Thursday, April 4, 2019

நமக்குத் தெரியுமே!

இன்றைய (5 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 7:1,2,10-25-30)

நமக்குத் தெரியுமே!

கடந்த சில நாள்களாக இயேசு பல்வேறு நிலைகளில், பல்வேறு நபர்களால் நிராகரிக்கப்பட்டதை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆக, இயேசுவின் இறப்பு என்பது அவருடைய ஒருநாள் நிகழ்வு அல்ல. மாறாக, அவருடைய பணி வாழ்வில் அவர் சந்தித்த சின்ன சின்ன எதிர்ப்புகள் அனைத்தும் இணைந்து ஒருநாள் பெரிய நிராகரிப்பு நிகழ்வாக மாறுகிறது.

இன்றைய நற்செய்தியில் அவருடைய பிறந்து ஊரைப் பற்றி அவர்கள் இடறல் படுகின்றனர்.

அதாவது, 'மெசியா வரும்போது அவர் எங்கிருந்து வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது' என்பது அவர்கள் கேட்டிருந்த மரபு வழிச் செய்தி. ஆக, இயேசு தன்னை மெசியா என்று சொல்லும்போது, அவர்களின் மரபு வழிச் செய்திக்கு இது முரணாக அமைகின்றது. இயேசுவின் நாசரேத்து பிறப்பு பற்றி அவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் அவரை ஏற்றக்கொள்ள மறுக்கின்றனர்.

இங்கே இயேசு அவர்களுக்கு பதிலுரைக்கின்றார்: 'நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என்பவை உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லிவிட்டு, அவர்கள் அறியாத ஒன்றை - அதாவது, தந்தையைப் பற்றி - அவர்களுக்கு விளக்குகின்றார். அதையும் ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லை.

காணக்கூடிய ஒன்றிலிருந்து காணக்கூடாத ஒன்றிற்கு இயேசு அவர்களை அழைத்துச் செல்ல, அவர்களால் அந்த நிலைக்குச் செல்ல முடியவில்லை.

இதற்குக் காரணம், அவர்களிடமிருந்த, 'நமக்குத் தெரியுமே' என்ற மனநிலை. இந்த மனநிலை நம்மில் அதீத நம்பிக்கையை உருவாக்கி, நம் மனத்தை மூடிவிடுகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் நம்மால் கடவுளையும் ஏற்றுக்கொள்ள முடியாது, மனிதர்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இந்த மனநிலை நம் நம்பிக்கை வாழ்வில் இருந்தால் அதைக் களைய முயற்சிக்கலாம்!

1 comment:

  1. காணக்கூடிய ஒன்றிலிருந்து காணக்கூடாத ஒன்றிற்கு இயேசு மக்களை அழைத்துச்செல்ல,அவர்களால் அந்த நிலைக்குச் செல்ல முடியாததற்குக்காரணம் அவர்களிடமிருந்த " நமக்குத்தெரியுமே" என்ற மனநிலை என்கிறார் தந்தை.நம்மில் அதீத நம்பிக்கையை உருவாக்கி, நம் மனத்தையும் மூடி, கடவுளையும்,மனிதர்களையும் ஏற்றுக்கொள்ள முடியாததொரு நிலைக்கு நம்மைத்தள்ளும் இந்த மனநிலையிலிருந்து தள்ளியே இருக்க நம்மை அறிவுறுத்துகிறது இன்றைய பதிவு.
    தந்தை பகிரும் இன்னொரு விஷயமும் நம்மை சிந்திக்க அழைக்கிறது.இயேசுவின் பணி வாழ்வில் அவர் சந்தித்த சின்னச் சின்ன நிகழ்வுகள் அனைத்தும் இணைந்து ஒருநாள் பெரிய நிராகரிப்பு நிகழ்வாக மாறியது போலவே நம் அருட்பணியாளர்களின் வாழ்க்கையிலும் நிகழலாம்.இயேசுவுக்கு சாட்சிகளாக,திருஅவைக்குத் தூண்களாக இருக்கும் இந்த அருட்பணியாளர்களுக்கு நம் உடனிருப்பையும்,செபங்களையும் வாரிவழங்குவோம்.நம் நம்பிக்கை வாழ்வில் உள்ள 'அதீத நம்பிக்கைக்கு' சற்று ஒதுங்கியே நிற்போம்.நல்லதொரு பதிவிற்காகத் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete