Wednesday, February 17, 2016

ரபேல்

அ. இரண்டு கேள்விகள்

'நான் எப்படி போவேன்?' என்ற தோபியாவின் கேள்வியும், 'அவன் எப்படி போவான்?' என்ற அன்னாவின் கேள்வியும்தான் தோபித்து நூல் பிரிவு 5ன் இரு பிரிவுகள்.

1. 'நான் எப்படி போவேன்?' (5:1-17)
தோபியாவின் இந்தக் கேள்விக்குப் பின் இருப்பது இரண்டு பிரச்சினைகள்: ஒன்று, கடன் வாங்கியவர் யார் என்பதும், கடன்வாங்கியவருக்கு தோபியா யார் என்பதும் தெரியாது. தெரியாத ஒருவரிடம் எப்படி பணத்தைக் கொடுப்பார்? என்ற கேள்வி. இரண்டு, அவர் இருக்கும் ஊருக்கும், அந்த ஊருக்குமான வழியும் தெரியாது. முதல் பிரச்சினையை தோபித்தே தீர்த்து வைக்கின்றார். பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததற்கான ஆவணத்தின் ஒரு பகுதிய தோபித்திடம் இருக்கிறது. இரண்டாம் பிரச்சினைக்கு தீர்வாக, ஊருக்கு வழிகாட்டும் ஒருவரை இப்போது கண்டுபிடிக்க வேண்டும். வெளியே செல்லும் தோபியாவின் கண்களில் ரபேல் படுகின்றார். 'நான் ஆளைக் கண்டுபிடித்துவிட்டேன்!' என தோபியா ஓடிவர, தோபித்தோ, 'அவரை நான் பார்க்க வேண்டும். அழைத்துவா!' என்கிறார். ரபேலும் வர, உடன்செல்லும் பணி அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பணிக்கான கூலியும் நிர்ணயிக்கப்படுகின்றது. இருவரும் பயணத்தை தொடங்கப்போகின்றனர்.

2. 'அவன் எப்படி போவான்?' (5:18-23)

இதற்கிடையில் தோபியாவின் தாய் அன்னாவுக்கு ஒரு கவலை: 'ஏன்  குழந்தையை அனுப்பினீர்?' என தன் கணவன் தோபித்திடம் கோபித்துக்கொள்கிறார். 'பணம் பெரிதா? குழந்தை பெரிதா?' என பட்டிமன்றம் வைக்கின்றார். இறுதியில் கணவனின் நம்பிக்கை வார்த்தைகளால் ஆறுதல் பெறுகின்றார்.

ஆ. வார்த்தைகளும், வாழ்வும்

தோபித்து 5ஆம் பிரிவில் வரும் நிறைய வார்த்தைகள் நம் ஆர்வத்தை தூண்டுகின்றன. அந்த சொல்லாடல்களின் பொருளையும், அவை நமக்கு விடுக்கும் வாழ்வியல் சவால்களையும் இங்கே பார்ப்போம்.

1. கேள்வி கேட்கும் மகன்
தோபியா தன் தந்தைக்கு கீழ்ப்படிவதில், அறிவுசார்ந்த கீழ்ப்படிதல் இருக்கிறதே தவிர, அங்கே அடிமையின் கீழ்ப்படிதல் இல்லை. தோபியாவின் கேள்விகள் அவரை நமக்கு அறிவுள்ள ஒரு இளைஞனாக நம்முன் நிறுத்துகின்றன. அறிவோடு சேர்ந்து தோபியாவுக்கு தன் தந்தையின்மேல் அக்கறையும் இருக்கிறது. 'பணம் போனா போய்ட்டுப்போகுது!' என்று தொட்டும் தொடாமல் பதில் சொல்லாமல், தந்தையின் தளபதியாக புறப்படத்தயாராகின்றார்.

2. ஆவணம்
தோபித்து ரொம்ப தெளிவான ஆள். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்டதில். பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணத்தை இருபது ஆண்டுகள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். 'ஆவணம் ஒன்றில் கபேல் கையொப்பமிட்டார். நானும் கையொப்பமிட்டேன். அதை இரண்டாகக் கிழித்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டோம்' (5:3). இங்கே பண்டைக்கால பத்திரம் எழுதும் முறை நமக்கு விளங்குகிறது. இந்தப் பழக்கம்தான் இன்று வங்கியில் சலானாக இருக்கிறது. நாம் பணம் செலுத்தும்போது, சலானில் நாமும், காசாளரும் கையொப்பமிட, ஒரு பகுதி நமக்கு கிழித்து தரப்படுகிறது. அடுத்த பகுதி காசாளரிடம் தங்கிவிடுகிறது. இதுபோலவே, நாம் படித்து பெறும் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்களும், இரண்டுபேர் கையெழுத்திட ஒரு பகுதி நமக்கு கிழித்து தரப்படுகிறது. மற்ற பகுதி நாம் படித்த பள்ளியிலேயே தங்கிவிடுகிறது.

400 கிலோ அல்லது பத்து தாலந்து வெள்ளி (4:20) பணத்தை இப்போது தோபியா பெற்று வர வேண்டும். ஒரு தாலந்து வெள்ளி என்பது ஆறாயிரம் தினாரியம். ஒரு தினாரியம் ஒன்பது ஒருநாள் கூலி. ஆக, பத்து தாலந்து என்றால் அறுபதாயிரம் தினாரியம். ஒருவரின் 165 ஆண்டுகள் சம்பளம் இது. இது பெரிய தொகைதான்.

3. சென்றார், கண்டார்
தோபியா வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் அவரின் கண்களில் ரபேல் படுகின்றார். ஆனால், அவரை வானதூதர் என தோபியாவால் கண்டுகொள்ள முடியவில்லை. தோபித்துக்கு புறக்கண்கள் இருளாயிருந்தன. தோபியாவுக்கு அகக்கண்கள் இருளாயிருந்தன. தேடினார். கண்டார். தேடுவோரின் கண்களுக்கு மட்டுமே உதவி செய்வோர் தெரிவர்.

4. எங்கிருந்து வருகிறீர்?
நம் தமிழ்வழக்கில் புதிதாக ஒருவரை சந்திக்கும்போது, 'நல்லா இருக்கீங்களா?' என்று கேட்பதுபோல, எபிரேய வழக்கில், 'எங்கிருந்து வருகிறீர்?' என்று கேட்பது மரபு.

5. வானதூதர் எல்லாம் அறிவார்
'மேதியாவுக்கு வழி தெரியுமா?' என்று தோபியா கேட்க, மேதியா என்ன, நீ தேடும் கபேலையும் எனக்குத் தெரியும் என்கிறார் ரபேல். நம் வாழ்வில் வரும் வானதூதர்களுக்கும் எல்லாம் தெரியும்.

6. அவரை என்னிடம் அழைத்து வா
தோபியா வளர்ந்த இளவல் என்றாலும், அவரோடு செல்லும் வழிப்போக்கர் நல்லவரா என்று பார்க்க விரும்பி தன்னிடம் அழைத்து வருமாறு சொல்கின்றார் தோபித்து. இது பெற்றோர் கற்க வேண்டிய நல்ல பண்பு. அதாவது, நட்பு, பழக்கம், காதல், திருமணம் என்ற எந்த பாதையில் தன் குழந்தையை அனுப்புமுன், உடன்செல்பவர் யாரென்று பார்க்க பெற்றோர் முயற்சி எடுக்க வேண்டும். 'அவரை, அவளை என்னிடம் கூட்டி வா! அவரின், அவளின் குலம், இனம் என அனைத்தையும் பார்க்க வேண்டும்!' இப்படி குலம், இனம் பார்ப்பது மனிதர்களைப் பிரித்துப் பார்க்கவோ, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என தரம்பிரிக்கவோ அல்ல. மாறாக ஒருவரின் பின்புலத்தை அறிந்துகொள்வது அவரை நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது. வானதூதருக்கே குலம், கோத்திரம் பார்க்கும் பெருமை தோபித்துக்குத்தான் உண்டு!

7. மங்கலம் உண்டாகட்டும்
தோபித்து நால் பிரிவு 5 முழுவதும் நிறைய வாழ்த்துச் சொற்கள் உள்ளன: 'எங்கிருந்து வருகிறீர்?' 'வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக!' 'அஞ்ச வேண்டாம்!' 'உன் வரவு நல்வரவாகுக!' 'எல்லாம் நலமாக அமையட்டும் தம்பி!' 'நலமே சென்றுவா!' தெரியாத மனிதரோடு உரையாடுவதாலும் மங்கலச் சொற்களால் உரையாடுகின்றார் தோபித்து. ரொம்பவே பாசிட்டிவ் எனர்ஜி கொண்ட மனிதர் தோபித்து. அப்படிப்பட்ட ஒருவரால் தான் எல்லாரிடமும் இயல்பாக பேசவும், வாழ்த்தவும் முடியும்.

8. பெயர்கள்
'கபேல்' என்றால் 'கடவுள் வல்லமையானவர்'
'ரபேல்' என்றால் 'கடவுளே நலம்' அல்லது 'கடவுள் நலம் நல்குபவர்'
'அனனியா' என்றால் 'ஆண்டவர் அருள்கூர்பவர்'
'அசரியா' என்றால் 'ஆண்டவர் உதவி செய்பவர்'

ரபேலின் பெயர் வரும் இடங்களில் எல்லாம், 'நலம்' என்ற சொல்லும் உடன் வருகிறது இந்தப்பிரிவில். மேலும், 'அசரியா' என்பது தன் பெயர் எனச் சொல்கின்றார் ரபேல். ஆக, தூதர்கள் நமக்கு உதவி செய்பவர்கள்.

9. எனக்கு இனி என்ன மங்கலம்?
தன் பார்வை பறிபோய்விட்டதால் தன் வாழ்வில் இனி மங்கலமே இல்லை என ரபேலின் வாழ்த்தை ஏற்க தயங்குகின்றார் தோபித்து. தன்னை இருளில் வாழ்பவன் எனச் சொல்கின்றார். இருள் என்பது எபிரேய மொழியில் இறப்பையும் குறிக்கும். நாம் வாழ்வற்ற நிலையில் இருந்தாலும் நலம் தரக்கூடியவர் இறைவன்.

10. நீ நல்ல குடும்பத்தைச் சார்ந்தவன்
தோபித்தின் இந்த வார்த்தைகள், 'பிறப்பால் ஒருவன் நல்லவனாகப் பிறந்தாலும், வளர்ப்பால்தான் அவன் நல்லவன் ஆகிறான்' என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன.

11. சம்பளம்
இது தோபித்தின் அடுத்த பொருளாதாரக் கொள்கை. இதுவே அவரது நீதியும் கூட. ஒவ்வொரு நாள் பயணத்திற்கும் ஒரு தெனாரியம் சம்பளம் எனவும், மேலும் வழிப்போக்கனின் உணவு மற்றும் இதர செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கான்ட்ராக்ட் பேசுகிறார் தோபித்து. வாழ்வில் எதுவும் இலவசம் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஒரு கூலி அல்லது விலை உண்டு. மேலும், இலவசமாக நாம் எதையும் பெறக் கூடாது. ஒவ்வொருவரின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும். அந்த உழைப்பிற்கேற்ற கூலி தரப்பட வேண்டும்.

12. தம்பி
மூச்சுக்கு மூச்சு, தோபித்து ரபேலை, 'தம்பி' 'தம்பி' என அழைக்கிறார். இது மரியாதைநிமித்தம் பயன்படுத்தப்படும் வார்த்தை. இறுதியாக, தன் மகனைப் பார்த்து, 'உன் சகோதரனோடு போ!' என்கிறார். புதிதாக வந்த வேற்று இளைஞனை உடனடியாக ஏற்று, தன் மகன்போல கண்டுபாவிக்கும் தாராள உள்ளம் கொண்டிருக்கிறார் தோபித்து.

13. முத்தமிடுதல்
நீண்ட பயணம் செல்வதற்கு முன் ஒருவர் மற்றவர் கன்னங்களில், 'நீ என்னவன், நான் உன்னவள், நான் உனக்காக காத்திருக்கிறேன்' என வழங்கப்படும் முத்திரையே முத்தம்.

14. பணமா? குழந்தையா?
இரண்டையும் ஒப்பிட்டு கேட்கும் அன்னாவுக்கு பதில் சொல்லும் தோபித்து, 'தோபியா நலமே வீடு திரும்புவார்' என நம்பிக்கை தெரிகின்றார். குழந்தைதான் பணத்தைவிட பெரியது என்றாலும், பணம் இல்லாவிட்டால் குழந்தை மட்டும் இருந்து என்ன புண்ணியம். பணமும் வாழ்க்கைக்கு தேவை என்றும், பயணமும் தன் மகனின் வளர்ச்சிக்குப் பயன்படும் எனவும் எண்ணித் துணிகின்றார் தோபித்து.

தாயும், தந்தையும் கண்ணீர் மல்க வழியனுப்ப, இளவல் தோபியா, முன்பின் தெரியா வழித்தூதர் ஒருவரோடு வழிநடக்கின்றார் மேதியா நோக்கி.

2 comments:

  1. அழகான ஒரு புதினத்திற்கான அத்தனை அம்சங்களும் உள்ள ஒரு பதிவு. அதிதூதர்களாக புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல் என மூவர் சொல்லப்பட்டாலும் சிறு பிராயத்திலிருந்தே என்னைக் கவர்ந்தவர் ரபேல் தான். ஒருவேளை இவர்தான் நம்முடன் காவல்தூதனாகப் பயணிக்கிறார் என்று சொல்லப்பட்டதும்,இவரது வனப்பு மிகு தோற்றமும் காரணமாயிருக்கலாம்.இன்றையப்பதிவிலும் நாம் ரபேலைப் பார்ப்பது தேவை என்றவுடன் எதிரில் வந்து நிற்கும் ஒரு 'ஆபத் பாந்தவனாகத்தான்.'இன்றையப் பதிவில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுமே குணாதிசயங்களில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.தான் கொடுத்த கடனை தன் இறப்பிற்குப்பின் திரும்பப்பெறும் சுமையைத் தனயன் மீது திணிக்க விரும்பாத தந்தை தோபித்தாகட்டும், வளர்ந்த மகனேயானாலும் அவனை நீண்ட தூரம் பயணம் அனுப்ப கலங்கி நிற்கும் அன்னாவாகட்டும், தந்தை இட்ட கட்டளையை ஏற்று பயணத்திற்குத் தன்னை தயார்படுத்தும் தனயன் தோபியாவாகட்டும், அவனை மேதியாவுக்குப் பொறுப்புடன் கூட்டிச்செல்லும் தோழன் ரபேலாகட்டும்...அனைவருமே நம்மை நேசத்துடன் நிமிர்ந்து பார்க்க வைக்கிறார்கள். இதைத்தவிர தந்தையும் தனக்கே உரித்தான நடையில் அள்ளித்தெளித்திருக்கும் விஷயங்கள் நாம் வாழும் வாழ்க்கைக்கு வலு சேர்ப்பதாய் உள்ளன. கடன் கொடுப்பவரும் பெறுபவரும் கடைபிடிக்க வேண்டிய நியதிகள், தங்கள் பிள்ளைகள புதிய நண்பர்களுடன் பழக விடுகையில் பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள், நாம் புதிதாக சந்திக்கும் நபர்களுடன் பரிமாறக்கூடிய மங்கலச்சொற்கள், நீண்ட தூரம் செல்லும் உறவினரை வழியனுப்புகையில் 'நான் உன்னோடு' என சொல்லாமல் சொல்லும் சில செய்கைகள் அவற்றில் அடங்கும்.இன்றையப் பதிவின் கருத்துக்களை ஒரு குவளை 'ஐஸ்க்ரீம்' என எடுத்துக்கொண்டால் அதன் மத்தியில் உள்ள 'செர்ரிப்பழமாக'க் கொள்ளலாம் இந்த வரிகளை....." தோபித்தின் புறக்கண்களும்,தோபியாவின் அக்க்கண்களும் இருளாயிருந்தன.தேடினர்; கண்டனர்.தேடுவோரின் கண்களுக்கு மட்டுமே உதவிசெய்வோர் தெரிவர்"... நம் வாழ்வில் வரும் ரபேல்களை இனம் காணுவது மட்டுமின்றி நாமும் சிலர் வாழ்க்கையிலாவது விளக்கேற்றும் ரபேல்களாகமாறுவோம்.உணர்வுபூர்வமானதொரு பதிவைத் தந்த தந்தைக்கு ஒரு 'சபாஷ்!'

    ReplyDelete
  2. Dear Father,very very precious your words are!

    My Congratulations to you.

    ReplyDelete