Monday, April 29, 2019

தான் விரும்பிய திசையில்

இன்றைய (30 ஏப்ரல் 2019) நற்செய்தி (யோவா 3:7-15)

தான் விரும்பிய திசையில்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் நிக்கதேமும் உரையாடும் நிகழ்வின் முதல் பகுதியை வாசித்தோம். இன்று அதன் தொடர்ச்சியை வாசிக்கின்றோம்.

'காற்று தான் விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது' என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில் உரையாடல் எப்போதும் இரண்டு நிலைகளில் நடக்கும். ஒன்று மேலோட்டமான நிலை. இன்னொன்று ஆழ்ந்த நிலை. இயேசு ஆழ்ந்த நிலையில் சொல்வதை மக்கள் மேலோட்டமான நிலையில் புரிந்துகொள்வார்கள்.

'நான் உமக்கு வாழ்வுதரும் தண்ணீரைத் தருவேன்' என்று இயேசு சொல்ல, சமாரியப் பெண்ணோ, 'உம்மிடம் வாளி இல்லையே. கிணறோ ஆழமானது!' என்பார்.

இதன் முன்னோட்டமாக, 'ஒருவர் மறுபடியும் பிறக்க வேண்டும்' என இயேசு சொல்ல, நிக்கதேம், 'வயதானபின் ஒருவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?' என்று கேட்கிறார்.

'மறுபடியும் பிறப்பது' என்பதை 'தூய ஆவியால் பிறப்பது' என்று சொல்கின்ற இயேசு, இதன் உருவகமாக 'காற்று வீசுதலை' முன்வைக்கின்றார். தூய ஆவியால் பிறப்பவர் காற்றின் இயல்பைக் கொண்டிருப்பார். நம்மிடம் இரு இயல்புகள் இருக்கின்றன: ஒன்று, உடல் இயல்பு அல்லது பருப்பொருள் இயல்பு - நம் உடலின் குளிர்ச்சி, வெதுவெதுப்பு, நகர்வு, இருப்பு தொடர்பானது. இரண்டு, ஆவி இயல்பு - நம் உள்ளிருக்கும் மனம். உடலின் நகர்வை நாம் கணித்துவிடலாம். ஆனால், நம் மனம் எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. மேலும், உடலுக்கு வரையறை உண்டு. ஆனால், ஆவிக்கு வரையறையும் அழிவும் இல்லை. ஆகையால்தான், நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையில் உடல் அழிந்தாலும் ஆன்மா வாழ்கிறது.

இதை ஒட்டிய ஒரு கருத்தை சபை உரையாளர் 11:5ல் வாசிக்கின்றோம்: 'காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது. அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறிய முடியாது.'

கணிக்க முடியாததும், கண்டுகொள்ள முடியாததும், அறிய இயலாததும் ஆவியின் செயல் என்றால், இந்த ஆவியை நாம் எங்கே கண்டுபிடிப்பது?

கார்ல் ரானர் என்ற இறையியலாளர் குறிப்பிடுவது போல, உடலில்தான் ஆவியின் செயல் வெளிப்பட முடியும். ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்கிய ஆண்டவராகிய கடவுள் தன் ஆவியை அவனுக்குக் கொடுக்கின்றார். ஆக, ஆதாம் வாழும் வரை அவனுடைய உடலும் ஆவியும் ஒருங்கியக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

இன்று, நாம் ஆவியின் செயல்பாட்டை எப்படி உணர்வது?

இச்செயல்பாட்டை உணர்ந்தவர்களை இன்றைய முதல் வாசகம் (காண். திப 4:32-37) நமக்கு அடையாளம் காட்டுகிறது. 'ஆவியின் செயல்பாட்டை' கொண்டிருப்பவர்கள் 'ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருக்கின்றனர்.' அவர்கள் 'ஒருவர் மற்றவரை ஊக்குவிக்கின்றனர்.'

'உம் ஆவியும் என் ஆவியும் ஒன்றாக இணைந்துவிட்டால் ஆனந்தம் ஆனந்தமே' என்ற பாடல் வரியைப் போல, அவரின் ஆவி, நம் ஆவியில் இணைந்து செயல்பாடானால் எத்துணை நலம்! நம் உடலுக்கு வரையறை இருக்கிறது. அது தன் வரையறையைத் தாண்டி செயலாற்ற முடியாது. ஆனால், ஆவிக்கு, காற்றுக்கு இல்லை. ஆக, நம் வரையறையைத் தாண்டி நம்மை உயரே எழுப்புவது ஆவியே.

2 comments:

  1. பதிவைப்புரிந்து கொள்ளவே நிறைய ஆவியின் செயல் தேவைப்படுகிறது என உணருகிறேன்."காற்றின் போக்கையோ,கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது.அவ்வாறே அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறிய இயலாது." தந்தையோடு சேர்ந்து நம்முள்ளும் கேள்வி எழுகிறது." கண்டுகொள்ள முடியாததும்,கணிக்க இயலாததும் ஆவியின் செயலென்றால்,இந்த ஆவியை எங்கே கண்டு பிடிப்பது? அவரின் செயல்பாட்டை எப்படி உணர்வது? தந்தையே பதிலையும் தருகிறார்..."ஒரே உள்ளமும்,ஒரே உயிருமாய் இருந்து,பிறரை ஊக்குவிக்கிறவர் எவரோ,அவரே ஆவியின் செயல்பாட்டைக்கொண்டிருப்பவர்." ஆகவே வரையறை தாண்டி நம்மை உயரே எழுப்பும் ஆவி நம்மை ஆட்கொள்வாராக! புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைக்கூடப் புரியும் படி விளக்கிச்சொல்லும் தந்தையின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete