Tuesday, April 30, 2019

மன அமைதிக்கான மூன்று வழிகள்

இன்றைய (1 மே 2019) திருநாள் (புனித யோசேப்பு - தொழிலாளர்களின் துணைவர்)

மன அமைதிக்கான மூன்று வழிகள்

'நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன் ... என் உழைப்பும் வீணே ... நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்து போனேன் ... உழைப்புக்காக ஒருவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம். வேலையில் தொந்தரவு. இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.' (காண். சஉ 2:18-23)

இன்று மே தினம் என்றழைக்கப்படும் தொழிலாளர் அல்லது உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறோம். இந்த நாளில் புனித யோசேப்பை தொழிலாளர்களின் துணைவர் என்றும் கொண்டாடுகிறோம்.

'உழைப்பினால் ஒருவர் மன அமைதியை இழக்கிறார்' என தன் எண்ணத்தைப் பதிவு செய்கிறார் சபை உரையாளர்.

ஆனால், புனித யோசேப்பு மன அமைதிக்கான மூன்று வழிகளை நமக்குக் கற்பிக்கின்றார்:

முதல் வழி: 'மற்றவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாதே!'

பிறரை நாம் இகழ்ச்சிக்கு உள்ளாக்கும்போது நாம் அவருடைய குறைய கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கிறோம். அப்படி நாம் பார்க்கும்போது அவருடைய மற்ற நல்ல குணங்களை நம்மால் பார்க்க முடிவதில்லை. நாம் மற்றவரைக் குறித்து எதிர்மறை பார்வையை வைத்திருக்கும்போது நாம் நம்மை அறியாமல் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்குகிறோம். இதனால் நாம் நம்முடைய மன அமைதியை இழக்கின்றோம்.

இரண்டாம் வழி: 'இறைவனின் குரலைக் கேள்!'

புனித யோசேப்பிடம் கடவுள் நேராகவோ, வானதூதர் வழியாகவோ பேசவில்லை. ஆனால், கனவின் வழியாகவே பேசுகின்றார். கனவில் தானே வந்தார் கடவுள் என்று கடவுளின் வார்த்தையை எளிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறார். மேலும், 'கேட்டல்' என்பது 'கீழ்ப்படிதல்' என்ற புரிதலையும் கொண்டிருக்கிறார் யோசேப்பு. பல நேரங்களில் நாம் நம்முடைய மூளையின் குரலைக் கேட்பதால்தான் மன அமைதி நம்மிடமிருந்து அகன்றுவிடுகிறது. ஆக, மூளையின் பேச்சை மிகவும் குறைக்க வேண்டும். ஜென் மதத்தில் மூளையை குரங்கிற்கு ஒப்பிடுகின்றனர். குரங்கு போல மூளை இங்கும் அங்கும் பாய்ந்துகொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் தான் சொல்வதை மறு நேரத்தில் அதுவே மறுக்கும். மூளை நம்மை ஏமாற்றிவிடும். மூளையின் சிந்தனை அனைத்தையும் உண்மை என அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. மூளையின் குரலைவிட இறைவனின் குரல் மேலானது.

மூன்றாம் வழி: 'இனியவை செய்!'

மரியாளை மனைவியாக ஏற்றுக்கொள்கின்றார். மனைவியை அழைத்துக்கொண்டு மக்கள் தொகை பதிவிற்குச் செல்கின்றார். சத்திரத்தில் இடம் தேடுகின்றார். இடம் கிடைக்காததால் மாட்டுக் கொட்டகையிலும் மாளிகையைக் கண்டுகொள்கின்றார். பெத்லகேமிலிருந்து எகிப்துக்கும், எகிப்திலிருந்து நாசரேத்துக்கும், நாசரேத்திலிருந்து எருசலேமிற்கும் என ஓடிக்கொண்டே இருக்கின்றார் யோசேப்பு. இனியவற்றை மட்டுமே செய்கின்றார் அவர். இன்னாதவற்றைத் தன்னிடமிருந்தே அகற்றி விடுகிறார்.

இறுதியாக,

அமைதி என்பது வெறும் மௌனம் அல்ல. மாறாக, அது, 'கீறல் இல்லாத முழுமை.'

நம் உழைப்பு நம்மிடம் ஒரு கீறலை உருவாக்கி நம் ஆற்றலை வெளியேற்றிவிடுகிறது. கீறல் இல்லாத பானை தண்ணீரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளும். கீறல் இல்லாத உள்ளம் அமைதியைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளும்.

இந்த மாதம் இனிய மாதமாகட்டும்!

4 comments:

  1. அப்படியே...
    நன்றி 🙏

    ReplyDelete
  2. மே1.. எங்கள் பங்கின் பாதுகாவலர்... மற்றும் தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித.யோசேப்பின் திருவிழா.உழைப்பை அர்த்தமற்றதாகக் காட்டும் சபைஉரையாளரின் வரிகளையும் தந்துவிட்டு மன அமைதிக்காக யோசேப்பு விடுக்கும் மூன்று வழிகளைப் பட்டியலிடுகிறார் தந்தை.அப்படியானால் 'உழைப்பு' மனஅமைதி தருவதில்லையா? எங்கோ இடிக்கிறதே! சரி... யோசேப்பு தரும் டிப்ஸ் என்னவென்று பார்ப்போம்."அடுத்தவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காத மனமும், குரங்குக்கு இணையான மூளை சொல்வதை விடுத்து,இறைவன் குரல் கேட்டு நடக்கும் மனமும்,இன்னாதவற்றை அகற்றி இனியவை மட்டுமே செய்யும் மனமுமே" அமைதி பெற யோசேப்பு கொடுக்கும் டிப்ஸ். தந்தையும் அவர் பங்குக்கு " தண்ணீரைத்தன்னகத்தே வைத்துக்கொள்ளும் கீறல் இல்லா பானைபோல, உள்ள அமைதியைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் கீறல் இல்லா உள்ளம்" என்று ஒரு டிப்ஸைத் தருகிறார். புலரவிருக்கும் இந்தப்புது மாதம் தந்தைக்கும்,மற்றும் அனைவருக்கும் மன அமைதியை அள்ளித்தரும் மாதமாக அமைய வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சிறப்பான கருத்துகள் தந்தையே...

    ReplyDelete