Monday, November 12, 2018

கடமையைத்தான் செய்தோம்

இன்றைய (13 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 17:7-10)

கடமையைத்தான் செய்தோம்

'வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது?'

'ஓடுகிற பஸ்ஸில் ஓடி ஏறுவது போல இருக்கிறது'

'ஓடுகிற ட்ரெய்னில் ஓடி ஏறுவது போல இருக்கிறது'

இப்படி நீங்க என்றாவது யோசித்ததுண்டா? இப்படி ஓடிக்கொண்டே இருந்து சோர்ந்ததுண்டா?

உங்கள் பதில் பெரும்பாலும் 'ஆம்' என்றே இருக்கும் என நினைக்கிறேன்.

இப்படி ஓடுகிற பஸ்ஸில் ஓடி ஏறும் ஒருவரைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகின்றார்:

வீட்டின் பணியாளர் ஒருவர்தான் அவர்.

பணியாளர் ஒருவர் உழுதுவிட்டு, மந்தையை மேய்த்துவிட்டு, வயல்வெளியிலிருந்து வருகிறார். வியர்வை, களைப்பு, சோர்வு, முழங்கால் வலி, கழுத்து வலி, விரல்மூட்டுகளில் வலி, காலில் சகதி, உடலில் தூசி, தலையில் புழுதி என வீட்டிற்குள் நுழையும் அவரின் எண்ணமெல்லாம், 'போனவுடனே கொஞ்சம் சுடுதண்ணி வச்சி நல்லா குளிக்கணும். அப்புறம், சூடா ஒரு காஃபி போட்டுக் கையில் எடுத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்து தரையில் உட்கார்ந்து டிவியில் காமெடி பார்த்துக்கிட்டே அதை மெதுவா குடிக்கணும்' என இருக்கின்றது. ஆனால், வீட்டிற்குள் நுழைந்தால் அங்கே அப்போதுதான் வீட்டு உரிமையாளர் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். இவரைக் கண்டவுடன் அவர், 'டேய்...வா...வா...வந்துட்டியா...உனக்குத்தான் காத்திருந்தேன். சட்டுபுட்டுன்னு கொஞ்சம் சோறு பொங்கு. சீக்கிரம் சமைத்துப் பரிமாறு' என்று சொல்லிவிட்டுப் போய் சாய்வுநாற்காலியில் அமர்ந்து கொள்வார். பணியாளரும் கைகளை மட்டும் கழுவி விட்டு தலைவருக்குப் பணிவிடை செய்வார். அத்தோடு முடிந்ததா, சாப்பிட்டு முடிந்தவுடன் அவர் தட்டையும், பாத்திரங்களையும் கழுவி, தலைவருக்கு கட்டில் போட்டு, என வேலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

'நான் இவ்வளவு வேலை செய்கிறேனே ... அவர் 'நன்றி' என்று ஒரு வார்த்தை சொல்கிறாரா?' என பணியாளர் புலம்புவார். ஆனால், ஒன்றும் கிடைக்காது தலைவரிடமிருந்து.

இப்படியே ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே இருக்கும்.

இந்த சோர்வைப் பணியாளர் எப்படிக் கையாள வேண்டும்?

'நாங்கள் பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்'

இதே வார்த்தைகளைத்தான் நம் வீட்டில் உள்ள அம்மாக்கள் தினமும் மௌனமாகச் சொல்கிறார்கள்:

'நாங்கள் பயனற்ற தாய்மார்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்.'

இப்படிச் செய்வதால்தான் குழந்தைகள் வீட்டை அழுக்காக்கினாலும் அவர்களால் சிரிக்க முடிகிறது. தங்களுக்கு உணவில்லை என்றாலும் சமாளித்துக்கொள்ள முடிகிறது.

தங்கள் செயல்களோடும், தங்கள் செயல்களின் பலனோடும் தங்களை இணைத்துக்கொள்ளாதவர்களே மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற முடியும். 'என் கடமை இதுதான். நான் இதைச் செய்தேன். இதன் பயனோ, இதனால் வரும் நன்றியோ, ஊதியமோ எனக்கு ஒரு பொருட்டல்ல' என்பவரே தொடர்ந்து செயலாற்றிக்கொண்டே செல்ல முடியும்.

இப்படிப்பட்ட ஒரு மனநிலை ஒருநாளில் வந்துவிடுமா?

இதற்கான பதிலைத் தருகின்றது இன்றைய முதல் வாசகம் (காண். தீத்து 2:1-8,11-14).

'நாம் இம்மையில் வாழ இவ்வருளால் பயற்சி பெறுகிறோம்' என இறைவனின் அருளையும், பயிற்சியையும் முதன்மைப்படுத்துகிறார் தீத்து.

ஆக, மனநிலை உருவாக பயிற்சி தேவை.


8 comments:

  1. "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்
    எங்கள் கடமையைத் தான் செய்தோம்"
    கண்டிப்பாக இந்த மனப்பான்மையை மேற்கொள்கிறோம்.
    இறைவனின் அருளையும், பயிற்சியையும் வேண்டி....
    வாழ்த்துகளுடன்...






    ReplyDelete
  2. " நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" ...அடிக்கடி தந்தையின் வாய் முணுமுணுக்கும் வார்த்தைகள் இவை.அப்படி அவர் நினைப்பதாலேயே " நாங்கள் பயனற்ற தாய்மார்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்" என்று தாய்மார்கள் மௌனமாகச் சொல்வது அவர் செவிகளில் விழுகிறது."என் கடமை இதுதான்; நான் இதைச்செய்தேன்; இதன் பயனோ இதனால் வரும் நன்றியோ,ஊதியமோ எனக்கு ஒரு பொருட்டல்ல" என்று நினைப்பவரே தொடர்ந்து செயலாற்ற முடியும் எனில் நினைப்போம்; அதற்கான முயற்சி செய்வோம்; நினைத்ததை செயலாக்குவோம்....தன் காலடியில் ஊற்றப்பட்ட தண்ணீர் எத்தகையதாயினும்,அதைத்தலைவழியே சுவையான அமிர்தமாக மாற்றித் தரும் தென்னை போல.....

    ReplyDelete
  3. Good Reflection Yesu.

    ReplyDelete
  4. Ottimo riflessione. GRAZIE Don Yesu.

    ReplyDelete
  5. Excellent reflection.Thankyou.Rev.Yesu.
    Is the translation correct Jeni Kannaiha?
    If you understand tamil reflection surely you know Tamil....




    ReplyDelete