Thursday, July 15, 2021

கோவிலைவிடப் பெரியவர்

இன்றைய (16 ஜூலை 2021) நற்செய்தி (மத் 12:1-8)

கோவிலைவிடப் பெரியவர்

இயேசு தன் சமகாலத்தவர்கள்மேல் ஒரு பக்கம் பரிவு காட்டினாலும், இன்னொரு பக்கம் அவர்களை உரசிக்கொண்டும் இருந்தார்.

ஓய்வுநாள் பற்றிய சட்டத்தை இயேசுவும் அவருடைய சீடர்களும் மீறுவதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். மீறல் நடக்கும்போதுதான் மாற்றம் நடக்கிறது. எடுத்துக்காட்டாக, நம் மண்ணில் உள்ள சாதியப் பாகுபாடு. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தங்களை உயர்வகுப்பினர் எனக் கருதி மற்றவர்களைத் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லி, அதை நியாயப்படுத்த புனித நூல்களைக் கையிலெடுக்கின்றனர். 'ஆம்! நீங்கள் சொல்வது சரி!' என்று சொல்லிக்கொண்டே மற்றவர்கள் இருந்தால் இன்னும் நாம் அடிமைத்தனத்தில்தான் இருந்திருப்போம். 'ஏன் இப்படி இருக்க வேண்டும்?' என்ற கேள்வி எழுந்தவுடன் மீறல் நடக்கிறது. மீறல் நடந்தவுடன் மாற்றம் வருகிறது.

இயேசுவின் சமகாலத்தில் சமயம் நிறைய அதிகாரம் கொண்டிருந்தது. இன்றுவரையும் அப்படியே.

அறிவியலைப் பொருத்தவரையில் ஒரு நாள் என்பது 24 மணி நேரங்கள் அல்லது, கோளின் சுழற்சி என்று இருந்தாலும், இத்தனை மணி நேரம் நல்ல நேரம், இத்தனை மணி நேரம் கெட்ட நேரம் என வரையறுப்பது சமயம். ஆண்டுக்கு இவ்வளவு நாள்கள் என அறிவியல் கணக்குச் சொன்னாலும், அவற்றில் சிலவற்றைப் புனித நாள்கள், திருநாள்கள், ஓய்வுநாள்கள் என சமயம் வரையறுத்து மனிதர்களில் ஒருவித அச்சத்தை உருவாக்குகிறது.

பசியாக இருந்த சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

தங்கள் வயல்கள் கதிர்களைக் கொய்தனரா? அல்லது இன்னொருவரின் வயல்களின் கதிர்களைக் கொய்தார்களா? என்று தெரியவில்லை. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் கிராமங்களிலும் யாரும் யார் வயலுக்குள்ளும் நுழைந்து தங்கள் வயிற்றுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இப்போது வயலும் இல்லை, கதிரும் இல்லை, கிராமத்தில் ஆள்களும் இல்லை.

தாவீது செய்தார், தாவீதோடு இருந்தவர்கள் செய்தனர், குருக்கள் செய்தனர் எனச் சுட்டிக்காட்டுவதன் வழியாக, தன்னைத் தாவீதின் மகன் என இயேசு முன்நிறுத்துகின்றார்.

மேலும், அவர்கள் மேல் இரக்கம் காட்டுமாறும் அழைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய முதல் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தயாராகின்றனர். பகிர்தலே இத்திருவிழாவின் முதன்மையான இலக்காக இருக்கிறது.

இன்று நாம் கார்மேல் அன்னையின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். பாகாலின் பொய் இறைவாக்கினர்களை கார்மேல் மலையில் எதிர்கொள்கின்ற இறைவாக்கினர் எலியா, உண்மையான தன் இறைவனுக்குத் தன் அர்ப்பணத்தை வாக்களிக்கின்றார். உத்தரிய அன்னை என்றழைக்கப்படும் கார்மேல் அன்னை என்றும் தன் இறைவனுக்கு அர்ப்பணத்தை வாக்களித்தார்.

2 comments:

  1. பரிவும்,உரசலும் மாறி மாறி வருகையில் தான் உறவும் பரிமளிக்கும் என்பதை இயேசுவும் உணர்ந்திருந்தார் என்பதை அவரின் சீடர்களுடனான அவரது உறவிலும் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் “யார் வயலுக்குள்ளும் யாரும் போகலாம்….ஆனால் இப்போது வயலும் இல்லை, கதிரும் இல்லை,கிராமத்தில் ஆட்களும் இல்லை” எனும் வரிகள் நம் இன்றைய விவிசாயிகளின் அவல நிலையையும், அவர்களுக்கு பரிவு காட்ட யாருமில்லை என்ற உண்மையையும் புரிய வைக்கிறது.

    பரிவும்,பகிர்தலும், அர்ப்பணமும் அங்கங்கே எட்டிப்பாக்கும் இன்றையப் பதிவுக்கு இலக்கணமானவர் இயேசு மட்டுமில்லை…. பழைய ஏற்பாட்டின் எலியாவும் மற்றும் தான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதையும் ஒரு அர்ப்பண உணர்வோடு வாழ்ந்த நம் அன்னையுமே என்று சொல்கின்றன இன்றைய வரிகள். கார்மேல் அன்னை இல்லை உத்தரிய அன்னை… எப்படி , எப்பெயரில் அழைக்கப்படாலும் “அவள் நம் அன்னை” என்பதே உண்மை.

    நம் வாழ்வையும் ஒரு அர்ப்பண உணர்வோடு வாழ அழைப்பு விடுக்கும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete