Monday, September 24, 2018

மக்கள் திரளாக

நாளைய (25 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 8:19-21)

மக்கள் திரளாக

'யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?' என்று இயேசு கேட்கும் நிகழ்வை நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். மாதத்திற்கு ஒருமுறை இந்த நற்செய்திப் பகுதி வருவதுபோல இருக்கிறது.

'மக்கள் திரளாக இருந்த காரணத்தால் இயேசுவின் பெற்றோர் அவரை அணுகமுடியவில்லை' - இந்த வாக்கியத்தை மட்டும் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசுவுக்கு தனிமை உணர்வே இருந்திருக்க வாய்ப்பில்லை. எந்நேரமும் அவரைச் சுற்றி கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், கூட்டத்திலும் சில நேரங்களில் தனிமை உணர்வு வர வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, திரையரங்கம் முழுவதும் கூட்டமாக இருந்தாலும், கையில் பாப்கார்ன் வைத்து அமர்ந்திருக்கும் நமக்கு தனிமை உணர்வு வர வாய்ப்பு இருக்கிறது.

'திரளாக இருந்த காரணத்தால் அவர்கள் அவரை அணுகமுடியவில்லை'

ஆக, மக்கள் திரள் இயேசுவுக்கும், அவரின் பெற்றோருக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவராக இருக்கிறது.

இதையே ஒரு உருவகமாக எடுத்துக்கொண்டால், மனம் நிறைய எண்ண ஓட்டங்கள் இருக்கும்போது, என் இறைவனை நான் கண்டுகொள்ள அவையே தடுப்புச்சுவராக மாறிவிடுகின்றன.

நூலகம் மாதிரி அமைதியாக நம் மனம் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், பல நேரங்களில் அது மீன் மார்க்கெட் போல கொய, கொய என்றே இருக்கிறது.

நொடிக்கு நொடி நம் எண்ண ஓட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதை நாளைய முதல் வாசகம் (காண். நீமொ 21:1-6, 10-13) நமக்குச் சொல்கிறது.

'மன்னவனின் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது. வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்' - மன்னவன் அல்லது அரசனின் மனம் மட்டுமல்ல, மானிடர் ஒவ்வொருவரின் மனமும் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது.

ஒரே நேரத்தில் பல வீடியோ ப்ரொஜக்டர்களை ஓட்டிவிடுவது போல மனம் தன் எண்ண ஓட்டங்களை மொத்தமாக ஓட்டி, நம்மைக் குழப்பிவிடுகிறது. அந்தக் குழப்பத்தில் நாம் இறைவனை அணுகமுடியாது.

என் உளமே எனக்கு அந்த நேரத்தில் தெளிவாகாதபோது, கடவுளின் திருவுளம் எனக்கு எப்படித் தெளிவாகும்?

ஒவ்வொரு ப்ரொஜெக்டராய் ஆஃப் பண்ணும்போது, ஒவ்வொரு எண்ணத்தையாக குறைக்கும்போது, படம் தெளிவாகும், மனம் தெளிவாகும்.

கூட்டத்தில் ஒவ்வொருவராய்க் கடக்க நாம் இயேசுவின் அருகில் செல்ல முடியும். அவரின் அருகில் - அவரின் திருவுளத்திற்கு அருகில் - செல்பவர்களே அவரின் தாயும், சகோதரர்களும் ஆவர்.

1 comment:

  1. பல முறை கேட்ட விஷயமே எனினும் ஒவ்வொரு முறையும் விஷயத்தை புதுப்புதுக் கோணங்களில் பரிணமிக்கச்செய்கிறார் தந்தை.இயேசுவிற்கும்,அவரின் பெற்றோருக்குமிடையே இருந்த மக்கள் திரளை ஒரு தடுப்புச்சுவராக உருவகிப்பது மட்டுமல்ல ,அதே தடுப்புச்சுவராக இயேசுவிற்கும்,நமக்குமிடையே நிலவும் எண்ண ஓட்டங்களையும் குறிப்பிடுகிறார்.பல நேரங்களில் நமது மனமே ஒரு கலங்கிய குட்டையாகத் தெரியும்போது ,நானே எனக்கு அந்நியமாகிப் போகும்போது கடவுளின் திருவுளத்தை நான் எப்படித் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்? நமக்குள்ளும்,நம்மைச்சுற்றியும் உள்ள அத்தனைத் தடுப்புச்சுவரையும் ஒவ்வொன்றாக்க் களையும் போது மட்டுமே நமக்குள் உறையும் இறைவன் நம் கண்களுக்குத் தெரிவார் என்பதைத்தாண்டி,நாமே அவரின் தாயும்,சகோதரரும் ஆவோம் என்பது நாம் பெறும் பேறு. அதை அடைவதில் தயக்கம் வேண்டாம் எனச் சொல்லும் தந்தையை இறைவன் தன் நலன்களால் நிரப்புவாராக!!!

    ReplyDelete