Tuesday, September 11, 2018

துள்ளி மகிழ்ந்து

நாளைய (12 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 6:20-26)

துள்ளி மகிழ்ந்து

தன் 'ஒப்புகைகள்' என்ற நூலில் தான் எல்லாவற்றையும் இறைவனிடம் சரணாகதி ஆக்கிவிட்டதாக இறைவனிடம் சொல்லும் அகுஸ்தினார், 'அறிதல்,' 'அன்பு செய்தல்' என்ற இரண்டு வார்த்தைகளைப் பற்றிப் பேசுகின்றார். இந்த இரண்டு வார்த்தைகளிலிருந்து தான் விலகியிருக்க விரும்புவதாக நினைக்கிறார். ஏனெனில், இந்த இரண்டு வார்த்தைகளுமே 'அகந்தை' வார்த்தைகள் என்கிறார். ஏனெனில், நான் ஒன்றை அறியும் போதும், ஒருவரை அன்பு செய்யும்போதும், அல்லது ஒருவருக்கு நான் அறிமுகம் ஆகும்போதும், ஒருவரால் அன்பு செய்யப்படும்போதும், 'நான் கிரேட்' என்ற உணர்வு மனதில் எழுமாம். இந்த உணர்வு தவறு என்கிறார் அகுஸ்தினார். அப்படி என்றால் அறிதல் மற்றும் அன்பு செய்தல் தவறா? என அவரே மீண்டும் கேட்கிறார். 'அறிதலும்,' 'அன்பு செய்தலும்' 'பெருமித' அல்லது 'அகந்தை' உணர்வை ஏற்படுத்தினால் தவறு என நிறைவு செய்கின்றார்.

நாளைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 கொரி 7:25-31) நம் சிந்தனையைத் தொடங்குவோம். 'பரத்தைமை,' 'விபச்சாரம்,' 'ஒருபால் புணர்ச்சி' பற்றி கொரிந்து நகர திருச்சபையை எச்சரித்த பவுல், 'மணம் முடிப்பதையும்,' 'மணமாகாமல் இருப்பதையும்' பற்றி எழுதுகின்றார்.

'மணவாழ்க்கையில் துன்பங்கள் உண்டு. மணத்துறவில் மகிழ்ச்சிகள் குறைவு' என்பது ஆங்கிலப் பழமொழி. இதையே பவுலும், 'ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்' என்கிறார். மேலும், அத்தகைய இன்னலுக்கு யாரும் ஆளாக வேண்டாம் என்பதற்காக 'மணமாகாத நிலையை' அறிவுறுத்துகிறார்.

அவர் சொல்லும் விதம் அழகாக இருக்கிறது:

'இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர்போல இருக்கட்டும். மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர்போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும், செல்வம் பயன்படுத்துவோர் அவற்றில் ஈடுபடாதவர்போலவும் இருக்கட்டும்'

அதாவது, ஒன்றோடு இணைந்திருந்தாலும் அதன் கனியிலிருந்து, அதன் விளைவிலிருந்து விலகி நிற்பது. இன்று, நாம் நிறைய மனிதர்களோடு, நிறைய பொருள்களோடு நம்மையே ஒட்டிக்கொள்ளவும், அந்த மனிதர்கள் அல்லது பொருள்களை அப்படி நம் உரிமையாகவும் ஆக்கிக்கொள்ள விழைகிறோம். ஆனால், 'காலம் குறுகியது' என்பதால், நாம் அவற்றைவிட்டு விலக வேண்டிய நிலை வரும். அப்போது விலகுவதற்குத் தடையாக இருக்கும் நம்முடைய ஒன்றிணைப்பு. ஆக, அந்தத் துன்பம் வரவேண்டாம் என தன் திருச்சபைக்கு அறிவுறுத்துகிறார் பவுல்.

நாளைய நற்செய்தி வாசகத்தில், தன் சீடர்களோடு சமவெளியில் வந்து நிற்கும் இயேசு, தன் சமவெளிப் பொழிவை ஆற்றுகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இதே நிகழ்வை மலைப்பொழிவு என்கிறார். இயேசுவின் சமவெளிப்பொழிவில் நான்கு ஆசீரும், நான்கு சாபங்களும் இருக்கின்றன. அன்பு செய்யும் கடவுள் சபிக்கலாமா? ஆசீரும், சாபமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றே இதை புரிந்துகொள்ள வேண்டும். நாணயத்தின் ஒரு பக்கம் துன்புறுவோர் என்றால், அடுத்த பக்கம் துன்புறுத்துவோர் என்பதுதான் நியதி. ஆக, முதல் பக்கத்தில் இருப்பவர்களை வாழ்த்துகிறார். அடுத்த பக்கத்தில் இருப்பவரை சபிக்கிறார். இதை வாசிக்கும் வாசகர்தான் தான் எந்தப் பக்கம் இருக்கிறார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆசீரின் மைய வார்த்தையாக 'மகிழ்ச்சி' அல்லது 'நிறைவு' இருக்கிறது. ஆக, குறைவாக இருப்பவற்றை கடவுள் நிறைவு செய்து மகிழ்ச்சி தருகின்றார்.

மணமாகாத நிலையில் கணவன் அல்லது மனைவி குறைவாக இருக்கலாம். அந்தக் குறையை நிறைவு செய்கிறார் கடவுள்.

மணமான நிலையில் கணவன் அல்லது மனைவி குறையோடு தெரியலாம். அந்தக் குறையை நிறைவு செய்கிறார் கடவுள்.

ஆக, நபர்களோடும், பொருள்களோடும் அதிகம் ஒட்டிக்கொள்ளாத நிலையில்தான் ஒருவர் ஆண்டவரோடு ஒட்டிக்கொள்ள முடிகிறது. அதுவே மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கிறது பவுலுக்கு.

1 comment:

  1. இன்றையப் பதிவை மேலோட்டமாக வாசிக்கையில் நன்றாகத்தான் உள்ளது.ஆனால் இன்னும் கொஞ்சம் ஒரு நெருக்கம் வேண்டிப்பார்க்கையில் பல விஷயங்கள் என்னிலிருந்து கொஞ்சம் விலகி நிற்பதாகப்படுகிறது." நான் ஒருவருக்கு அறிமுகம் செய்யப்படும் போதும்,அன்பு செய்யப்படும் போதும் " நான் க்ரேட்" என நினைப்பது ஒரு பாசிட்டிவ் எனர்ஜியையே தரும்; அப்படி நினைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.மேலும் திருமணம் முடிப்போர் இன்னலுறுவர் என்பதற்காக மணமாகாத நிலையை அறிவுறுத்துவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதா...தெரியவில்லை.இறையழைத்தல் என்பது தன்னிலிருந்து இயல்பாக வரவேண்டுமே யொழிய இல்லற வாழ்வின் இன்னல்களிலிருந்து தப்பிப்பதற்காகச் சென்றால் " கொள்ளிக்கட்டைக்குப் பயந்து தீயில் விழுந்த " கதையாகிவிடும் என்பது என் கருத்து.ஆனால் என்ன வாழ்க்கை வாழ்ந்திடினும் எதுவுமே நம்மை அதீதமாகத் தாக்காமல் நாம் தாமரை இலைத் தண்ணீராக நம் வாழ்க்கையை வாழ வேண்டுமென்பது ஏற்புடைய கருத்து. ஏனெனில் இந்நிலையில் தான் ஒருவர் ஆண்டவரோடு ஒட்டிக்கொள்ள முடிகிறது.இத்தனையும் சாத்தியமெனில் நாம் துள்ளிக்குதிக்கலாம் விண்ணகத்தில் நமக்குக் கைமாறு அதிகமென்று.இயல்பாக வாழவேண்டிய வாழ்க்கையின் இலக்கணத்தை எடுத்துரைத்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete