Friday, April 12, 2019

ஒரு மனிதன் இறப்பது

இன்றைய (13 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 11:45-57)

ஒரு மனிதன் இறப்பது

இயேசுவின் பணியாலும், போதனையாலும், அரும் அடையாளங்களாலும் மக்கள் ஈர்க்கப்படுவதையும், அதனால் கண்களில் விழுந்த தூசியாக இயேசுவை யூதத் தலைவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!' - இது அவர்களின் அச்சமாக இருக்கிறது.

அப்போது அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா,

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்கிறார்.

அதாவது, பொதுநலனுக்காக தனிநபர்நலன் பலியிடப்படுவது நல்லது என்கிறார் கயபா.

இதையொட்டிய ஒரு நிகழ்வு மகாபாரதத்திலும் வருகின்றது.

பாண்டவர்களின் தலைவரான யுதிஷ்டிரர் கௌரவர்களால் - துரியோதன் மற்றும் அவருடைய மாமா சகுனி - ஏமாற்றப்பட்டு, சூதாடுவதற்காக திரிடிராஷ்டிரர் முன் அழைத்து வரப்படுகின்றார். சகுனி ஏமாற்றி விளையாடியதால் யுதிஷ்டிரர் ஒவ்வொன்றாக இழந்து வருவதைப் பார்த்து வருத்தப்படுகின்றன விதுரர் உடனடியாக அரசன் குறுக்கிட்டு சூதாட்டத்தை நிறுத்துமாறு கேட்கின்றார். 'ஒட்டுமொத்த அரசின் நலனை மையமாக வைத்து உம் மகனின் தன்னலத்தைக் கடிந்துகொள்ளும்' என்று விதுரர் கேட்கிறார்:

'ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தனிநபரை இழக்கலாம்.
ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம்.
ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம்.
ஒரு ஆன்மாவைக் காப்பாற்ற ஒட்டுமொத்த பூமியையே இழக்கலாம்' (மகாபாரதம், இரண்டு, 55.10)

ஆனால், திரிடிராஷ்டிரர் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தன் மனைவி உள்பட அனைவரையும் அனைத்தையும் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் இழக்கிறார் தருமர் என்றழைக்கப்படுகின்ற யுதிஷ்டிரர்.

பெரியவற்றிக்காக சிறியது துன்புறலாம் என்பது நாம் காலங்காலமாக எழுதி வைத்துள்ள பாடம்.

ஒரு பெரிய மனிதனுடைய பாவத்திற்கு ஒரு சிறிய கோழிக்குஞ்சு பலியாக்கப்படுவதில்லையா?

இப்படிப்பட்ட புரிதல் ஒரு வகையான குழு சர்வாதிகாரம். இல்லையா?

அதே வேளையில் உயிர்காக்கும் மருத்துவத்தில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உடல் சர்க்கரை நோயில் அழிவதை விட ஒரு விரலை எடுப்பது அல்லது ஒரு காலை எடுப்பது போன்றது. ஆக, முழுமை முழுமையாக இருக்க அதன் பகுதிகள் துன்புறலாம் என்பது எழுதாத பாடமாக இருக்கிறது.

இங்கே இயேசு பிறருக்காக துன்புறத் தயாராகின்றார்.

ஒட்டுமொத்த குடும்ப நலனுக்காக ஒரு தாய் கஷ்டப்படுவது, தந்தை கஷ்டப்படுவது, பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வது எல்லாமே ஏறக்குறைய இதே கோட்பாட்டின் நீட்சியே.

இந்த அறநெறி சரியா? என்று கேள்வி கேட்கலாம்.

ஆனால், 'எது தேவையோ அதுவே தருமம்' என்கின்றன புனித நூல்கள்.


1 comment:

  1. இன்றைய வாசகங்கள் சொல்லும் கருத்துக்களை விட, தான் சொல்ல வந்ததைத் தந்தை சொல்லியிருக்கும் பாணி எனக்கு நெருக்கமாகப் படுகிறது." பெரியவற்றிற்காக சிறியவை துன்புறலாம்"..... இந்த உலகம் நியாயமென நினைக்கும் இந்த விஷயத்திற்கு விளக்கம் சொல்ல எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகள்! விளக்கங்கள்!!ஆனாலும் கூட நம்மால் முழுமனத்துடன் அத்தனைக்கும் சரி சொல்ல இயலவில்லை." ஒட்டு மொத்த உடல் சர்க்கரை நோயில் அழிவதை விட,ஒரு விரலை எடுப்பதை ஒத்துக்கொள்ளும் மனம் ஒரு பெரிய மனிதனுடைய பாவத்திற்காக சிறிய கோழிக்குஞ்சு பலியாக்கப்படுவதை ஒத்துக்கொள்வதில்லை.ஆனால் ஒட்டுமொத்த குடும்ப நலனுக்காகத் தாய்,தந்தை கஷ்டப்படுவதையும், பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வதையும் இவற்றோடு ஒப்பிடுவது சரியா...தெரியவில்லை.இந்த அறநெறி சரியா? எனும் கேள்விக்கு " கொன்றால் பாவம் தின்றால் போச்சு" பாணியில் "எது தேவையோ,அதுவே தர்மம்" என்கிறார் தந்தை. ஆனாலும் அவர் சொல்ல வந்ததை மெய்ப்பிக்க மேற்கோள் காட்டியிருக்கும் மகாபாரதத்தின் வரிகள்...அதிலும் " ஒரு ஆன்மாவைக் காப்பாற்ற ஒட்டு மொத்த பூமியையே இழக்கலாம்"......இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை என்ற பாணியில் தன் கருத்துக்குவியல்களைத் தந்துள்ள தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete