Tuesday, September 4, 2018

தங்களைவிட்டுப் போகாதவாறு

நாளைய (5 செவ்வாய் 2018) நற்செய்தி (4:38-44)

தங்களைவிட்டுப் போகாதவாறு

கப்பர்நகூமின் தொழுகைக்கூடத்திலிருந்து சீமோன் பேதுருவின் வீட்டிற்குச் செல்லும் இயேசு அவருடைய மாமியாரைக் காய்ச்சலிலிருந்து குணமாக்குகின்றார். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவாறே பலருக்கு நலம் தருகின்றார். அந்த இரவு பேதுருவின் வீட்டிலேயே ஓய்வெடுக்கின்றார். அடுத்த நாள் அதிகாலை எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுப் போகின்றார். எதற்காக அவர் புறப்பட்டுச் சென்றார் என்பதை லூக்கா பதிவு செய்யவில்லை என்றாலும், இயேசு செபிக்கச் சென்றார் என்பது நேரச் சூழலிலிருந்து தெளிவாகிறது. இயேசுவைத் தேடிச் செல்லும் மக்கள் அவரிடம் வந்து சேர்ந்ததும், 'தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.' ஆனால், இயேசு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இயேசு தன் பணிவாழ்வில் சந்தித்த மிகப்பெரிய சோதனை இது. இதை மிக எளிதாக வெல்கின்றார் அவர்.

'நீ ரொம்ப பாப்புலர். நீ இல்லாம ஒன்னுமே நடக்காது. நீ இங்கேயே இருக்கணும். நீ தொட்டா எல்லா நோய்களும் நீங்கிடுது. நீ பேசுனா தீய ஆவியும் ஓடிடுது.' - இப்படித்தான் இயேசுவிடம் மக்கள் சொல்கின்றனர்.

'பிரசித்தி' அல்லது 'புகழ்' மிகப்பெரிய போதை. அது ஒரு ஸ்லோ பாய்ஸன்கூட. ஏனெனில், அது ஒருவருக்குள் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய தனித்தன்மையை அழித்துவிடும். ஆனால், இயேசு அதிலிருந்து தப்பிவிடுகிறார்.

இயேசுவால் எப்படி தப்ப முடிந்தது?

அ. இயேசு தன்னை ஒருபோதும் தன் செயல்களோடு அடையாளப்படுத்தவில்லை. தன் செயல்களையும் தாண்டிய ஒரு தான்மை தன்னிடம் இருக்கிறது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஆ. 'இன்னும் கொஞ்சம், இன்னும் ஒரு ஊர், இன்னும் பல முகங்கள்' என இயேசு புதியன நோக்கி விரைவதில் கருத்தாயிருந்தார்.

இ. தன் பயணம், தன் இருப்பு அனைத்தையும் தன் கைக்குள் வைத்திருந்தார். தன் வாழ்க்கையை தான் வாழ்ந்தார். 'நான் இன்று இங்கே இருப்பேன். இதைச் செய்வேன்' என்ற உள்மன கட்டின்மை அவரிடம் நிறைவாக இருந்தது. யாருக்காகவும், எதற்காகவும் அவர் தன்னை வளைத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், வளைத்துக்கொள்ளுதல் இன்பம் (pleasure)  தருமே தவிர, அது மகிழ்ச்சியை (happiness) நம்மிடமிருந்து ஒரேயடியாக எடுத்துவிடும்.

புகழ் அல்லது பிரசித்தியின் மற்றொரு முகத்தை நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 கொரி 3:1-9) பார்க்கிறோம். 'நான் பவுலைச் சார்ந்தவன்,' 'நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன்' என கொரிந்துநகர திருச்சபை பிளவுபட்டுக் கிடக்கிறது. யார் ஒருவர் பிரசித்தி பெறுகிறாரோ அவரைச் சுற்றி ஒரு கூட்டம் உருவாகிறது. அந்தக் கூட்டம் தன்னிடம் சேராதவர்களை எதிரியாக மாற்றிவிடுகிறது. இது புகழ் கொண்டுவரும் அடுத்த தீமை.

இத்தீமையைக் கடிந்துகொள்கின்ற பவுல், 'தனிமைப்படுத்தும் அடையாளத்தை' (exclusive identity) முன்வைக்காமல், 'உள்ளடக்கிய அடையாளத்தை' (inclusive identity) முன்வைக்கிறார். என் தனித்தன்மை இது அல்லது ஆற்றல் இது என்று தன்னை முதன்மைப்படுத்தாமல் 'நாங்கள் பணியாளர்கள், நாங்கள் உடன் உழைப்பாளர்கள்' என்ற உள்ளடக்கிய அடையாளத்தைப் பயன்படுத்துகிறார் பவுல். மேலும், பெருமை அனைத்தையும் விளையச் செய்யும் கடவுளுக்கே என்றும், பணியாளர்களுக்கு அல்ல என்றும் உறுதியாக இருக்கின்றார்.

இன்று நாம் புகழ் என்ற ஒன்றை நேரடியாக அனுபவிக்காமல் இருக்கலாம்.

ஆனால், ஒவ்வொரு பொழுதும், 'இது போதும்' என நான் நினைத்து, 'நான் இருக்கும் நிலையில் ஓய்ந்திருப்பது,' நானே என்னைவிட்டு போகாதவாறு, அல்லது நான் வளராதவாறு கட்டிக்கொள்ளும் ஒரு சங்கிலி.

இந்தச் சங்கிலியை உடைக்க நிறைய மனத்திடமும், எதனோடும் அடையாளப்படுத்திக்கொள்ளாத கட்டின்மையும் அவசியம்.

1 comment:

  1. " புகழ்" .... இது எத்தனை அளவு ஒரு மனிதனுக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜியைத் தருகிறதோ,அத்தனை அளவிற்கு போதையையும் தருகிறது.அந்தப் போதை கூட என்று நம் புத்தியைக் குறிவைக்கிறதோ அப்பொழுதுதான் அது கவனிக்கப்பட வேண்டுமேயொழிய மற்றபடி சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தப் புகழ்ச்சி ஒரு 'டானிக்' தான்.இயேசுவின் வாழ்க்கையில் ' புகழ்' தன்னை மிஞ்சி விடாதவாறு பார்த்துக்கொண்டார் என்பதைக் குறிக்கும் " நான் இங்கே இருப்பேன்; இதைச்செய்வேன் என்ற 'உள்மனக்கட்டின்மை' அவரிடம் நிறைய இருந்தது எனும் வரிகளும், " பெருமை அனைத்தும் விளையச் செய்யும் கடவுளுக்கேயன்றி பணியாளர்களுக்கல்ல" என்று சொல்லும் பவுல் குறித்த வரிகளும் புகழின் இலக்கணத்தை வரையறுக்கின்றன. இந்த விஷயங்களுக்கிணையான இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வெளிச்சமிட்டுக்காட்டுகிறார் தந்தை...... " ஒவ்வொரு பொழுதும் 'இது போதும் என நான் நினைத்து.........நான் வளராதவாறு கட்டிக்கொள்ளும் சங்கிலி" எனும் வரிகளே அவை.அதாவது நம்மை நோக்கி வரும் புகழைப் போதையாக மாற்றுவது எத்தனை தீமையோ,அத்தனை தீமை நமக்குக் கிடைக்க வேண்டிய புகழைத் தடுத்து நிறுத்துவதும் கூட என்பதுவே அது. "புகழை அருந்துவோம்.....நமக்கு அதை செரிக்கக் கூடிய சக்தி இருக்கும் வரை."

    இன்பத்திற்கும்,மகிழ்ச்சிக்கும் இடையே உள்ள மயிரிழை வித்தியாசத்தை அழகாக கோடு காட்டியிருக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete