Wednesday, November 7, 2018

தேடல்

இன்றைய (8 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 15:1-10)

தேடல்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு காணாமற்போன ஆடு மற்றும் நாணயம் எடுத்துக்காட்டுக்களைச் சொல்கின்றார்.

இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களிலும் ஒரே வகையான ஃபார்முலாதான் உள்ளது:

அ. நிறைய இருக்கிறது

ஆ. ஒன்று காணாமற்போகிறது

இ. இருக்கும் 'நிறையவற்றை' விட்டுவிட்டு, காணாமற்போன 'ஒன்றை' கதைமாந்தர் தேடுகிறார்

ஈ. தேடியது கிடைக்கிறது அல்லது கிடைக்கும் வரை தேடுகிறார்

உ. தானும் மகிழ்ந்து தன் அண்டை வீட்டாரோடும் மகிழ்கின்றார்

இந்த ஃபார்முலாவை வைத்து இயேசு சொல்வது 'மனம் மாறும் ஒருவர் வானக அணிக்குத் தரும் மகிழ்ச்சியே.'

அ. நிறையப் பேர் இருக்கிறார்கள்

ஆ. ஒருவர் பாவம் செய்து காணாமற்போகிறார்

இ. இருக்கும் நிறையப் பேரை விட்டுவிட்டு, காணாமற்போன ஒருவரை கடவுள் தேடுகிறார்

ஈ. தேடியவர் கிடைக்கும் வரை தேடுகிறார்

உ. இறுதியில் தானும் மகிழ்ந்து, தன் வானகத் தூதரோடும் மகிழ்கிறார்

தேடிய பொருள் அல்லது தேடிய நபர் கிடைத்தவுடன் நம் தேடல், தேடல் தந்த வலி, விழிப்பு, சோர்வு, ஏக்கம் அனைத்தும் மறைந்துவிடுகிறது.

தேடும் பொருளை அல்லது தேடும் நபரை நாம் மதிப்புக்குரியது(வர்) என நினைத்தால்தான் நம்மால் தேட முடியும். அதாவது '99'ஐ விட '1' பெரியது, '9'ஐ விட '1' பெரியது என்ற கணிதத்தை நாம் கற்க வேண்டும். இந்தக் கணிதம் மனித லாஜிக் மற்றும் சிந்தனைக்கு முரணானது. இந்த மாற்றுக் கணிதம் கற்பவர்கள் மட்டுமே ஒவ்வொன்றுக்கும் உள்ள மதிப்பை ஒவ்வொன்றக்கும் கொடுக்க முடியும்.

10 திராக்மாக்களில் 1ஐத் தொலைத்த அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லும்போது, அவர் வைத்திருந்த 10 திராக்மாக்கள் அவருடைய திருமணத்தின்போது அவருடைய கணவன் வீட்டாரால் பரிசாக வழங்கப்பட்டவை. இவற்றுள் ஒன்றைத் தொலைத்தால் கணவன் வீட்டார் பெண்ணை 'கவனக்குறைவானவள்' என்று சாடுவர். பணமும் தொலைந்து கெட்ட பெயரும் வந்துவிடும். ஆகையால்தான், இரவானாலும், 'காலையில் பார்த்துக்கொள்ளலாம்' எனத் தள்ளிப் போடாமல், உடனே எண்ணெய் விளக்கேற்றித் தேடுகின்றார். மேலும், கண்டுபிடித்தவுடன், தன் அண்டை வீட்டாரை - அதாவது, தன் கணவன் வீட்டாரை அழைத்து - 'இதோ, பாருங்கள் 10 திராக்மாக்களும் இருக்கின்றன. நான் கவனக்குறைவானவள் அல்ல' என்று தனது தன்மதிப்பையும், தன்மானத்தையும் கொண்டாடுகிறாள்.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய ஒன்று, 'தேடுவதை உடனே தேட வேண்டும்.'

நம் உறவுநிலைகளிலும் புரிதல் தன்மை குறைந்து அல்லது புரிதல் தன்மை மறைந்து ஒருவர் காணாமல்போகும்போது 'உடனே' அவரைத் தேட வேண்டும். நேரம் போகப் போக அவர் தூரம் கூடிவிடும். 'தயிர் நேரம் ஆக ஆக புளிப்பின் தன்மை கூடும்' - 'உறவு விரிசலும் அப்படித்தான் நாள் ஆக ஆக வருத்தம் அதிகரிக்கும்.' 'உடனே' தேடுதல் நாம் தொலைத்தவரையும், தொலைத்ததையும் பெற்றுத்தரும்.

உடனே மகிழ்ச்சியும் நமக்குக் கிடைக்கும்.

4 comments:

  1. மிக எளிதாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு பதிவு.எத்தனை கோடி நம்மிடையே இருப்பினும் ஒன்று தொலைந்து போகும்போது தான் நாம் அதன் முக்கியத்துவத்தை உணர்வது நம் அனுபவம். தொலைந்த பொருள் கிடைத்த உடன் நம் தேடல் தந்த வலி,விழிப்பு,சோர்வு,ஏக்கம் மறைகிறது...இது நான் அன்றாடம் அனுபவிக்கும் ஒரு விஷயம்.'99' ஐ விட '1' பெரியது; மற்றும் '9' ஐ விட '1' பெரியது.... தந்தையின் கணக்கு முரணானது இல்லை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே புரியும். தன்னிடமிருந்த 10 திராக்மாக்களில் ஒன்றைத் தொலைத்த மருமகள் அதைத்தேடி எடுத்தபின் " இதோ பாருங்கள்..10 திராக்மாக்களும் உள்ளன; நான் கவனக்குறைவானவள் அல்ல" என்று தன்னை நிருபிக்கும் விதம்...தந்தையின் அழகிய கற்பனைக்கு எடுத்துக்காட்டு.
    இன்றையப் பதிவு புகட்டும் பாடம் அழகானது மட்டுமல்ல; முக்கியமானதும் கூட.உயிரற்ற பொருட்களை மட்டுமல்ல; நம்மை விட்டுப் பிரியும் உயிருள்ள உறவுகளையும் 'உடனே' தேட வேண்டும். அப்பொழுதுதான் "தொலைத்ததையும்,தொலைத்தவரையும் நாம் மீண்டும் பெற முடியும்.அழகானதொரு வாழ்க்கைப்பாடம் சொல்லும் பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. "உறவு விரிசலும் அப்படித்தான்; நாள் ஆக ஆக வருத்தம் அதிகரிக்கும்"
    உடனே தேடுதல் நாம் தொலைந்தவரையும்,தொலைந்தவற்றையும்,தொலைந்ததையும் பெற்றுத்தரும்; உடனே மகிழ்ச்சியும் நமக்கு கிடைக்கும்.
    மிகவும் பிடித்துபோன ஆழமான வரிகள்...
    எப்படி தேடுவது என்று போராடிக்கொண்டிருக்கும்....என் போன்றோருக்கு....
    இறைவா! தயை புரிவாய்! ... நன்றி..

    ReplyDelete
  3. காணாமற்போன ஆடு, திராக்மா பற்றிய பல விளக்கங்களை கேட்டுள்ளேன். ஆனால் முதல்முறையாக காணாமல்போன போன, தொலைத்துவிட்ட, விரிசல் ஏற்பட்ட உறவுகளை தேடுவது பற்றி சிந்திப்பது மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் தந்தைக்கு!!!

    ReplyDelete
  4. Hats OFF TO Jeni kannaiha!
    Love your comment

    ReplyDelete