Monday, September 10, 2018

ஓரிடத்தில் நின்றார்

நாளைய (11 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 6:12-19)

ஓரிடத்தில் நின்றார்

மலைக்குப் போய் இரவெல்லாம் தன் தந்தையிடம் இறைவேண்டல் செய்த இயேசு, காலையானவுடன் தம் சீடர்களைக் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 'திருத்தூதர்கள்' என்று பெயரிடுகின்றார்.

இது முடிந்தவுடன், 'இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா.

இங்கே 'நின்றார்' என்பதை இயேசுவின் 'நிற்றல்' என்ற செயலாகவோ, அல்லது அவர் 'வேலைகளை நிறுத்தினார்' என்றும் பொருள் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, அமர்ந்திருக்கும் நான் என்னை விட பெரியவர் வரும்போது எழுகிறேன் என வைத்துக்கொள்வோம். அதை நாம் 'நிற்பது' என்கிறோம். அதே போல, பிரிண்ட் எடுத்துக்கொண்டிருந்த என் பிரிண்டர் மின்சாரம் தடைபட்டதால் வேலையை நிறுத்திக்கொண்டால், பிரிண்டர் 'நின்றுவிட்டது' ('ஓய்ந்துவிட்டது' அல்லது 'வேலையை நிறுத்தியது') என்று சொல்கிறோம்.

நாளைய நற்செய்திப் பகுதியில் மேற்காணும் இரண்டு பொருள்களுமே பொருந்துகின்றன. இதுவரை முழந்தாள்படியிட்டு, அமர்ந்து, நடந்து வந்த இயேசு இப்போது நிற்கிறார். 'நிற்றல்' அவரின் 'செயல்பாட்டிற்கான தொடக்கமாகவும்' இருக்கிறது. அதே, நேரத்தில் இயேசு சில நிமிடங்கள் ஓய்வெடுக்கின்றார்.

இன்று, நாம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 'ஓய்வு' எடுப்பது சோம்பல் என்று நாம் எண்ணும் அளவிற்கு நம் முதலாளித்துவ, நுகர்வோர் உலகம் நம்மை இயக்கிக்கொண்டே இருக்கிறது. ஓய்வில்லாமல் ஓடி உழைத்துவிட்டு, பின் நோய் வந்து ஓய்வெடுப்பதுதான் நம் காலத்தின் முரணாக இருக்கிறது. அதற்குப் பதிலாக, நோயே வராத அளவிற்கு நாம் ஓய்வெடுத்துக்கொண்டால் இன்னும் நலமாக இருக்கும் அல்லவா. இதையே சபை உரையாளர், 'தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது. காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்' (காண். 4:5-6) என்கிறார்.

நாம் ஓடும்போதுதான் அடுத்தவரோடு போட்டி போடுகிறோம். ஆக, ஓடுதல் நம் வாழ்வில் இன்னும் மனச்சோர்வை அதிகமாக்கி போட்டி மனப்பான்மையைக் கூட்டிவிடுகிறது. இதைத்தான் நாளைய முதல் வாசகத்தில் பார்க்கிறோம். தங்களுக்குள் பிரச்சினைகள் எழும்போது இறைமக்கள் நீதிமன்றங்களை நாடுவதைக் கண்டிக்கின்ற பவுல், 'எதற்காக பிரச்சினைகள் எழ வேண்டும்?' 'ஏன் வாழ்வில் பிரச்சினை?' என்ற அடிப்படைக் கேள்வியைக் கேட்கின்றார்.

வேகமாக ஓடும்போது நம் கண்களில் படும் அனைத்தும் தெளிவில்லாமலே இருக்கும். ஆனால், நின்று பார்த்தால் வாழ்வு தெளிவாகும்.

ஆக, இறைவேண்டல், வேலை, நோய் நலமாக்குதல், தீய ஆவி விரட்டுதல் என நாள் ஓடிக்கொண்டே இருந்தாலும் கொஞ்சம் நின்று ஓய்வு கண்டார் இயேசு. அந்த நிற்றலில் தன் இருப்பையும், இருப்பின் பயனையும் அறிந்தார். என் வாழ்வின் இருப்பையும், இருப்பின் பயனையும் அறிய நானும் கொஞ்சம் நிற்கலாமே!

1 comment:

  1. " காற்றைப்பிடிக்க முயல்வது போன்ற உழைப்பு கை நிறைய இருப்பதை விட, மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்!" இப்படிப்பட்ட விஷயங்கள் அடிக்கடி நம் கண்களிலும்,செவிகளிலும் விழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் என்ன உண்கிறோம், எப்படி உண்கிறோம் என்ற சிந்தை கூட சிறிதுமின்றி ஓடி,ஆடி உழைத்துத் திரும்பிப் பார்க்கையில் கடந்து வந்த பாதையே அரத்தமற்றதாகிப்போய் விடுகிறது பலருக்கு..இவர்களைப் பார்த்துத் தந்தை கூறும் அழகான விஷயம் ... "வேகமாக ஓடும்போது நம் கண்களில் அனைத்தும் தெளிவில்லாமலே இருக்கும்; ஆனால் நின்று பார்த்தால் வாழ்வு தெளிவாகும்" தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை ஓடி ஓடி உழைத்த இயேசுவே தன் நிற்றலில் தன் இருப்பையும்,இருப்பின் பயனையும் கண்டாரெனில், நம்
    வாழ்வின் இருப்பையும்,இருப்பின் பயனையும் அறிய நாமும் கொஞ்சம் நிற்கலாமே!
    உழைத்தலின் பயனை மட்டுமின்றி இருப்பின் பயனையும் புரிய வைத்த தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete