Thursday, January 9, 2014

அவர்கள் உள்ளம் கடினப்பட்டிருந்தது!

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் இயேசு தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார். அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, 'அது பேய்' என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்' என்றார். அவர்களுடன் படகில் ஏறினார். அவர்கள் உள்ளம் கடினப்பட்டிருந்தது. (மாற்கு 6:47-52)

இரண்டு மாதங்களுக்கு முன்பாக இத்தாலிய மொழி நாளிதழ் ஒன்று சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கோக் பாட்டில்களின் மேல் ஏறி வந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தையும், இயேசு கடலில் தண்ணீரின் மேல் ஏறி வந்த ஓவியப்படத்தையும் அருகருகே வெளியிட்டு, 'தண்ணீரில் நடக்கும் இயேசு!' 'கோக்கில் நடக்கும் மாசிமா' என்ற தலைப்பிட்டிருந்தது. இந்தப் படத்திற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து அடுத்த நாள் கடிதங்கள் எழுதியிருந்தனர். அதில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்: 'இயேசுவின் பாதங்களுக்கும், தண்ணீருக்கும் நடுவே வேறொன்றும் இல்லை!' ஆனால் 'மாசிமாவின் பாதங்களுக்கும், கோக்கிற்கும் இடையே பிளாஸ்டிக் இருக்கின்றது!'. மனிதரால் உருவானது பிளாஸ்டிக். மனிதரால் உருவானவைகளை வைத்துக்கொண்டு நாம் அற்புதங்கள் செய்வதாக நினைக்க முடியாது. அவை விரைவில் உருக்குலைந்து விடும். ஆனால் இயேசு செய்தது அற்புதம். அது அவரால் மட்டுமே முடியும். அது என்றென்றும் நிரந்தரம். மேலும், நாம் கோக் மற்றும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கவில்லையென்றால் நம் மனுக்குலம் முழுவதும் கண்ணீரின் மேல் நடக்க வேண்டியிருக்கும்!'

மிக அழகான பதில். அதை எழுதியவர் யார்னு நினைக்கிறீங்க? சஸ்பென்ஸ்.

இயேசுவை சீடர்கள் பேய் என நினைத்து பயப்படுகின்றனர். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. 'பயம்' வந்தால் கடவுளும் பேயாகின்றார்.

கடவுள் பல நேரங்களில் நமக்கு பயமுறுத்தும் ஒரு பொருளாகவோ, நபராகவோத்தான் இருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? சீடர்களின் மனம் போல நம் மனமும் கடினமாகிவிடுவதுதான். மனம் கடினமாகிவிடுவது என்றால் என்ன? ஏதாவது ஒரு முடிவை நம் மனம் எடுத்துவிட்டு இதுதான் சரி என்று சொல்லி அடம்பிடித்துக் கல்லாகி விடுகிறது. அதற்கு மேல் அதன் தன்மையை மாற்ற முடியாது. உறவுகளில் விரிசல் வரக் காரணமும் இதுதான்: மனம் கல்லாகி விடுகிறது. 'இவர் இப்படித்தான். இவரால் நான் கஷ்டப்பட்டேன். இன்னும் கஷ்டப்படுவேன்!' என்று ஒருமுறை மனம் கடினமாகிவிட்டால் அது இளகுவதேயில்லை. இனி அந்த மனிதர் என்ன செய்தாலும் அதை நம் மனம் சந்தேகத்தோடுதான் பார்க்கும்.

இந்த நாட்களில் நான் திருப்புகழ்மாலையை என் அம்மா பரிசளித்த தமிழ்ப் பதிப்பில் வாசிக்கிறேன். இன்றைய மன்றாட்டுக்களில் ஒன்று மிக அழகாக இருக்கிறது: 'துறவு வாழ்வில் உமது பணிக்கெனத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை நினைவுகூரும். ஏழ்மையில் அவர்களை வளப்படுத்தும். கற்பு நெறியில் அவர்களை அன்பொழுகச் செய்யும். உமக்குக் கீழ்ப்படிவதில் அவர்கள் உள்ளங்களை எளிதாக்கும்!'

'எளிதாயிருக்கும் உள்ளங்கள்' தாம் கடவுளையும், பிறரையும் 'அன்பில்' அடையாளம் காண முடியும். இறுகியிருக்கும் உள்ளங்களுக்கு கடவுளும் பேய்தான். மற்றவரும் பேய்தான்.

Be not afraid...he raises you up...now...and ever...Click on the Link to View the Video:

You Raise Me Up



1 comment:

  1. Anonymous1/10/2014

    தாயுள்ளம் கொண்ட இறைவனைப் பேயுள்ளம் ஆக்குவது கல்லான நம் இதயங்கள்தான்.மஞ்சள்காமாலைக் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகத்தானே தெரியும்? திருப்புகழ்மாலை வரிகள் மனதை வருடிவிட்டன.மார்ட்டின் லூத்தர் பற்றிய விபரம் ஒரு'documentory' உணர்வைத்தந்தது.''U raise me up'' என் கல்லான மனத்தை உடைத்து விட்டது.இப்படிநல்ல விஷயங்களை எங்களிடம் கொண்டு சேர்க்கும் தங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete