லாபான் 'சொல்லும்' என்றான் ... அதற்கு அவர்கள், 'பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்' என்றனர். அப்படியே ரெபேக்காவை அழைத்து, 'இவரோடு போகிறாயா?' என்று அவரைக் கேட்டனர். அவரும் 'போகிறேன்' என்றார் ... அவர் அந்த வேலைக்காரரிடம், 'வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?' என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், 'அவர்தாம் என் தலைவர்' என்றார். (தொடக்கநூல் 24:34,58,65)

கிணற்றடியில் தொடங்கிய பெண் பார்க்கும் படலம் இப்போது ரெபேக்காவின் வீட்டில் தொடர்கிறது. ரெபேக்காவின் சகோதரர் லாபான் ஆபிரகாமின் வேலைக்காரரை வரவேற்று விருந்து படைக்கின்றார். 'தான் வந்த காரியம் நிறைவேறும் முன் உண்ணப்போவதில்லை' என்று அடம் பிடிக்கும் வேலைக்காரர் தான் வந்த காரியத்தைச் சொல்கின்றார். ரெபேக்காவின் தந்தை பெத்துவேலுக்கும், சகோதரன் லாபானுக்கும் அவர் சொன்ன காரியம் பிடித்திருக்கின்றது. 'இது ஆண்டவரால் வந்தது!' என இருவரும் சரணடைகின்றனர். 'நம் ரெபேக்காவையும் ஒரு வார்த்தை கேட்டு விடலாமே?' என்று அவர்கள் அவரின் சம்மதம் கேட்க, அவரும் 'போகிறேன்!' என்ற ஒற்றைச் சொல்லால் தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றார். சொன்னது மட்டுமல்லாமல் உடன் பயணம் செய்கிறார். ஈசாக்கைத் தொலைவில் காண்கின்றார். கண்டதும் காதல். வெட்கத்தால் தம் முக்காட்டை எடுத்து மூடிக்கொள்கின்றார். தம் தாயின் கூடாரத்திற்குள் அவரை அழைத்துச் சென்று மணந்து கொள்கின்றார். தன் தாயின் மறைவு தந்த துயரத்திற்கு ரெபேக்கா என்ற தன் காதலிடம் மருந்தைப் பெறுகிறார்.

பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி 66 வசனங்கள் பேசும் இந்நூலின் ஆசிரியர் திருமண நிகழ்வை ஒரே வசனத்தில் எழுதுவிடுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த ஒரே வசனத்திலும், 'ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு கூர்ந்தார்' என்ற ஒரே சொற்கோர்வையில் முடித்து விடுகிறார். ஏன் இந்த அவசரம்? ஆபிரகாம் அனுப்பிய வேலைக்காரர் ஆபிரகாமிடம் திரும்பாமல் ஈசாக்கிடம் திரும்புவது ஏன்? தன் கூடாரத்திற்கு அழைத்துச் செல்லாமல், தன் தந்தையிடம் அழைத்துச் செல்லாமல் இறந்து போன, இப்போது காலியாய் இருக்கின்ற தன் தாய் சாராவின் கூடாரத்திற்கு அழைத்துச் செல்வது ஏன்? ஆபிரகாமிற்கு பெண் பிடித்திருந்ததா? பிடிக்கவில்லையா?

பெண் பார்க்கும் படலத்தில் இரண்டாம் பகுதி நமக்கு வைக்கும் பாடங்கள் என்ன?

1. முதன்மையானதை முதன்மையானதாக வைப்பது. ஸ்டீபன் கோவே என்ற மேலாண்மையியல் அறிஞரின் புகழ்பெற்ற 'The Seven Habits of Highly Effective People' வைக்கும் வெற்றியாளர்களின் முதல் பண்பு இதுதான்: Put First Things First - முதன்மையானதை முதன்மையானதாக வைப்பது. என்னதான் விருந்து, உபசரிப்பு என எல்லாம் தடபுடலாக இருந்தாலும் வேலைக்காரர் தன் வேலையில் கருத்தாய் இருக்கிறார். 'தான் வந்த காரியம் விருந்து அல்ல, மாறாக, தன் தலைவருக்குத் தான் கொடுத்த வாக்குறுதி!' என்பதில் உறுதியாய் இருக்கும் அவர், 'நான் வந்த காரியம் நிறைவேறுமுன் உண்ணப்போவதில்லை!' என்கிறார். என்ன ஒரு துணிச்சல்? நம்ம ரோட்ல ஒருத்தர் போறாருன்னு வச்சிக்குவோம். அவர்மேல் இரக்கப்பட்டு அவருக்கு சோறு போட நாம் முனையும்போது, 'நான் வந்த காரியம் ஒன்னு இருக்கு!' என்று அவர் சொன்னால் நாம் எப்படி ரியாக்ட் பண்ணுவோம்? லாபான் ரொம்ப கூலாக, 'சொல்லும்' என்கிறான். சொன்னவுடன் வேலை முடிந்து விடுகிறது. 

முதன்மையானதை முதன்மையானதாக வைக்க வேண்டுமென்றால் முதலில் முதன்மையானது எது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். இலக்குத் தெளிவில்லையென்றால் நம்மால் எதையும் முதன்மைப்படுத்த முடியாது. துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கும், கொளரவர்களுக்கும் வைத்த வில்வித்தைப் போட்டியை நாம் அறிவோம். புறாவின் கண்ணை மட்டும் இலக்காக வைக்கின்ற அர்ஜூனர் மட்டுமே வெற்றி பெறுகின்றார். மரமும் வேணும், கிளையும் வேணும், இலையும் வேணும், புறாவும் வேணும், கண்ணும் வேணும் என்றால் வெற்றி பெற முடியாது. அப்படி நினைக்கிறவர்கள் எல்லாவற்றிலும் சமரசம் செய்பவர்களாக மாறிவிடுவார்கள். 

நமக்குத் தெரிந்த ஒரு கதை. முதன்மைப்படுத்தலுக்குச் சொல்லப்படும் கதை. ஒரு கல்லூரிப் பேராசிரியர் தன் வகுப்பிற்குள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வருகின்றார். மேலும் தன் கைப்பையைத் திறந்து தான் கொண்டு வந்த பெரிய கற்கள், சிறிய கூழாங்கற்கள், மண் மற்றும் தண்ணீரை வெளியே எடுத்து வைக்கின்றார். மற்றொரு பையைத் திறந்து ஒரு beer பாட்டிலை எடுத்து வைக்கின்றார். மாணவர்கள் மத்தியில் சலசலப்பு. பேராசிரியர் கேட்கின்றார்: 'இக்கண்ணாடிக் குடுவையை நிரப்ப வேண்டுமெனில் முதலில் எதைப் போட வேண்டும்?' சிலர் கற்கள் என்கின்றனர். சிலர் மண் என்கின்றனர். சிலர் தண்ணீர் என்கின்றனர். ஆனால் ஆசிரியர் முதலில் பெரிய கற்களையும், பின்னர் கூழாங்கற்களையும், பின்னர் மண்ணையும், பின்னர் தண்ணீரையும் ஊற்றி கண்ணாடிக் குடுவையை நிரப்புகின்றார். மாணவர்கள் 'வாவ்!' என கைதட்டுகின்றனர். 'என்ன ஓட்றீங்களா?' என்று கேட்கின்ற பேராசிரியர் தொடர்ந்து, 'கண்ணாடிக் குடுவை என்பது வாழ்க்கை. பெரிய கற்கள் என்பவை நம் இலட்சியங்கள். கூழாங்கற்கள் என்பவை நாம் சம்பாதிக்கும் பொருட்கள் மற்றும் பணம் மற்றும் அதற்காக நாம் செய்யும் வேலை. மண் என்பது நாம் அன்றாடம் செய்ய வேண்டிய கட்டாய வேலைகள். தண்ணீர் என்பது நம் பொழுதுபோக்கு அம்சங்கள். இவற்றில் பெரிய கற்களை விடுத்து மற்றவற்றைக் கொண்டு மட்டும் நாம் நிரப்ப நினைத்தால் இறுதியில் அவைகளுக்கு இடமில்லாமல் போய்விடும். நாம் அதைத் திணிக்க நினைத்தால் அது குடுவையையே உடைத்து விடும்!' என்கிறார். ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தி, 'அப்படின்னா அந்த beer பாட்டில் எதுக்கு?' என்கிறான். பேராசிரியர் சொல்கிறார், 'வாழ்க்கை எவ்வளவுதான் கஷ்டமாக இருந்தாலும், நம் இலட்சியங்களும், வேலைகளும், கடமைகளும் நம்மை நெருக்கினாலும் நம் நண்பர்களோடு அமர்ந்து beer குடிக்க கண்டிப்பாக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த நட்பு எல்லா அழுத்தத்திலுமிருந்து விடுதலை தரும்!'

2. 'இவருடன் போகிறாயா?' இதன் எபிரேய மொழிச்சொல்லாடலை 'அவரோடு போகிறாயா?' என்றும் மொழிபெயர்க்கலாம். நாம் 'அவரோடு' என்ற பயன்பாட்டிலேயே எடுத்துக்கொள்வோம். 'இவரோடு!' என்பது உடனடியாக வேலைக்காரரைக் குறித்தாலும், அது இறுதியாக 'அவரோடு' என்று ஈசாக்கையே சுட்டுகின்றது. இந்த வார்த்தைகளில் மூன்று அர்த்தங்கள் உள்ளன:

அ. முதலில் சம்மதம் கேட்பது. இன்றைக்கு பல திருமணங்கள் திடீரென்று முறிந்து விடுவதற்குக் காரணம், 'என்ன ஒரு வார்த்தை கேட்டீங்களா?' என்ற கேள்விதான். அதிலும், 'பெண் என்றால் பெற்றோர் சொல் கேட்க வேண்டும்' என்றும் 'பொண்ணுக்கு என்ன சார் தெரியும், நாம முடிவு எடுப்போம்' என்றும் 'நான் என்ன சொன்னாலும் என் பொண்ணு கேட்பா!' என்றும் ஆணாதிக்கம் செய்யும் பெற்றோர்கள், உடன்பிறந்தோர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். எபிரேய சமுதாயம் பெண்ணை மதிக்கும் சமுதாயம். பெண் ஒரு சக்தி. பெண் இல்லையென்றால் ஆண் இல்லை என உணர்ந்த சமுதாயம். ஆகையால்தான் சம்மதம் கேட்கிறது. இது திருமணத்திற்கு மட்டுமல்ல. எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். நாம் மற்றவர்களிடம் கேட்கும் சம்மதம் அவர்களை நாம் மதிக்கிறோம் என்பதையே காட்டுகின்றது. இன்று திருமண வாழ்க்கை மட்டுமல்ல, துறவற வாழ்க்கையும் புளித்துப் போவதற்குக் காரணம் இதுதான் - யாரும் யார் சம்மதத்தையும் கேட்பதில்லை. 'உன்னை திருமணம் முடிச்சது ஒரு குற்றமா? நீ சொல்றதயெல்லாம் நான் ஏன் கேட்கணும்?' னு ஒரு பெண் தன் கணவரைப் பார்த்துக் கேட்கவோ, 'உங்க சபையில அல்லது உங்க மறைமாவட்டத்தில சேர்ந்தது ஒரு குற்றமா? எப்ப பார்த்தாலும் உங்க இஷ்டத்துக்கே செய்றீங்க? நான் என்ன உங்க கைப்பொம்மையா?' என்று ஒரு ஃபாதரோ, ஒரு சிஸ்டரோ, ஒரு பிரதரோ தன் மேலிடத்தைப் பார்த்துக் கேட்க ரொம்ப நேரம் ஆகிவிடாது. யாரும் யாருக்கும் எஜமானரல்ல – கட்டளையிடுவதற்கு. 'நீயும் இந்த உலகத்திற்குத் தனியாகத்தான் வந்தாய், உலகை விட்டு தனியாகத்தான் போவாய், நானும் தனியாகத்தான் வந்தேன், தனியாகத்தான் போவேன்!' - இந்த இடைப்பட்ட நாட்களில் நீ ஏன் என்னை அரசாள நான் விடவேண்டும்? நீ என்ன என்னைவிட பெரிய ஆளா? என்னை எனக்குத் தெரிந்ததைவிட உனக்கு என்ன தெரியும்?

ஆ. 'அவரோடு'. 'அவரோடு' என்பது திருமண நிகழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகவே பைபிளில் உள்ளது. சாம்சன் திம்னாவில் பெண் பார்த்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும்போது 'அவரோடு' இருக்க முப்பது பேர் கூட்டி வரப்படுகின்றனர் (நீதித்தலைவர்கள் 14:11). மேலும் இயேசு தம் சீடர்களில் பன்னிரண்டு பேரை திருத்தூதர்களாய் நியமித்தபோது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பணி 'அவரோடு இருக்க' (மாற்கு 3:14) என்பது தான். 'அவரோடு' இருப்பதில் ரொம்ப ரிஸ்க் இருக்கின்றது. அவர் யார் என்பது தெரியாது? அவர் குடிப்பாரா? அவர் அடிப்பாரா? அவர் பாசம் காட்டுவாரா? எதுவுமே தெரியாது. ஆனால் 'அவரோடு' செல்ல விழைகின்றார் ரெபேக்கா. 'அவரோடு' செல்வது என்பது இருட்டில் எடுத்து வைக்கும் காலடி போன்றது. பள்ளம் இருக்குமா? மேடு இருக்குமா? முள் இருக்குமா? மலர் இருக்குமா? எதுவும் தெரியாது. திருமணத்திலும், துறவறத்திலும் ஒருவர் மேற்கொள்ளும் பயணமும் இப்படித்தான்: இருட்டில் பயணம். இருந்தாலும் நாம் ரிஸ்க் எடுக்கின்றோம்.

இ. 'அவரோடு' என ஒருவர் வருகிறார் என்றால் அவர்மேல் நமக்குள்ள கடமை. 'அவரோடு' என்பது ஒருவழிப் பாதை அன்று. நான் அவரோடு செல்கிறேன் என்றால், அவரும் என்னோடு இருக்க வேண்டும். நான் அவரோடு. ஆனால் அவர் வேறொருவரோடு என்றால் வாழ்க்கை எப்படி இனிமையாக இருக்கும்? திருமண அன்பிலும், துறவற அர்ப்பணத்திலும் உரிமைகளும் இருக்கின்றன. கடமைகளும் இருக்கின்றன. உரிமைகள் மட்டும் போதும். கடமைகள் வேண்டாம் எனச் சொல்ல முடியாது. 'ஒரு குச்சியின் ஒரு முனையைக் கையில் எடுக்கும்போது மறுமுனையும் சேர்ந்தேதானே வரும்!'

3. 'நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?' கேட்கின்றார் ரெபேக்கா. அப்படி வந்து கொண்டிருந்தவர் நம் ஹீரோ ஈசாக்கு. தன் தாயின் கூடாரத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். தான் அவரை மனைவியாக்குமுன் முதலில் தன் தாயாக்குகின்றார். இதுதான் திருமண உறவின் மையம். ஒரு பெண் ஒருவருக்கு மனைவியாகுமுன் அவருக்குத் தாயாக வேண்டும். ஒவ்வொரு ஆணும் திருமணத்தில் இரண்டாம் முறை பிறக்கிறான். அவ்வகையில் பெண் அவனின் இரண்டாம் கருவறையாகிறாள். 'மனைவியாக' மட்டும் பார்க்கும் அன்பு காமத்தில் முடிந்து விடுகிறது. 'தாயாகப்' பார்க்கும் அன்பே அவளின் தியாகத்தையும், பகிர்வையும், அரவணைப்பையும், கரிசணையையும் நமக்கு உணர்த்துகிறது. திருமணம் முடித்துச் செல்லும் பெண்ணின் முதல் குழந்தை அவரது கணவன். ஒரு ஆணின் இரண்டாம் தாய் அவனது மனைவி. 

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 'துறவியும் மீனும்' என்ற ஐந்து நிமிட ஜென் குறும்படத்தைப் பற்றித் தன் வலைப்பக்கத்தில் எழுதுகின்றார்:

'புத்த மடாலயம் ஒன்றில் ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒருநாள் ஒரு புத்த பிக்கு அதில் அழகாக நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனைப் பார்க்கிறான். உடனே அதைப் பிடிக்க வேண்டும் என நினைத்து ஒரு தூண்டில் எடுத்து வந்து மீன்மேல் வீசுகிறான். மீன் தப்பி ஓடுகிறது. பின் வலையை விரிக்கிறான். வலையிலும் அது விழவில்லை. இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமேயில்லை. அந்த மீனை எப்படிப் பிடிப்பது என சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். அடுத்த நாள் தன் நண்பர்களிடம் அதைப்பற்றியே பேசுகிறான். மீன் பிடிப்பது எப்படி? என்று புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனால் அவனால் மீனைப் பிடிக்கவே முடியவில்லை. அம்பு விட்டு;ப் பார்க்கிறான். உள்ளே இறங்கி அதை விரட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். முடியவேயில்லை. இறுதியாக, மீனைப் பிடிக்க நினைப்பது முட்டாள்தனம், அதன் போக்கில் நாமும் கலந்துவிட வேண்டும், அதுவே மீனைப் புரிந்துகொள்ளும் வழி என நினைத்து மீனோடு நீந்துகிறான். அவனும் மீனும் நெருக்கமாகி விடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இருவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளியை நோக்கி மகிழ்ச்சியாக வானில் தாவி மறைகிறார்கள்'.

திருமணமும், துறவறமும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை மீனாக நினைத்து அதைப் பிடித்து உரிமையாக்கிக் கொள்ள நினைத்து தூண்டில், அம்பு, வலை, புத்தகம் என எவற்றைப் பயன்படுத்தினாலும் அவைகளால் பயனில்லை. ஒருவர் மற்றவரோடு இணைந்து நீந்தத் தொடங்கினால் இருவரும் ஒன்றிணைந்து விடலாம்.

'இவர் யார்?' எனத் தெரியாமலே ஈசாக்கைக் கரம் பிடிக்கிறார் ரெபேக்கா. அவரைத் தன் தாயாக்கி, பின் தன் மனைவியாக்குகின்றார் ஈசாக்கு. இருவரும் இணைந்து கடவுளின் கைகள் என்ற நீர்த்தேக்கத்தில் நீந்துகின்றனர். ஒருவர் மற்றவரோடு கலந்துவிடுகின்றனர். இதுவே திருமண அன்பு! இதுவே துறவற அர்ப்பணிப்பு!

'இவரோடு போகிறாயா?'

'அவர் யார்?'

1 comment:

  1. Dear yesu great interpretation. ..I ve seen that Zen shrot film suggested by s.ramakrishnan.

    ReplyDelete