Sunday, April 7, 2019

என்னோடு இருப்பதால்

இன்றைய (8 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 8:12-20)

என்னோடு இருப்பதால்

இன்றைய நற்செய்தி வாசகம் யூதர்களின் 'பூரிம்' அல்லது 'கூடாரத்திருவிழாவின் இறுதி நாள்கள்' என்று சொல்லப்படுகின்ற திருவிழாவின் பின்புலத்தில் அமைந்துள்ளது. இறைவனின் திருச்சட்டத்தை வாசித்து, திருச்சட்டமே தங்களின் வாழ்வை வழிநடத்துகிறது என்று சிந்திக்கும் தன் சமகாலத்து யூத மக்களுக்கு, 'உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்று முன்னுரைக்கின்றார்.

இவ்வளவு நாள்களாக, இஸ்ரயேல் மக்கள், 'என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு. என் பாதைக்கு ஒளியும் இதுவே' (காண். திபா 119:105) என்று இறைவனின் திருச்சட்டத்தைத் தங்களின் ஒளியாக எண்ணியிருந்தனர். இந்தப் பின்புலத்தில் இதற்கு மாற்றாக, 'நானே உலகின் ஒளி' என்று இயேசு சொல்லும்போது கண்டிப்பாக அவர்களுக்கு இடறலாக இருந்திருக்கும்.

இன்றைய பதிலுரைப் பாடலையும் (திபா 23) எண்ணிப்பார்ப்போம். திபா 23ல்,  'மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' எனப் பாடுகிறார் ஆசிரியர்.

'இருள் இருக்கக் கூடாது' என்று இவர் செபிக்கவும் இல்லை. 'இருள் இருக்காது' என்று இயேசு வாக்குறுதி தரவும் இல்லை.

இருள் இருக்கும். இருள்சூழ் பள்ளத்தாக்கு இருக்கும். சாவின் நிழல் இருக்கும். அதே போல, அவரின் உடனிருப்பும் இருக்கும். அதுதான் அழகு.
ஆக, கடவுள் நமக்கு தீமையில்லாத உலகையும், தீமையில்லாத நபர்களையும் உருவாக்கி அங்கே நம்மை நடக்கவிடவில்லை. எல்லாம் இருந்தாலும் அவரின் உடனிருப்பு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகின்றார். இவ்வாறாக, திருச்சட்டம் தர முடியாத உடனிருப்பை இயேசு தருவதால் அவர் ஒளியாகின்றார் உலகிற்கு.

இதை இன்றைய முதல் வாசகம் ஓர் உருவகமாக பதிவு செய்கின்றது. சூசன்னாவுக்கு எதிர்சான்று பகர்ந்த மூன்று முதியவர்களின் வார்த்தைகளை நம்பி அவரைச் சாவுக்குத் தீர்ப்பிடுகிறது மக்கள் கூட்டம். சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் இருப்பது போல இருக்கிறார் சூசன்னா. அங்கே கடவுளின் உடனிருப்பாக, ஒளியாக வருகிறார் தானியேல். 'தானியேல்' என்றாலே 'கடவுளின் புரிதல்' அல்லது 'கடவுளின் அறிவு' அல்லது 'கடவுள் என் நீதி' என்று பொருள். சூசன்னா சாவின் கட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

அவரின் ஒளியில் நாம் நடக்க, அவரின் இருப்பை நம்மில் என்றும் உணர்ந்தால் எத்துணை நலம்!


2 comments:

  1. " இருள் இருக்கும்; இருள் சூழ் பள்ளத்தாக்கு இருக்கும்; சாவின் நிழல் இருக்கும்.அதே போல அவரின் உடனிருப்பும் இருக்கும்" அதுதான் அழகு..... இன்னையப் பதிவின் சுருக்கம்.சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் இருப்பது போல் இருக்கும் சூசன்னாவுக்கு வரும் ' தானியேல்' போல, நம்மையும் இப்படிப்பட்ட...ஏன் இதற்குமேலும் மோசமான இடுக்கண்களிலிருந்தும்,இக்கட்டுக்களிலிருந்தும் நம்மை விடுவிக்க நமக்கும் "தானியேல்" களைஅனுப்புவார் இறைவன் என நம்புவோம்.அவரின் ஒளியில் நடக்கவும்,அவரின் உடனிருப்பை உணரவும். எனக்கு மிகவும் பிடித்த 23 ம் திருப்பாடலை இன்றையப்பதிவாகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மூன்று முதியவர்களின் வார்த்தைகளை நம்பி // typo Father. Only 2 old men

    ReplyDelete