Tuesday, November 10, 2015

இது ஓகே வா?

'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்' (காண். லூக்கா 17:11-19)

இயேசு பத்து தொழுநோயாளர்களை குணமாக்கும் நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எங்கள் குருமடத்தில் நடந்த ஒரு நாடகம்தான் நினைவிற்கு வரும். இந்த நிகழ்வை அப்படியே மேடைநாடகமாக நடித்தபோது, இயேசுவாக நடித்த மாணவன், 'பத்துப் பேர்களின் நோய்களும் நீங்கவில்லையா? மற்ற பதினோரு பேர் எங்கே?' என்று கேட்டுவிட்டான்.

பத்து – ஒன்பது – ஒன்று என்று எல்லாம் இணைந்து பதினொன்று ஆகிவிட்டது.

நாளைய நற்செய்தியின் முக்கிய கேள்வி: நமக்குத் தேவையானது எது? human approval அல்லது divine approval.

மனிதர்கள் சொல்லும் O.K. (Oll Korrekt = All Correct) வா? அல்லது கடவுள் சொல்லும் O.K. வா?

நாம் அணியும் ஆடை, எடுக்கும் முடிவு, பேசும் பேச்சு என எதை எடுத்தாலும், எல்லாம் முடிந்தவுடன் நம்;கு அருகில் இருப்பவரிடம், 'இது ஓகே வா?' என்று கேட்கிறோம். அவர் 'ஓகே' சொன்னால் நாம் திருப்தியடைகிறோம். அப்படி அவர் 'ஓகே' சொல்ல மறுத்தால் நாம் சோர்ந்துவிடுகிறோம். நம்மையே திருத்திக்கொள்ள விழைகிறோம். இந்த நிகழ்வுகளில் அடுத்தவர்தான் என்னுடைய அளவுகோலாக இருக்கிறார்.

முதல் ஏற்பாட்டு சட்டத்தின்படி தொழுநோய் ஒருவருக்கு நீங்கப்பெற்றாலும், குருக்கள்தாம் 'ஓகே' என்று சர்டிபிகேட் கொடுக்க வேண்டும்.

பத்து தொழுநோயாளர்கள். ஒருவர் சமாரியர். மற்ற ஒன்பது பேர் யூதர்கள்.

தொழுநோய் பிடித்த இந்த சமாரியர் இரண்டு நிலைகளில் 'ஓகே' மறுக்கப்பட்டிருக்கிறார். எப்படி? ஒன்று, அவர் சமாரியர் (அதாவது, தூய்மை இல்லாதவர்), இரண்டு, தொழுநோய் பிடித்தவர் (ஆக, தள்ளிவைக்கப்பட்டவர்). இவர் இப்போது நலம் பெற்றாலும் யூதக் குருக்களிடம் செல்ல முடியாது. ஏனெனில், யூதர்களுக்கு மட்டும்தான் அவர்கள் குருக்கள். ஆக, அவர் இயேசுவிடம்தான் வந்தாக வேண்டும்.

இப்போ பிரச்சினை என்னவென்றால், யாரை என் குருவாக ஏற்றுக்கொள்வது? இதுதான் இந்த சமாரியரின் கேள்வி. இயேசுவையா? மனிதர்களையா?

இவர் இயேசுவைத் தேர்ந்து கொள்கின்றார். திரும்பி வருகின்றார்.

சில நேரங்களில் கடவுள் நம்மை வேண்டுமென்றே தூரம் அனுப்புகின்றார். எதற்காக? அந்தத் தூரத்திலிருந்து நாம் திரும்பி வருவதற்காகத்தான்.

ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டிலும், அந்த மகன் தன் தந்தையின் அன்பையும், இரக்கத்தையும் உணர சில காலம் தூரமாக இருக்க வேண்டியிருந்தது. அந்தத் தூரத்தில்தான் அவன் 'பன்றிகளா' 'தந்தையா' என்ற முடிவை எடுக்கின்றான்.

'உமது நம்பிக்கை உமக்கு நலம் தந்தது!'

அதாவது, கடவுள் ஓகே சொன்னால் போதும் என்ற நம்பிக்கையே நமக்கு நலம் தருகிறது.

இன்று பல நேரங்களில் நாம் அடுத்தவர்கள் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக நம்மையே மாற்றிக்கொண்டே இருக்கின்றோம். இதில் கடைசியில் நம் இயல்பு என்ன என்பதும், நம் ஆசாபாசாங்கள் எவை என்பதும் நமக்கு மறந்துவிடுகின்றன. மேலும் மனிதர்களின் ரசனைகள் மாறிக்கொண்டே இருப்பவை. இன்று நான் கறுப்பு ஆடை அணிவது எனக்கு அடுத்திருப்பவருக்கு பிடிக்கிறது என்று நான் கறுப்பு நிறத்தில் ஆடை அணிகிறேன் என வைத்துக்கொள்வோம். இன்னும் ஒரு மாதத்தில் அவருக்கு வெள்ளைதான் பிடிக்கிறது என்றால் நான் என் அலமாரியைக் காலி செய்து அனைத்தையும் வெள்ளையாக மாற்ற வேண்டும்.

ஒரே கேள்வி:

இன்று யார் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?

கடவுள் ஓகே சொன்னால் மட்டும்போதும் என நினைத்தால் நானும் இப்போதே அவரிடம் திரும்பிச் செல்வேன்.

அதுவே நலம்தரும் நம்பிக்கை.

9 comments:

  1. அழகான,நம் அன்றாட வாழ்வின் இயல்பை பிரதிபலிக்கும் ஒரு பதிவு.நாம் யாருமே தனித் தீவுகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, நமது செயல்களும்,நாம் வாழும் முறைமையும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டியது கட்டாயமில்லை எனினும் நம்மைப் புரிந்த ஓரிரு பேராவது அதற்கு ஆதரவு தர வேண்டுமென நம் மனம் விழைவது நியாயமே.நம் இயல்புப்படி,எதிர்பார்புப்படி அவர்கள் நம்மை ஆதரிக்கையில் முகம் மலர்வதும் இல்லாவிடில் மனம் மருகி முகம்
    சுருங்குவதும் நமக்கு அன்றாடம் பழக்கப்பட்ட விஷயங்களே! ஆனால் இதையும் மீறிய விஷயங்கள்....நமது சில நம்பிக்கைகள்,நாம் கட்டிக்காக்கும் விழுமியங்கள்,நான் இப்படித்தான் எனக் காட்டும் என் குடும்பப் பின்னனி...இது போன்ற விஷயங்கள் இருக்கின்றன...நாம் யாருக்காகவும் மாற்ற முடியாத...மாற்றக்கூடாத விஷயங்கள்.இவைகளுக்கு ஆபத்து வரும்போது உலகமே எதிர்த்தாலும் " நான் இப்படித்தான்" என்ற மனது உறுதியுடன் நிமிர்ந்து நிற்க வேண்டியது நாமே தான் அந்தப் பத்தாவது தொழு நோயாளியைப்போல.எனக்கு 'நல்லவள்'எனப் பட்டயம் அளிக்க மனிதர் முன் வராமல் போகலாம்.ஆனால் என் உள்ளத்தை அறிந்தவர் என்னோடிருப்பதால் நான் அசைவுறேன்; கலங்கிடேன்.இதையெல்லாம் சொல்லும் அளவுக்கு செயலில் காட்டுவது எளிதல்ல.ஆனாலும் நாம் மண்புழு அல்லவே; மனிதர்கள்.நம் மேட்டிமையை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.தந்தையின் வார்த்தைகளில் அந்த பத்தாவது தொழு நோயாளியைப்போல,ஊதாரி மைந்தனைப்போல தூரம் செல்ல வேண்டியிருப்பினும் கவலை நமக்கில்லை; திரும்பி வருகையில் நம் நம்பிக்கைக்குரியவர்கள் நம்மைப் புரிந்து கொள்வர்.இதில் மறக்கப்பட்ட விஷயம்...ஒன்பது யூதர்களிடமில்லாத அந்த 'நன்றியுணர்ச்சி' பரிசேயனான அந்த பத்தாவது நபரிடம் இருந்ததை இயேசு சுட்டிக் காட்டினாரே ...அதைப்போல நம்மிடமுள்ள சில அரிய விஷயங்களையும் இவ்வுலகம் புரிந்து கொள்ளும்.பொறுமை ஒன்றே அவசியம்.நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடியதொரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பாச தந்தைக்கு வணக்கம்.இன்றைய பதிவு ஒரு அர்த்தமுள்ள அருமையான பதிவு.இறுதியில் கேட்டிருக்கும் கேள்வி இன்று யார் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? மிக மிக ஆழமாக யோசிக்க வேண்டியது.ஏனென்றால் நிறைய நேரம் வாழ்க்கை யாருக்கு வாழ்கிறோம் என்று தெரியாமலே வாழ்கிறோம்.படைத்த கடவுளுக்கு வாழ வேண்டும் என்பதை நிறைய நேரங்களில் மறந்து வாழ்கிறோம் . ஆக, கடவுள் ஓகே சொன்னால் மட்டும்போதும் அது மட்டுமே போதும் என்று தந்தை கூறியிருக்கும் கருத்தை மனதில் கொண்டு அவரோடு அவருக்காக வாழ்வோம்.தந்தைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. என் தவறொன்றை சுட்டிக்காட்ட விழைகிறேன்.ஒன்பது யூதர்களிடமில்லாத அந்த நன்றியுணர்ச்சி 'பரிசேயனான'.......பரிசேயன் எனும் வார்த்தைக்குப்பதில் 'சமாரியன்' என திருத்திக்கொள்கிறேன்.தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. ஒரு நான்கு நாட்களுக்கு முன் அருட்சகோதரி கலையும்,திரு புஷ்பராஜ் அவர்களும் என் எழுத்து குறித்து எழுதியிருந்ததற்கு நான் ஏற்புரை எழுதாத்து என் மனத்தைக் கொஞ்சம் நெருடியது.எனவே சில வரிகள்...தாங்கள் இருவரும் நினைப்பது போல் நான் ஒரு சொற்களஞ்சியமோ இல்லை எழுத்தில் பாண்டித்தியம் பெற்றவளோ இல்லை. தந்தையின் எழுத்தைத் தட்டிக்கொடுக்கவும்,விவிலியம் குறித்த என் அறிவை வளர்த்துக் கொள்ளவுமே இந்தப் பின்னோட்டம் எழுதுவதை ஆரம்பித்தேன்.பின் இது பிடித்துப்போகவே இதைத்தொடர்கிறேன். தந்தை எனக்குப் பரிட்சயமானவர் என்பதாலும்,என் வயது கொடுக்கும் சலுகையாலும் என் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறிது உரிமை எடுத்துக் கொள்கிறேன்.அவ்வளவே.புஷ்பராஜா அவர்களே! நானும் தங்கள் மனைவி போலத்தான்.நினைத்த சாமான் கண்ணில் படவில்லையெனில் அது கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.அது என்னவோ ஆண்களைவிடப் பெண்களுக்குக் கொஞ்சம் கூடுதல் பொறுப்புணர்ச்சி இருப்பதன் விளைவே அது என நினைக்கிறேன்.தங்கள் மனைவி குறித்து சங்கடப்பட ஒன்றுமில்லை.அனைத்துப் பெருமைக்கும் தகுதியுள்ளவர் தங்களது மனைவி. இறைவன் கொடுத்த தாலந்து எல்லோரிடமும் இருக்கிறது.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கால கட்டத்தில் வெளிப்படுகிறது. நீங்கள் எழுதிய வரிகள் இரசிக்கும் படித்தான் இருந்தன.தங்களுக்கும்,அருட்சகோதரிக்கும் என் பாராட்டும் நன்றிகளும்.இறைவனின் கரத்தை வலுப்படுத்தும் கருவிகளாக செயல்படுவோம்.இறைவன் நம் முயற்சியை ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுக்கு வணக்கம்.தாயின் குரலை கேட்டவுடன் கன்று துள்ளிக்குதித்தது போன்று இருக்கிறது உங்கள் பாராட்டுக்கள்.நன்றி என்னை ஞாபகத்தில் வைத்ததற்கு. நம்மை கடவுளுக்கு மட்டும் ஓ.கே சொல்லுங்கள் என்ற தந்தைக்கும், உங்கள் அர்த்தமுள்ள பின்னூட்டத்திற்கும் செல்வியின் நன்றிகளும்.பாராட்டுக்களும்.

      Delete
  6. நன்றி செல்வி.( அப்படி அழைக்கலாம் அல்லவா?). என்னை ஒரு தாய் ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பது எனக்குப் புல்லரிப்பைத் தருகிறது.நன்றி! இறைவன் தங்களையும்,தாங்கள் சிரமேற்கொண்டிருக்கும் அனைத்துப் பணிகளையும் ஆசீர்வதிப்பாராக! இந்த நாள் இனிய நாளாகட்டும்!

    ReplyDelete
  7. என் அப்பா,அம்மா உடன்பிறந்தவர்கள் எல்லோரும் செல்வி என்றே அழைப்பார்கள்.கலை என்றால் தெரியாது சபையில் உள்ளவர்கள் தான் கலை என்று அழைப்பார்கள் .நீங்களும் ஒரு தாய் தானே செல்வி என்று தாரளமாக அழைக்கலாம்.நன்றி.

    ReplyDelete