Saturday, July 10, 2021

வியத்தகு மாற்றங்கள்

ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

வியத்தகு மாற்றங்கள்

பழைய பொருள்கள் விற்கக்கூடிய கடை ஒன்றில் வயலின் ஒன்று நெடுநாள்களாகக் கிடந்தது. அதை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதற்காக கடை உரிமையாளர் அதன் விலையைக் குறைத்துக்கொண்டே வந்தார். அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் அதை யாராவது ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்துவிடவும் நினைத்தார். 'இதை வைத்து அடுப்புதான் எரிக்க முடியும்' என்று பலர் அதை வாங்குவதைத் தவிர்த்தனர். ஒருநாள் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டது. கடையில் ஓரமாகக் கிடந்த வயலின் அவருடைய பார்வையை ஈர்த்தது. 'இதை நான் பார்க்கலாமா?' எனக் கேட்ட அவர், அங்கிருந்த பழைய துணியால் அதை நன்றாகத் துடைத்து, அறுந்துபோன கம்பிகளை இழுத்துக் கட்டி, அந்த வயலினை மீட்டத் தொடங்குகின்றார். வயலின் இசை கேட்ட மக்கள் அப்படியே மெய்மறந்து நிற்கின்றனர். சிறிது நேரம் மீட்டிய அவர் அதை அங்கேயே வைத்துவிட்டுத் தன் வழியே தொடர்கின்றார். 'இந்த வயலின் எனக்கு வேண்டும்' என்று ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு அதை வாங்க விரும்புகின்றனர். உரிமையாளரோ அதைத் தனக்கென வைத்துக்கொள்ள விரும்பினார்.

அடுப்பெரிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சொல்லப்பட்ட வயலின் வியத்தகு இசை எழுப்பும் இசைக்கருவியாக மாறியது எப்படி?

இசைக்கலைஞனின் தொடுதல் அதன் மதிப்பை மாற்றுகிறது.

இறைவனின் தொடுதல் மனிதரில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது எனச் சொல்கிறது இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தை அதன் வரலாற்றுப் பின்னணியில் காண்போம். சாலமோனுக்குப் பிறகு ஒருங்கிணைந்து இஸ்ரயேல் பேரரசு, வடக்கே 'இஸ்ரேல்', தெற்கே 'யூதா' என்று இரண்டாக உடைகின்றது. எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதாவில் தாவீது அரசரின் தனிப்பெரும் வழிமரபினர் என்றும், உடன்படிக்கையின் பணியாளர்கள் என்றும் தன்னை அழைத்துக்கொண்ட அவருடைய மைந்தர்கள் ஆட்சி செலுத்துகின்றர். வடக்கே சமாரியாவைத் தலைநகரமாகக் கொண்டு தாவீது அரசரின் நேரடி வழிமரபில் வராதவர்கள் ஆட்சி செய்கின்றனர். வடக்கே இருந்த பல முதன்மையான வழிபாட்டுத் தலங்களில் பெத்தேலும் ஒன்று. குலமுதுவர் யாக்கோபின் காலத்திலிருந்து பெத்தேல் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்துவந்தது.

வடக்கே நிலவிய உடன்படிக்கைப் பிறழ்வுகளையும், கடவுளின் திருச்சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டிக்கவும், வடக்கே உள்ள அரசர்களையும் தலைவர்களையும் எச்சரிக்கவும் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆமோஸை அனுப்புகின்றார். ஆமோஸ் தெற்கே உள்ள யூதாவைச் சார்ந்தவர். அவருடைய சமகாலத்தவரான ஓசேயா போல அன்று நிலவிய சமூக அநீதியையும் பிறழ்வுகளையும் கண்டிக்கின்றார் ஆமோஸ். தெற்கே இருந்த வந்த ஒருவன் நமக்கு அறிவுரை சொல்வதா என்று நினைக்கின்றனர் வடக்கே உள்ள தலைவர்கள்.

இந்தப் பின்புலத்தில் பெத்தேலின் தலைமைக்குருவான அமட்சியாவுக்கும் ஆண்டவராகிய கடவுளின் இறைவாக்கினரான ஆமோஸூக்கும் இடையே ஏற்படும் முரண்தான் இன்றைய முதல் வாசகம். பெத்தேலின் தலைமைக்குரு என்ற நிலையில் அமட்சியா அதிகாரம் பெற்றிருந்தவராகவும், வடக்கே உள்ள அரசர்களின் ஆலோசகராகவும் இருந்தார். அரச அலுவலர் என்ற அடிப்படையிலும் அதிகாரம் பெற்றிருந்தார். அரசரின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், அரசருடைய பெயரால் அவ்வழிபாட்டுத் தலத்தை நிர்வாகம் செய்வதும் அவருடைய பணியாக இருந்தது.

ஆனால், அமட்சியாவுடன் ஒப்பிடும் போது ஆமோஸ் ஆடு மேய்ப்பவர், தோட்டக்காரர். இறைவாக்கினர் பணி அல்லது இறைவாக்கினர் குடும்பப் பின்புலம் என்ற எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. ஆனால், அவருடைய இறைவாக்கினர் அதிகாரத்தின் ஊற்றாக இருந்தது கடவுளின் அழைப்பு. ஆமோஸ் தன் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசரின் அதிகாரத்தின் பெயரால் ஆணையிடுகின்றார் அமட்சியா. ஆனால், ஆமோஸ் தன் அதிகாரம் தன்னுடையது அல்லது இறைவனுடையது எனத் துணிந்து நிற்கின்றார். மேலும், ஆமோஸ் இறைவாக்கினரின் பணியின் உண்மைத்தன்மையை விளக்குவதாகவும் இப்பகுதி உள்ளது. கடவுளின் குறுக்கீடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை அரசருக்குச் சவால்விடும் இறைவாக்கினராக மாற்றுகிறது. ஆற்றல் இல்லாத ஒருவரை ஆற்றல்படுத்துகின்றது.

ஆக, இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றத்தை ஆமோஸ் வாழ்வில் ஏற்படுத்துகிறது.

இரண்டாம் வாசகம் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடிதங்களைப் போல இக்கடிதம் வாழ்த்து மற்றும் முன்னுரையுடன் தொடங்குவதில்லை. இதன் ஆசிரியர், இறைவனை நோக்கி எழுப்பப்படும் புகழாஞ்சலி போல இக்கடிதத்தைத் தொடங்குகின்றார். நம்பிக்கையாளர்கள்மேல் 'கடவுள் பொழிந்துள்ள விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி' அனைத்தையும் அவர் அறிந்து ஏற்றுக்கொள்கின்றார்.

'தூயாராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' எனச் சொல்கின்றார் ஆசிரியர். ஆக, நம்பிக்கையாளர்கள் தூய்மையாகவும் மாசற்றும் இருந்ததால் கடவுள் அவர்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தூய்மையான மற்றும் மாசற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இந்த நோக்கம் கிறிஸ்து வழியாக நிறைவேறுகிறது. கிறிஸ்துவே தன் இரத்தத்தால் அவர்களை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றார். கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவான அவர்கள் மேன்மையான எதிர்காலத்தைப் பெறுகின்றனர்.

இரண்டாவதாக, கிறிஸ்து வழியாக அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம் என எழுதுகின்றார். ஆக, நம்பிக்கையாளர்கள் வழியாக இறைவனின் திருவுளம் நிறைவேறுகிறது. இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கையாளர்கள் முதன்மையான பங்காற்றுகின்றனர்.

இறுதியாக, இந்த அழைப்பு அல்லது மேன்மையான நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார் ஆசிரியர். வேற்று தெய்வங்களை வணங்கி, தாழ்வான வாழ்க்கை நிலையில் இருந்த மக்கள் இப்போது தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்களாக இருக்கின்றனர். 'முத்திரையிடப்படுதல்' என்பது முதன்மையாக தெரிவுசெய்யப்படுதலைக் குறிக்கிறது. அதாவது, அவர்கள் எல்லாரையும் போன்றவர்கள் அல்லது முகமற்றவர்கள் அல்லர். மாறாக, தங்களுக்கென ஒரு மேன்மையான அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள். இந்த மேன்மை இறைவனின் அழைப்பால் வருகின்றது.

ஆக, கிறிஸ்துவின் ஒப்புரவுச் செயல் வழியாக புறவினத்து மக்களையும் தன்னோடு ஒப்புரவாக்கிக்கொள்கின்ற கடவுள், நம்பிக்கையாளர்களுக்கு முத்திரையிடப்பட்டவர்கள் என்ற மேன்மையை வழங்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம், திருத்தூதர்கள் வாழ்வில் நிகழ்ந்த வியத்தகு மாற்றத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியின் இப்பகுதி வரை இயேசுவே நற்செய்தியைப் போதித்துக்கொண்டும், பிணிகளை நீக்கிக்கொண்டும், பேய்களை ஓட்டிக்கொண்டும் இருந்தார். ஆனால், இதுமுதல் அவருடைய சீடர்கள் அப்பணிகளைச் செய்வர். கலிலேயப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்துகொண்டும், வரி வாங்கிக்கொண்டும், அல்லது தீவிரவாதிகளாகவும் இருந்தவர்களை தான் செய்த அனைத்துப் பணிகளையும் செய்யுமாறு ஆற்றல்படுத்துகின்றார். கடவுளின் ஆற்றல் இவ்வுலகில் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமாக அவர்கள் பேய்களை ஓட்ட வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரங்களாக இருக்கின்ற அனைத்தையும் விலக்கிவைத்துவிட்டு இறைவனின் பராமரிப்பை மட்டும் நம்பி அவர்கள் பயணம் செய்ய வேண்டும். அவரைப் போலவே அவர்கள் நிராகரிக்கப்பட்டாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புறவினத்துப் பகுதிகளுக்குப் பயணம் செய்கின்ற யூதர்கள் புறவினத்து நகரங்களை விட்டு வெளியேறும்போது, தங்கள் கால்களில் ஒட்டியுள்ள தூசியை உதறிவிட்டுத்தான் தங்கள் ஊருக்குள் நுழைவர். இதே செயலைத் தன் சீடர்களும் செய்ய வேண்டும் எனச் சொல்வதன் வழியாக, நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் புறவினத்தார் போலக் கருதப்படுவர் என மறைமுகமாகச் சொல்கின்றார் இயேசு.

இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுச் சென்றவர்கள் போதிக்கின்றனர், பேய்களை ஓட்டுகின்றனர், பிணிகளை நீக்குகின்றனர்.

சாதாரண மனிதர்களாக இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் அதிகாரத்தால் வியத்தகு ஆற்றல் பெற்றவர்களாக மாறுகின்றனர்.

ஆக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, இறைவனின் தொடுதல் அல்லது அதிகாரம் சாதாரண மனிதர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் வியத்தகு மாற்றங்களை நம் கண்முன் கொண்டுவருகின்றது. தெக்கோவா நகரத்தின் ஆடு மேய்ப்பவர் இஸ்ரயேலின் இறைவாக்கினராக மாறுகின்றார். சிலைவழிபாட்டிலும் அறநெறிப் பிறழ்விலும் கிடந்த எபேசு நகர மக்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் மாறுகின்றனர். கலிலேய மீனவர்களும் பாவிகள் எனக் கருதப்பட்டவர்களும் இறைவன் மட்டுமே செய்யக்கூடிய நலம் தரும் பணியையும், தீமை அகற்றும் பணியையும் செய்கின்றனர்.

இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை நாம் விவிலியத்தின் பல இடங்களில் வாசிக்கின்றோம். தன் மாமனாரின் மந்தையைப் பராமரித்து வந்த மோசே மிகப்பெரும் தலைவராக மாறுகின்றார். சக்கேயு அனைத்தையும் இழக்க முன்வருகின்றார். சமாரியப் பெண் முதன்மையான நற்செய்திப் பணியாளர் ஆகின்றார்.

இறைவன் நம் வாழ்வில் எப்படி வியத்தகு மாற்றங்களை நிகழ்த்துகிறார்?

(அ) நம் வாழ்க்கைப் பாதையை மாற்றுவதன் வழியாக

ஆடுமேய்க்கும் பணி செய்துகொண்டிருந்த ஆமோஸின் வாழ்க்கைப் பாதையை மாற்றி வடக்கே இஸ்ரயேலுக்கு இறைவாக்கினராக அனுப்புகின்றார் கடவுள். ஆசிரியப் பணி செய்ய வந்த அன்னை தெரசாவின் பாதையை மாற்றுகின்றார். பேராசிரியப் பணி செய்துகொண்டிருந்த சவேரியாரின் பாதை மாற்றப்படுகிறது. போரில் குண்டடிபட்டுக் கிடந்த இனிகோவின் பாதை மாறுகிறது. ஆக, பாதை தவறுவதில் அல்ல, மாறாக, பாதை மாறுவதில் இறைவனின் அருள்கரம் இருக்கிறது.

(ஆ) புதிய நோக்கு அல்லது இலக்கை நிர்ணயம் செய்வதன் வழியாக

எபேசு நகர மக்களின் வாழ்வியல் நோக்கு அல்லது இலக்கை மாற்றுகின்றார் கடவுள். தங்கள் சிலைகளின்மேல் இருந்த பார்வையை அவர்கள் இனி இயேசுவின் சிலுவை நோக்கித் திருப்ப வேண்டும். நம் வாழ்வின் நோக்கங்களையும் இலக்குகளையும் சில நேரங்களில் இறைவனின் திருப்புகின்றார், அல்லது கூர்மைப்படுத்துகின்றார்.

(இ) நம்மை வெறுமையாக்குவதன் வழியாக

உணவு, பை, செப்புக்காசு, உடை போன்றவற்றால் தங்கள் கைகளை நிரப்பிக்கொண்டனர் திருத்தூதர்கள். வெறுமையான கைகளே இறைவனின் அருளை நிறைவாகக் கொள்ள முடியும் என்பதற்காக, அவர்களின் நிறைந்த கைகளை வெறுமையாக்குமாறு பணிக்கின்றார். 'இது ஏன் இன்று நம்மை விட்டுப் போனது!' என்று நாம் எதையாவது குறித்து ஏங்கி, வெறுமையை உணர்கின்றோம் என்றால், கடவுள் அதைவிட மேன்மையான ஒன்றை நம் கைகளில் கொடுக்கப்போகிறார் என்பது பொருள். ஒரே கையில் செப்புக்காசையும் இறைவனின் அருளையும் பெற்றுக்கொள்ள இயலாது என்பது இயேசுவின் போதனை.

இறுதியாக,

இன்று நாம் பலருடைய வாழ்வில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவருகிறோம். பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டுவருகின்றனர். ஆசிரியருடைய உடனிருப்பு மாணவரின் அறிவைப் பெருக்குகிறது. அருள்பணியாளரின் உடனிருப்பு இறைமக்களின் ஆன்மிக மாற்றத்திற்கு உதவுகிறது. மருத்துவரின் இருத்தல் நோய் நீக்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் நம்மை முழுமையாகப் புரட்டிப்போட்டு, வியத்தகு மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

நாம் பாதை மாறத் தயாராக இருக்கும்போதும், நம் இலக்கு மற்றும் நோக்கைக் கூர்மைப்படுத்தும்போதும், நம் கைகளை வெறுமையாக்கும்போதும் அவரின் தொடுதலை உணர முடியும்.

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்!' என்னும் திருப்பாடல் ஆசிரியரின் (காண். திபா 85) விண்ணப்பமே நம் விண்ணப்பமாகவும் இருப்பதாக!

2 comments:

  1. ஆண்டின் பொதுக்காலம் 15 ம் ஞாயிறின் மையப்பொருளாக “ இறைவனின் தொடுதல் மனிதனில் வியத்தகு செயல்களைச் செய்கிறது” என்பதை அனைத்து வாசகங்களிலும் பார்க்க முடிகிறது.

    ஆடு மேய்த்த ஆமோசை இறைவாக்கினராக மாற்ற இறைவனால் முடியுமென்றால்….கிறிஸ்துவின் ஒப்புரவுச் செயல் வழியாகப் புறவினத்து மக்களையும் தன்னோடு ஒப்புரவாக்குகிற கடவுள், நம்பிக்கையாளர்களுக்கு மேன்மையானவர்கள் எனும் முத்திரையைத் தரமுடியுமென்றால்….. மீன்பிடித்துக்கொண்டும்,தீவிரவாதிகளாகவும் இருந்த இருந்த திருத்தூதர்களால்
    இயேசு செய்துவந்த அனைத்து நற்செயல்களையும் செய்ய முடியுமென்றால்…..

    இறைவனின் தொடுதலும்,உடனிருப்பும் நம்மையும் முழுவதுமாகப் புரட்டிப்போட்டு நம்மில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் கைகளை வெறுமையாக்கி, நாம் கடந்து வந்த பாதையை மாற்றத்தயாராக இருக்க வேண்டும்.

    மேற்கூறியவை நம்மால் முடியும் பட்சத்தில் நாமும் “ ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்!” என்று திருப்பாபாடலாசிரியரோடு இணைந்து பாட முடியும்.

    “இறைவனின் தொடுதல்” நம்மில் நிகழ்த்தக்கூடிய வியத்தகு மாற்றங்களைப் புரிய வைக்க,அடுப்பெரிக்க மட்டுமே உதவும் என்று நம்பப்பட்ட ஒரு தூசிபடிந்த வயலினில், ஒரு வயலின் இணைக்கலைஞரின் கைகள் பட்டவுடன் நிகழ்ந்த மாற்றங்களைத் தந்தை கூறியிருக்கும் விதம் “ இறைவனின் தொடுதல்” எத்தகைய கல்நெஞ்சனின் மனத்தையும் கவிதையாக்க வல்லது….. என்று புரிகிறது. “:இறைவனின் தொடுதல்” பற்றிய சிறப்பானதொரு மறையுரைக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete