Tuesday, April 9, 2019

விடுதலை

இன்றைய (10 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:31-42)

விடுதலை

ஏறக்குறைய கடந்த 10 நாள்களாக நாம் யோவான் நற்செய்தியிலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்ள யூதர்கள் தயக்கம் காட்டுவதும், இயேசு தன்விளக்கம் தருவதும், பின் அவர்கள் அதை கேலியாக்குவதும் என நிகழ்வுகள் நகர்ந்துகொண்டே வருகின்றன.

இன்றைய நற்செய்தியில் இரண்டு வரையறை வாக்கியங்களை முன்வைக்கின்றனர் யூதர்கள்:

அ. 'நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை'

ஆ. 'ஆபிரகாமே எங்கள் தந்தை'

இவை இரண்டுமே பொய் என்பதை இயேசு அவர்களுக்கு தோலுரிக்கின்றார்.

அ. 'நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை'

இயேசுதான் இந்த விவாதத்தை தொடங்குகிறார்: 'என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.'

இப்போதுதான் அவர்கள் தாங்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை என்கின்றனர். ஆனால், அவர்களின் முன்னோர் எகிப்தில் அடிமைகளாக இருந்ததையும், அவர்களை ஆண்டவராகிய கடவுள் வியத்தகு முறையில் விடுதலை செய்ததையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர். அடுத்ததாக, வெகு சில ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவில் அடிமைகளாக இருக்கின்றனர். இப்போது - அதாவது, இயேசுவின் சமகாலத்தில் - உரோமைக்கு அடிகைளாக இருக்கின்றனர். இப்படி அடிமைத்தனங்களை அனுபவித்தாலும் அவர்கள் பொய்யுரைக்கின்றனர்.

இயேசு அவற்றைச் சுட்டிக்காட்டாமல், இதையெல்லாம் கடந்த, எல்லாரும் அடிமையாக இருக்கின்ற ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றார்: 'பாவம் செய்யும் யாவரும் பாவத்திற்கு அடிமை'. ஏனெனில், பாவம் செய்த ஒருவர் அதைத் திரும்பத் திரும்பச் செய்வதால் ஒரு கட்டத்தில் அவர் 'செய்தார்' என்ற நிலை மாறி, அவர் செய்யும் நிலைக்குத் 'தள்ளப்பட்டார்' என்ற நிலை உருவாகிவிடுகிறது. பாரவோன் மன்னன் போல. அவனுடைய உள்ளம் இறுக இறுக, ஒரு கட்டத்தில் அவன் விரும்பினாலும் அவன் நல்லவனாக இருக்க முடிவதில்லை.

ஆ. 'ஆபிரகாமே எங்கள் தந்தை'
முதல் ஏற்பாட்டில் ஆபிரகாமை 'நம்பிக்கையின் தந்தை' என இஸ்ரயேலர் அறிவித்தனர். இஸ்ரயேலரின் இனம் யாக்கோபில் தோன்றினாலும், அவர்கள் நம்பிக்கையில் தங்களுடைய தந்தையாக நினைப்பது ஆபிரகாமைத்தான்.

ஆனால், இயேசு இதிலிருந்த பொய்யையும் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையின் தந்தையின் பிள்ளைகளாக இருந்துகொண்டு நம்பிக்கை இல்லாமல் இருப்பது எப்படி? என்று கேட்கின்றார். மேலும், இயேசுவைக் கொல்ல அவர்கள் முயன்றதால் அவர்கள் ஆபிரகாமைப் போல இல்லாமல் தங்களின் முற்கால மண்ணகத் தந்தையர்போல இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறாக, அவர்கள் தங்களின் அடையாளங்கள் என்று நினைத்த இரண்டு வரையறைகளையும் உடைக்கின்றார் இயேசு.

இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'அடையாளம்' நமக்கு ஆட்டோமேடிக் வாழ்வைத் தந்துவிடாது. நான் 'கிறிஸ்தவன்,' நான் 'அருள்பணியாளன்,' நான் 'இப்படி,' நான் 'அப்படி' என்று நாம் வைத்திருக்கும் வரையறைகள் வெளிப்புறக் கொண்டாட்டமாக இருந்துகொண்டு, நம்மை உள்புறத்தில் அழிப்பவையாகவும் இருக்கும் அபாயம் இருக்கிறது. ஆக, அடையாளங்களை முழுமையாக ஏற்று வாழ்ந்து அதன்படி நடக்கும்போதுதான் அவை வாழ்வைத் தர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் நெபுகத்னேசர் தன் தெய்வங்களை வணங்குமாறு மூன்று இளைஞர்களுக்குக் கட்டளையிட அவர்கள் மறுக்கின்றனர். எரிகிற தீச்சூளையில் தள்ளப்பட்டாலும் எதிர்சான்றாக நிற்கின்றனர்.

1 comment:

  1. மனிதர்களுக்கு மட்டுமல்ல; சில வேண்டாத பழக்க வழக்கங்களுக்கு நாம் பலியாடுகளாய் இருப்பதும் கூட 'அடிமைத்தனமே' என்கிறது இன்றைய பதிவு.நாம் சார்ந்திருக்கும் ஒரு மதத்தின்,குடும்பத்தின்,சமூகத்தின் வரையறைகள் வெளிப்புறத்தில் நம்மைஇனியவர்களாகக் கொண்டாடுபவையாக இருப்பினும்,உட்புறத்தில் அவை நம்மை அழிக்கும் அபாயத்திலிருந்து தடுக்க,அந்த அடையாளங்களை முழுமையாக ஏற்று, அதன்படி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறோம்.இப்படிப்பட்டதொரு "நம்புதல்" (conviction) என்னிடத்தில் இருந்தால் மட்டுமே, நான் எரிகிற தீச்சூளையில் தள்ளப்பட நேரிடினும் எனனுள் உறையும் இறைவனுக்கு மட்டுமே நான் சாட்சியாக நிற்க முடியும்...இன்றைய முதல் வாசகத்து மூன்று இளைஞர்கள் போல.
    மனத்தில் ஏற்றிக்கொள்ள கொஞ்சம் சிரமமான பதிவுதான்.ஆனால் இயன்றால் 'எதுவும் சாத்தியமே' என்று கூறும் பதிவைத்தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete