Sunday, February 21, 2016

அயர்ந்த தூக்கம்

'இறந்துவிடுவார் என நினைத்தார்கள். ஆனால் அவர் தூங்கிக்கொண்டிருந்தார்.'

இப்படித்தான் சொல்ல வேண்டும் தோபித்து நூல் 8ஆம் பிரிவை.

சாராவின் கையையும், தோபியாவின் கையையும் ஒருசேரப் பிடித்து திருமணத்தை நடத்திவைத்தார் இரகுவேல்.

1. 'பெற்றோர் உறங்க விரும்பினர்'

'சாரா-தோபித்து' முதலிரவுக் காட்சியை இப்படித்தான் பதிவு செய்கின்றார் ஆசிரியர். 'இந்தத் திருமணம் நிறைவடையுமோ, அல்லது இந்த மணமகனும் இறந்துவிடுவாரா?' எனக் கலங்கிக்கொண்டிருக்கும் இரகுவேல்-எதினாவின் கண்களுக்கு தூக்கம் எங்கிருந்து வந்தது? 'உறக்கம்' என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்தி, மணமக்களும் இனிதே உறங்குவார்கள் என்ற செய்தியை வாசகருக்கு முன்வைக்கின்றார் ஆசிரியர்.


2. 'இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து'

மணவறைக்குள் நுழைந்த தோபியா செய்யும் முதல் வேலை மீனின் ஈரலையும், இதயத்தையும் நெருப்பில் போட்டு பேயை விரட்டுவது. வீட்டைவிட்டு வெளியே வந்த பேயை இரபேல் எகிப்து நோக்கி ஓட்டிக்கொண்டு போய் அங்கே விலங்கிடுகிறார். 'எகிப்து' இங்கே இஸ்ரயேலர்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்ற 'விலங்கை' நினைவுபடுத்துகிறது.

3. 'தோபியா-சாரா மன்றாட்டு'

தோபியாவும், சாராவும் எழுந்துநின்று மன்றாடுகின்றனர். மூன்று விடயங்களை இங்கே கவனிக்க வேண்டும்:

(ஆ) எழுந்து நின்று செபித்தல் - முழுமையான கட்டின்மையை இது குறிக்கிறது. அமர்வதும், படுத்திருப்பதும் ஒருவகையான அடிமைத்தனத்தை குறித்தது பண்டைக்காலத்தில். அடிமைகளை ஓரிடத்திலிருந்து, மற்ற இடத்திற்கு அமர வைத்தும், படுக்க வைத்தும் (சில நேரங்களில் இடத்தை சேமிப்பதற்காக நிற்க வைத்தும்) கடத்தினர். மேலும் நிற்கும்போது நாம் உயர்ந்து நிற்கிறோம். ஆக, நம் எண்ணங்கள் இறைவனுக்கு இன்னும் நெருக்கமாகின்றன.

(ஆ) தொடக்கநூலில் படைப்பின் நோக்கம். ஆண்-பெண் படைப்பு பற்றி தொடக்கநூலில் சொல்லியிந்ததை இருவரும் நினைவுகூறுகின்றனர்.

(இ) இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். ஒருவர் மற்றவரைத் தழுவுதலின் நோக்கம் என்ன என்பதை இங்கே காண்கிறோம்.

4. 'எட்டிப்பார்த்த பணிப்பெண்'

முன்இரவில் துயில் எழும் இரகுவேல் தன் மனைவி எதினாவை எழுப்ப, எதினா பணிப்பெண்ணை எழுப்ப, பணிப்பெண் கையில் விளக்கோடு மெதுவாக அறைக்குள் சென்று பார்க்கிறாள். ஒருவேளை தோபித்து இறந்துவிட்டால், யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடுவதற்கே இந்த முயற்சி. 'இறந்து போயிருப்பார்' என நினைத்து, எட்டிப்பார்த்த பணிப்பெண், 'அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்' தோபியாவை ஆச்சர்யத்தோடு பார்த்திருப்பார். 'அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்' என்று வாசிக்கும் வாசகரின் உதட்டில் ஒரு புன்னகை வந்துபோகும்.

5. 'இரகுவேலின் பாட்டு'

தன் மருமகன் நலமே உள்ளார் என அறிந்த இரகுவேல் கடவுளின் இரக்கத்தைப் புகழ்ந்து பாடுகின்றார். தோபியா-சாரா, இரகுவேல் என இருவரின் மன்றாட்டுக்களிலும், 'இறைவனின் இரக்கமே' மேலோங்கி இருக்கின்றது. அதாவது, வாழ்வில் நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்குக் காரணம் இறைவனின் இரக்கமே என்பதை தோபித்து நூல் அழகாக பதிவு செய்கின்றது.

6. 'பதினான்கு நாள்கள்'

திருமண விழா இனிதான் ஆரம்பம். வழக்கமாக யூத பாரம்பரியத்தில் ஏழு நாட்கள் திருமண விழா நடக்கும். ஆனால், இங்கே புதுமையான முறையில் மருமகன் காப்பாற்றப்பட்டதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. பதினான்கு நாட்கள் விழா எடுக்கின்றார் இரகுவல். சாரா வாழ்வு இவ்வளவு நாட்கள் சுரங்கப்பாதை இருட்டாய் இருந்தது. இப்போது இறுதியில் ஒளி தோபியா வடிவில் வந்திருக்கிறது. சாராதான் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பாள். தூக்கு போட்டு இறக்கும் அளவுக்குச் சென்றவளுக்கு, இந்த புதிய மகிழ்ச்சி அவளை திக்குமுக்காடவைத்திருக்கும்.

7. 'தம்பி...இனி நீ என் மகன்;!'

மருமகனை மகனாக்கிக்கொள்கிறார் இரகுவேல். மாமனார்-மருமகன் உறவு, தந்தை-மகன் உறவு என மாறுகிறது. 'என் மகள், நாங்கள், எங்களின் உடைமைகள் அனைத்தும் இனி உனதே!' என அனைத்தையும் தாரை வார்க்கின்றார் இரகுவேல். ஏனெனில் தோபியா, நிறைவுற்ற இந்த திருமண உறவின் வழியாக, இரகுவேல்-எதினா குடும்பத்தின்மேல் இருந்த பழிச்சொல்லையும், கேலிப்பேச்சையும் துடைக்கின்றார்.


1 comment:

  1. இன்றையப் பதிவின் தொடக்கம் முதல் முடிவு வரை இறைவனின் இரக்கம் ஒரு பின்னணி இசை போல் இழையோடுவதை உணர முடிகிறது.சாராவின் பெற்றோரான இரகுவேல்- எதினா,மணப்பெண் சாரா மற்றும் தோபியா அனைவரும் இறைவனின் எல்லையில்லா இரக்கத்திற்கு கட்டியம் கூறுகின்றனர்.மீனின் ஈரலையும்,இதயத்தையும் நெருப்பிலிட்டு எரித்து சாராவைப்பிடித்திருந்த பேயை விரட்டும் தோபியாவாகட்டும்,மகள் சாராவை மணமகனோடு தனிமையில் விட்டு விட்டு உறங்கச்செல்லும் சாராவின் பெற்றோராகட்டும்,இறந்த மணமகனைப் புதைக்க வேண்டியிருக்குமோ என சந்தேகத்துடன் எட்டிப் பார்க்கும் பணிப்பெண்ணாகட்டும் ..அனைவருமே இறைவனின் இரக்கத்தை ருசிக்கின்றன்;இரசிக்கின்றனர்.முதலிரவுக்குள் நுழையும் தோபியாவும்,சாராவும் எழுந்து நின்று இச்சையினால் இல்லாமல் நேர்மையான மனத்தோடு ஒருவர் மற்றொருவரைத் தழுவும் முன் இறைவனின் வரம் வேண்டி நிற்கும, பாங்கு இன்றைக்கு திருமணத்திற்குள் நுழையும் ஆணும்,,பெண்ணும் முன்னுதாரணமாய் எடுக்க வேண்டிய ஒன்று.இறுதியாக தூக்குப்போட்டு தன் வாழ்வைத்துறக்கவிருந்த தன் மகளுக்கு வாழ்வு கொடுத்த தோபியாவைத் தன் மருமகனாக அல்ல...மகனாகவே ஏற்கும் இரகுவேல் இன்றைய பெண் எடுக்கும்,கொடுக்கும் பெற்றோருக்கு ஒரு ரோல் மாடல். இப்பதிவின் மூலம் இறைவனின் இரக்கம் என்பது நம்முடன் பயணிக்குமேயானால் இருண்ட சுரங்கம் போன்ற பலருடைய வாழ்க்கை ஒளிபெறும்; வளம் பெறும் என்பது நமக்கு ஆறுதலான விஷயம். நல்லதொரு திருமணத்திற்கு நம்மைக் கரம் பிடித்து நடத்திச்சென்ற தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் இந்த வாரம் இனிமை தரட்டும்!!!

    ReplyDelete