Thursday, November 8, 2018

லாத்தரன் பேரலாயம்

இன்றைய (9 நவம்பர் 2018) திருநாள்

லாத்தரன் பேரலாயம்

இன்று நம் தாய்த்திருஅவையோடு இணைந்து லாத்தரன் பேரலாய நேர்ந்தளிப்புத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். உரோம் நகரில் அமைந்திருக்கும் இப்பேராலயம் நான்கு பாப்பிறை பேராலயங்களில் ஒன்றாகும். திருத்தந்தை அவர்கள் நம்பிக்கைக் கோட்பாடுகளை அறிவிக்கும் நாற்காலி இப்பேராலயத்தில்தான் உள்ளது. மேலும், இப்பேராலயமே உலகின் அனைத்து கிறிஸ்த ஆலயங்களின் தாய் என அழைக்கப்படுகின்றது.

இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் ஆலயங்களை மையமாகக் கொண்டுள்ளன.

முதல் வாசகத்தில் (எசே 47:1-2,8-9,12), எசேக்கியேல் இறைவாக்கினர், எருசலேம் கோவிலிலிருந்து புறப்படும் ஊற்றைக் காட்சியில் காண்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 3:9-11,16-17), புனித பவுல் கொரிந்த நகரத் திருச்சபையினரை, 'நீங்களே கடவுளின் ஆலயம்' என நினைவூட்டுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (யோவா 2:13-22), இயேசு எருசலேம் ஆலயத்தில் வீற்றிருந்த வியாபாரிகளை விரட்டி அடித்து, ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகின்றார்.

கடவுள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறாரே. அப்புறம் எதுக்கு ஆலயம்? என்று சிலர் கேட்கலாம்.

ஆலயத்தால் - தூய்மை தீட்டு போன்ற வேறுபாட்டால் - சில இடங்களில் காணும் பிரிவினைகள் மற்றும் அடிமைத்தனத்தைப் பார்த்து, ஆலயமே வேண்டாம் எனக் கோபம் கொள்ளலாம் சிலர்.
புனித பூமி, உரோமை, லூர்து நகர் தொடங்கி நம்ம ஊர் திருத்தலங்கள் வரை அங்கு நிகழும் வியாபாராங்கள் சிலரை முகம் சுளிக்க வைக்கலாம்.

ஆலயம் - ஒரே நேரத்தில் பல உணர்வுகளை எழுப்ப வல்ல வார்த்தை இது.

ருடால்ஃப் ஆட்டோ என்ற ஜெர்மானிய சமய அறிஞர், நாம் கடவுள் அனுபவம் பெறும் இடம் ஆலயம் என்றும், ஆலயத்தில் விண்ணகமும், மண்ணகமும் கைகோர்க்கிறது என்று சொல்கிறார். மேலும், கடவுள் அனுபவத்தை 'நூமினஸ் அனுபவம்' என்கிறார். இந்த அனுபவத்தை அவர் இரண்டு வார்த்தைகளில் சொல்கின்றார்: 'மிஸ்தேரியும் த்ரமெந்தும்' ('பயமுறுத்தும் மறைபொருள்'), 'மிஸ்தேரியும் ஃபாஸினோசும்' ('ஈர்க்கும் மறைபொருள்').

புனித பவுலடியாரின் கூற்றுப்படியும், இயேசுவின் கூற்றுப்படியும் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஆலயம் என்றால், நம்மிடமும் இந்த இரண்டு பண்புகள் உள்ளன: 'பயமுறுத்தும் மறைபொருள்,' 'ஈர்க்கும் மறைபொருள்.'

இன்றைய முதல் வாசகம் இவற்றைக் கடந்து இன்னும் இரண்டு பண்புகளை முன்வைக்கிறது: 'அற்புதம்' மற்றும் 'ஆசீர்வாதம்.' எருசலேம் ஆலயத்திலிருந்து புறப்படும் தண்ணீர் ஒரே நேரத்தில் 'அற்புதமாகவும்,' 'ஆசீர்வாதமாகவும்' இருக்கிறது. 'அற்புதம்' - ஏனெனில் இது பாலைநிலமான, மேடுபள்ளங்கள் நிறைந்த இடத்திலிருந்து புறப்படுகிறது. மேலும், கணுக்கால், முழங்கால், இடுப்பு என அதன் ஆழம் கூடிக்கொண்டே வருகிறது. 'ஆசீர்வாதம்' - ஏனெனில் இது பாயும் இடமெல்லாம் பசுமையும், செழுமையும், வளமையும் பிறக்கிறது.

பல நேரங்களில் நம்மைப் பற்றிய நம் புரிதல் ஆட்டோ குறிப்பிட்ட 'பயம்,' 'ஈர்ப்பு' என இரண்டு நிலைகளில் முடிந்துவிடுகின்றன. ஆனால், இவற்றைத் தாண்டி நாம் 'அற்புதம்,' 'ஆசீர்வாதம்' என்ற நிலைகளுக்குள் சென்றால் இன்னும் நலம்.

இரண்டாவதாக, இறைவன் நம் வாழ்வில் தரும் ஆசீர்வாதம் படிப்படியாக வளர்வதை நாம் உணர்கிறோம். கணுக்கால் அளவு தொடங்கிய அவரின் ஆசீர், முழங்கால், இடுப்பு என வளர்ந்து, ஒரு கட்டத்தில் நாம் நீந்திச் செல்லும் அளவுக்கு அபரிவிதமாகிறது. அந்த நீச்சலில் நாம் அப்படியே மிதக்க அவர் அப்படியே நம்மை நகர்த்திச் செல்கின்றார்.

இந்த மறையுண்மை நாம் அறிந்தால் நாம் என்றும் அடுத்தவரின் நலம் மட்டுமே நாடுவோம்.


2 comments:

  1. " லாத்தரன் பேராலயம்"..... இறைவனின் கருணை இந்த தேவாலயத்தைக் காண என்னையும் அழைத்துச் சென்றிருக்கிறது எனும் எண்ணமே எனக்குப் புல்லரிப்பைத் தருகிறது." ஆலயம்".... இந்த வார்த்தை ஒரு சாமான்யனுக்குள் கொண்டுவரும் உணர்வுகள் ஏராளம்.ஒரு ஆலயத்துக்குள் நுழையும் நான் அதை விட்டு வருகையில் என்னுள் ஏதேனும் மாற்றமுண்டா? உண்மையைக்கூற வேண்டுமெனில் பல நேரம் பதில் " இல்லை" என்பதாகும்.ஆனாலும் கூட ஒரு ஆலயத்துள் நுழைந்து வெளிவருவதாலேயே என்னையும் மீறி எனக்கே தெரியாமல் பல விஷயங்கள் நடப்பதை உணர்ந்திருக்கிறேன்.தந்தையின் கூற்றுப்படி பல நேரங்களில் நாம் அறியாமலே நாம் பலருக்கு " அற்புதமாகவும்", " ஆசீர்வாதமாகவும்" மாறிப்போயிருப்போம்....நம்முடைய அறிதலும்,புரிதலும் இல்லாமலே." நீங்களே கடவுளின் ஆலயம்" எனும் தூய பவுலின் வார்த்தைகள் உண்மையானால் நம்மில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துதானே ஆக வேண்டும்?" இறைவன் நம் வாழ்வில் தரும் ஆசீர்வாதம் படிப்படியாக வளர்வதை நாம் உணர்கிறோம்.கணுக்கால் அளவு தொடங்கிய அவரின் ஆசீர் முழங்கால்,இடுப்பு என வளர்ந்து,ஒரு கட்டத்தில் நாம் நீந்திச்செல்லும் அளவுக்கு அபரிமிதமாகிறது.அந்த நீச்சலில் நாம் அப்படியே மிதக்க அவர் அப்படியே நம்மை நகர்த்திச் செல்கிறார்." தந்தையின் வார்த்தைகள் மனத்துள் ஊடுருவிச்சென்று பிசைவதை உணர்கிறேன்.
    " இந்த மறையுண்மையை நாம் அறிந்தால் நாம் என்றும் அடுத்தவரின் நலம் மட்டுமே நாடுவோம்." கண்டிப்பாக இந்த " மறையுண்மை" நம்மையும் தாண்டி நமக்கடுத்திருப்பவர்களையும் ஆலயங்களாக மிளிரச்செய்யட்டும்".... தந்தையின் இத்தனை வீரியமான வார்த்தைகள் இன்னும் பலரை " அவரின் ஆலயங்களாக்கட்டும்!" தந்தைக்கு என் கரம் குவித்த வணக்கங்களும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. நன்று! ஆலயம்-- என்னும் அற்புத விளக்கம்...நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு நல்ல ஆலயமாகத்திகழ்வதற்கு
    நின்னருள் பொழிவாய்! நித்தமும் இறைவா!

    ReplyDelete