Thursday, April 11, 2019

நீங்கள் தெய்வங்கள்

இன்றைய (12 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 10:31-42)

நீங்கள் தெய்வங்கள்

கடந்த சில நாள்களுக்கு முன் டுவிட்டரில் ஒரு கீச்சு வாசித்தேன்: 'நமக்கு அதிகமாக விரக்தி வருவது முட்டாள்களோடு பேசி அவர்களுக்கு ஒன்றைப் புரியவைக்கும்போதுதான்!'

இயேசுவின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

தன்னைப் பற்றியும் தனக்கும் தன் தந்தைக்கும் உள்ள உறவு பற்றியும் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால், அவர் மேலும் மேலும் விரக்திக்குத்தான் உள்ளாகின்றார். அவரைப் பேய் பிடித்தவன் என்கிறார்கள். 'தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரா?' என்று கேட்கின்றனர். அவர் மேல் எறியக் கற்களைச் சேகரிக்கின்றனர். இன்றைய நற்செய்தியில் அவரை மீண்டும் பிடிக்க முயல்கின்றனர்.

பிரச்சினை யார்மேல்?

இயேசு அவர்களின் புரிந்துகொள்ளும் திறனைவிட மேலானதாகப் பேசினாரா?

அல்லது

அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைந்ததாக இருந்ததா?

அல்லது

வேறு ஏதாவது பிரச்சினையா?

தெரியவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது. இயேசு ஒருவகையான கையறு நிலையில் இருக்கிறார். 'என்னை யாரும் புரிந்துகொள்வதில்லையே!' என்று விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 20:10-13) ஏறக்குறைய இதே நிலையில்தான் இருக்கிறார். எரேமியாவின் நண்பர்களே அவருக்கு எதிராகக் கிளம்புகின்றனர்.

இயேசுவும் எரேமியாவும் உடனடியாக தங்களின் விரக்தியிலிருந்து எழும்புகின்றனர். எரேமியா, 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என்கிறார். இயேசுவும், 'நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார்' என்கிறார்.

இன்றைய நற்செய்தி நமக்கு வைக்கும் பாடங்கள் இரண்டு:

ஒன்று, விரக்தி அல்லது கையறு நிலை வரும்போது, நாம் குனிந்து பார்ப்பதைவிட நிமிர்ந்து பார்க்க வேண்டும். இதை தனியொரு நிகழ்வாகப் பார்க்காமல் வாழ்வில் ஒட்டுமொத்த ஓட்டத்தின் ஒரு துளி என்று பார்க்க வேண்டும்.

இரண்டு, எரேமியா அல்லது இயேசுவின் சமகாலத்தவர்போல அல்லாமல் நம் எண்ணங்களை உயர்த்த வேண்டும். ஒரு மனிதரின் மேன்மை அவருடைய உள்ளத்தின் மேன்மையைப் பொறுத்தே அமையும். 'நீங்கள் கடவுளர்கள்' என்று இயேசு அவர்களுக்குச் சொல்கின்றார். ஆனால், அவர்களோ மனித நிலையில்கூட இல்லாமல், 'நாங்கள் மிருகங்கள்' என்ற நிலையில் தாழ்ந்து போகின்றனர். ஆக, எண்ணங்கள் தாழ்வாகும்போது நம் இயல்பும் தாழ்வாகிறது. உயர்ந்த எண்ணங்கள் அனைவரையும் உள்ளடக்கிப் பார்க்கும். அனைத்தையும் தாங்கும். அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும். அனைத்தையும் எதிர்கொள்ளும்.

1 comment:

  1. ஒருவருக்கு விரக்தி அல்லது கையறுநிலை வருகையில் என்ன செய்ய வேண்டுமென்கிறார் தந்தை. குனிந்து பார்ப்பதை விடுத்து,நிமிர்ந்து நிற்க வேண்டுமாம்.இது சாத்தியமாக வேண்டுமெனில் " ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரனைப்போல் என்னோடு இருக்கிறார்; நான் தந்தையுள்ளும்,தந்தை என்னுள்ளும் இருக்கிறார்" போன்ற நேர்மறை எண்ணங்கள் நம்மை ஆட்கொண்டிருக்க வேண்டும். 2.நாம் இருக்கும் நிலையை விட நம்மை உயர்த்தி வைத்துப் பார்க்க வேண்டும்.நாம் உள்ளுவதெல்லாம் உயர்வானதாக இருந்துவிடின் நம்மால் அனைத்தையும் தாங்கவும்,பொறுத்துக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் முடியும்.காரணம் இப்படிப்பட்டவர்களை ஆட்டுவிப்பது அவர்களின் உள்ளத்தில் உறையும் அன்பே என்று சொல்லாமல் சொல்கின்றன இவ்வரிகள்.என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என மருள வேண்டாம்.ஏனெனில் கையறு நிலையையே தன் கைத்தடியாக தாங்கி வாழ்ந்த இயேசு நமக்கு முன்பே இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். கையறுநிலை தவிர வேறொன்றையுமே அறியாத மக்களுக்கு தந்தை தரும் ஒரு ஆறுதல் டானிக் இன்றையப்பதிவு.நன்றிகள்!!!

    ReplyDelete