Friday, September 21, 2018

என் அடிகள் சறுக்காமல்

நாளைய (22 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 8:4-15)

என் அடிகள் சறுக்காமல்

நாளைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் எடுத்துக்காட்டையும், அந்த எடுத்துக்காட்டுக்கு இயேசு தரும் விளக்கத்தையும் வாசிக்கின்றோம்.

நான்கு வகை நிலங்களில் அல்லது விதை விழும் வகைகளில் முதல் வகையை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'சில விதைகள் வழியோரம் விழுந்தன. வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.'

இந்நிகழ்வில் விதைகள் விழுங்கப்பட்டதற்கு விதைகள் பொறுப்பல்ல. மாறாக, விதைத்தவரும், விழுங்கிய பறவைகளுமே பொறுப்பு. இவ்வகை விதைகள் மிகவும் கையறுநிலையில் இருக்கின்றன. இவைகளின் நொறுங்குநிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 கொரி 15:35-37,42-49) தூய பவுலடியார் கொரிந்து நகர திருச்சபைக்கு உயிர்ப்பு நிகழ்வு அல்லது இறந்தோர் உயிர்ப்பு பற்றி எழுதுகின்றார். அவரும் விதை என்ற உருவகத்தையே கையாளுகின்றார்.

நான் பிறக்கும்போது 'நான்' என்ற விதை 'வழியோரத்தில்' விதைக்கப்படுகிறது. இறப்பு என்ற பறவை 'நான்' என்ற என்னை ஒருநாள் விழுங்கிவிடுகிறது. இப்படியாக, எங்கோ விழுந்து, யாரும் கவனிப்பாரற்றுக் கிடந்து, ஒருநாள் இறப்பு விழுங்கிவிடுவதற்குதத்தான் நாம் வாழ்கிறோமா? - இந்தக் கேள்வி அடிக்கடி எழுகிறது.

நம் வாழ்விற்கு பொருள் இல்லையா? நாம் எந்நேரமும் விதைப்பவரின் இரக்கத்திலும், பறவைகளின் இரக்கத்திலும்தான் இருக்க வேண்டுமா?

வாழ்வின் பொருளை நாம் எப்படி உணர்வது?

இதற்கான விடையை நாளைய பதிலுரைப் பாடல் (திபா 56) தருகின்றது. திபா 56 பற்றுறுதியும் நம்பிக்கையும் தரக்கூடிய திருப்பாடல். இதை தாவீது 'தொலைவில் வாழும் மௌன மாடப்புறா' என்ற மெட்டில் பாடுகின்றார். பெலிஸ்தியர் தாவீதை காத்து என்ற இடத்தில் பிடித்து வைத்த வேளையில் அவர் பாடுகின்றார்.

அதாவது, தான் ஒரு நிராயுதபாணியாக, எதிரிகளின் கையில் சிக்கியிருக்கும் வேளையில், அவர்கள் தனக்கு எத்தீங்கும் செய்யக்கூடும் என்ற நிலையில் தாவீது இப்பாடலைப் பாடுகின்றார்.

'உம் முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் என்னைக் காத்தீர் அன்றோ!' என்று பாடுகின்றார்.

இது தாவீதின் உச்சகட்ட நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஒரு பெரிய கிணறு அல்லது ஆழமான ஆறு. அதன் கரையில் நான் நடக்கிறேன். திடீரென்று என் காலடிகள் சறுக்குகின்றன. விழுந்தால் எனக்கு மரணம்தான். வலி, பயம், உடலில் சிராய்ப்பு, கைபிடி இல்லாத நிலை என நான் சறுக்கிக்கொண்டு போகும்போது, திடீரென்று ஒரு கை வந்து என்னைப் பிடித்துத் தூக்கினால் எப்படி இருக்கும்?

இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் தாவீது இருக்கின்றார். இறைவன் அவரைத் தூக்கிவிடுகின்றார்.

ஆக, வழியோரத்தில் விழுந்த விதையாய் நான் சறுக்கிக்கொண்டே போய், வானத்துப் பறவைக்கு உணவானாலும்,

இறப்பு என்ற பறவை சறுக்கும் என் வாழ்க்கையை விழுங்கிவிட்டாலும்,

என் அடிகள் சறுக்காமல் என்னைத் தூக்கிவிட அவர் இருக்கின்றார்.

அவர் தூக்கிவிடுவது எதற்காக?

அவரின் வழியில் நான் நடப்பதற்காக.

அவரின் வழியில் அடிகள் சறுக்குவதில்லை. வானத்துப் பறவைகள் விழுங்குவதில்லை.


2 comments:

  1. கொட்டும் அருவியாக வந்து விழுகின்றன தந்தையின் வார்த்தைகள்! வழியோரம் விதைக்கப்பட்டு,பறவைகளால் விழுங்கப்பட்டு,கையறு நிலையில் கதறும் பறவைகளின் நிலையை " நாம் எந்நேரமும் விதைப்பவரின் இரக்கத்திலும்,பறவைகளின் இரக்கத்திலும் தான் வாழ வேண்டுமா?" எனும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் தந்தை.இதே நிலையில் இருக்கும் தாவீது "உம் முன்னிலையில் நான் நடக்க,என் அடிகள் சறுக்காமலிருக்க என்னைக்காத்தீரன்றோ" என்று இறைவனைப்பார்த்து தன் உச்ச கட்ட நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் எனில் என்னாலும் தானே அது இயல வேண்டும்?அவர் தூக்கி விடுவது எதற்காக? " அவரின் வழியில் நான் நடப்பதற்காக." தந்தையின் வரிகள் மட்டுமல்ல... " என்னருகில் நீ இருப்பதனால் எதற்கும் அஞ்சிடேன்" எனும் 23 ம் திருப்பாடலும் சேர்ந்தே என் மனதுக்கு உரமளிக்கின்றன.நான் நினைத்தால் என் கையறு நிலையை என் கழுத்தைச் சுற்றி எறிய முடியுமென நம்பிக்கை விதைகளைத் தூவும் தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. மன்னிக்கவும்..அந்த மூன்றாவது வரி..." கதறும் பறவைகளின் நிலையை" அல்ல... "கதறும் விதைகளின் நிலையை" என்றிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்....

    ReplyDelete