Wednesday, November 28, 2018

தலைநிமிர்ந்து நில்லுங்கள்

இன்றைய (29 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 21:20-28)

நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்

எருசலேம் அழிவைப் பற்றி இயேசு முன்மொழிவதன் தொடர்ச்சியை இன்றைய நற்செய்திப் பகுதியில் வாசிக்கின்றோம். இயேசு இறந்து உயிர்த்த 40 ஆண்டுகளுக்குப் பின் எருசலேம் நகரம் போரில் அழியத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. ஆக, நற்செய்தியாளர்கள் தங்கள் கண்முன் நிகழ்ந்த நிகழ்வுகளை இயேசுவே இறைவாக்காக உரைத்ததாக எழுதியிருக்கலாம் என்பது பல ஆசிரியர்களின் கருத்து. ஏனெனில், போர் ஏற்படுத்தும் குழப்பம், தாக்கம், இழப்பு, கண்ணீர், பரிதாபம் அனைத்தையும் மிகவும் துல்லியமாகப் பதிவு செய்கின்றனர் நற்செய்தியாளர்கள் - குறிப்பாக, லூக்கா: 'கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை ... கூரான வாள் ... சிறை ... குழப்பம் ... அச்சம் ... மயக்கம்.'

மேலும், கிறிஸ்தவர்கள் 'பருஸியா' என்று சொல்லப்படும் இரண்டாம் வருகை மிக அருகில் இருந்ததாக எண்ணினர். ஆகையால்தான், 'கதிரவன் நிலாவில் அடையாளம், வான்வெளிக் கோள்கள் அதிர்தல்' என்று உருவகமாக உலக முடிவை அறிவிக்கின்றனர் நற்செய்தியாளர்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கோளை இப்போது படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கும். இந்நேரம் அமெரிக்காவின் அப்பொல்லா-இரண்டு உண்மையிலேயே நிலவிற்குச் சென்றதா என இரஷ்யா ஆராய்ந்து கொண்டிருக்கும். கதிரவன், நிலா, விண்மீன், வான்வெளிக் கோள்கள் என அனைத்தும் இன்று மனிதர்களின் ஆராய்ச்சிப் பொருள்களாகிவிட்டன.

இன்னொரு பக்கம், இயேசு, லூக்கா, நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, நீங்கள், நான் என எல்லாவற்றிற்கும் அழியாத சாட்சிகள் யார் என்றால் இந்த கதிரவன், நிலா, விண்மீன்கள், மற்றும் கோள்கள்தாம் - 'அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா!'

இவை எல்லாம் நடக்குமா?

'இவை எல்லாம் நடக்குமா? நடக்காதா?' என்பது கேள்வி அல்ல.

மாறாக, இவை நடக்கும் போது எப்படி இருக்க வேண்டும்? என்பதுதான் கேள்வி.

'தலைநிமிர்ந்து நில்லுங்கள்'

இது ஒரு படைவீரர் சொல்லாடல். தலைநிமிர்ந்து நிற்கும் போர்வீரர் தயார்நிலையில் இருக்கிறார். விழித்திருக்கிறார். கூர்ந்து கவனிக்கிறார்.

ஆக, அந்த நாளை எதிர்கொள்ள 'தயார்நிலை,' 'விழிப்பு,' 'கூர்ந்து கவனித்தல்' அவசியம்.

இன்று நம் வாழ்வின் அன்றாட பிரச்சினைகளுக்கு - காய்ச்சல் போன்ற நோயில் தொடங்கி, மது போன்ற பழக்கங்கள் வரை - காரணம், நாம் தலைநிமிர்ந்து நில்லாததே.

நாம் தலை சாய்ந்து அல்லது தலை கவிழ்ந்து கிடக்கும்போதுதான் எளிதாக விழுந்துவிடுகிறோம். நம் பார்வை குறுகி, நாம் சரியாகப் பார்க்க முடியாமல் தவிக்கிறோம்.

இன்று, தலைநிமிர்ந்து நாம் சும்மா நின்றாலே நம்மை அறியாமல் ஒரு தன்னம்பிக்கை நம்மை தழுவிக்கொள்ளும். தன் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர் எதையும், யாரையும் எதிர்கொள்ள முடியும் - அது மானிடமகனின் வருகையாக இருந்தாலும்.


2 comments:

  1. மனதுக்கு உத்வேகம் கொடுக்கும் ஒரு பதிவு.எருசலேம் அழிவு, நற்செய்தியாளர்கள்,போர்,வாள், அமெரிக்கா,நாசா,விண்கலம்,விண்கோள் என ஒன்றையுமே பாக்கிவைக்காத தந்தை நமக்கு சிம்மசொப்பனமான 'அந்த' நாள் குறித்துப்பேசுகிறார்.எப்படி எதிர்கொள்வது அந்த நாளை? அண்ணல் மகாத்மாவை துணைக்கழைக்கிறார் தந்தை."ஒருவன் தன் வயிற்றினால் புரண்டு செல்வதைவிட தன் சிரசை நிமிர்த்தி நிற்பதே மேல்....அது நொறுங்குண்ட ஒன்றாக இருப்பினும் கூட."
    விழித்திருத்தலும், கூர்ந்து கவனிப்பதுமே " தயார் நிலை" யில் இருப்பதெனில்.... "தலை நிமிர்ந்து நிற்பதெனில்" நாம் ஏன் தலை சாய்ந்து கவிழ்ந்து கிடக்க வேண்டும்? தலை நிமிர்ந்து நிற்போம்; தன்னம்பிக்கையைத் தழுவிக்கொள்வோம்; எதையும் எதிர்கொள்ளத்தயாராவோம் ...அது மானிட மகனின் வருகையாக இருப்பினும். பதிவுக்கேற்ற அழகான முடிவு.எழுச்சியூட்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Nice reflection rev.fr.Yesu.
    Lord! Help me to stand erect and lift up my head, for your deliverance!.....

    ReplyDelete