Monday, August 10, 2015

நிறைவாக விதைப்பவர்

'நான் ஒருவாய் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள
அடுத்த வாய் சோறு நீட்டிக்கிட்டே இருக்காதமா.
எனக்கு ஸ்ட்ரெஸ் ஆவுது!'

இது நான்கு மாதங்களுக்கு முன் தன் குழந்தையைப் பற்றி  ஒருவர் போட்டிருந்த டுவிட்.

அலுவலகம், பள்ளி என வேலைக்குப் போவர்களுக்கு மட்டும்தான் ஸ்ட்ரெஸ் இருக்கும் என்பதல்ல, வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளுக்கும் இருக்கும் ஸ்ட்ரெஸ்.

அவர்களின் ஒரு ஸ்ட்ரெஸ் காரணி அடுத்த வேளை என்ன சமைப்பது? என்பதுதான். இன்று மதியம் சாப்பிட்டு முடித்தவுடன், நாளைக்கு என்ன குழம்பு வைப்பது என்ற எண்ணத்தொடங்கிவிடுவார்கள். சில நேரங்களில் தாங்கள் ஒரு குழம்பு வைக்க நினைத்து, அதற்கான பொருட்களை வாங்க நினைத்து கடைக்குச் சென்றால், கடையில் அந்தப் பொருள் அல்லது காய்கறி மட்டும் இருக்காது. உடனடியாக அவர்கள் வேறு முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

இந்த இல்லத்தரசியின் ஸ்டரஸ்தான் எனக்கு ஒவ்வொரு நாளும் வலைப்பதிவு எழுதும்போல இருக்கிறது. இன்றைக்குரியதை எழுதி முடித்தவுடன் நாளை என்ன எழுதுவது என்ற கவலை பற்றிக்கொள்கிறது.

வலைப்பதிவு வாசகர்களைத் தக்க வைப்பது மிகக் கடினம். அன்றைய நாளில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து எழுத வேண்டும். இன்று எண்ணற்ற எழுத்துக்கள் நம் மொபைலில் நம்மைக் கேட்காமலேயே வந்து விழுகின்றன. அவற்றையெல்லாம் படித்து முடித்துவிட்டு நம் வலைப்பக்கம் வரும் வாசகருக்கு போரடிக்காமல் இருக்க வேண்டும் நம் பதிவு.

'எப்படி எழுத வேண்டும்!' என்பதை நாம் முதல் வகுப்பு படிக்கும் போதே கற்றுக்கொள்கிறோம். ஆனால் 'என்ன எழுத வேண்டும்!' என்பதை நாம் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டேதான் இருக்கின்றோம்.

ஆக, இன்று முதல் இந்த ஸ்ட்ரெஸிலிருந்து விடுதலை பெற ஒரு சின்ன முயற்சிதான் அடுத்தநாள் திருப்பலி வாசகங்களைப் பற்றிக் கொஞ்சம் சத்தமாக யோசிப்பது.

இன்றுடன் 705 பதிவுகள் எழுதியாயிற்று.

இந்த 705ன் நினைவாக இந்த புதிய முயற்சியைத் தொடங்குவோம்.

நாளை திருத்தொண்டரும், மறைசாட்சியுமான தூய லாரான்சின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

முதல்வாசகத்தில் (காண். 2 கொரி 9:6-10) தூய பவுல் 'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார், நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்' எனச் சொல்லி, 'நிறைய கொடுங்கள்!' என அறிவுறுத்துகின்றார். இந்தக் கொடுத்தலுக்குப் பின் இருக்க வேண்டியது 'முகமலர்ச்சி' என்றும் சொல்கின்றார்.

நல்ல பழம்தான் தன்னை முழுமையாக மற்றவருக்குத் தருகின்றது. அழுகிய பழம் தன்னில் ஒரு பகுதியைத்தான் மற்றவருக்குத் தருகின்றது. ஆக, நானும் என்னில் ஒரு பகுதியைதான் மற்றவருக்கு பலன்தருவதாக வைத்திருக்கிறேன் என்றால் நானும் அழுகிக்கொண்டு இருக்கிறேன் என்று அர்த்தம்.

கொடுப்பது என்றவுடன் நாம் பணத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. நம்மிடம் இருக்கும் புன்னகை, நேரம், அறிவு, ஆற்றல் அனைத்தையும் கொடுக்கலாம். 'கொடுப்பது' என்றவுடன் எனக்கு நினைவிற்கு வருவது கார்மேலா என்ற என் பங்கு பொதுநிலை இனியவர் ஒருவர். வயது அவருக்கு 75. அவரை எங்கும் பார்க்கலாம். சூப்பர் மார்க்கெட்டில் இருப்பார். என்ன? என்று கேட்டால், தன் அபார்ட்மென்டில் வசிக்கும் ஒரு பெண்மணிக்கு காரோட்டியாக வந்தேன் என்பார். புதன்தோறும் மருத்துவமனையில் தன்னார்வப் பணி செய்கிறார். வெள்ளி தோறும் எங்கள் பங்கின் 'காரித்தாஸ்' அமைப்பில் தன்னார்வத்தொண்டு செய்கிறார். திங்கள் கிழமை மறைக்கல்வி எடுப்பார். ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய பொருட்களை வாங்கி விற்று, ஆப்பிரிக்காவில் ஒரு பள்ளியின் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாளை நாம் கொண்டாடும் லாரன்சைப் பற்றிச் சொல்லும்போது, தான் எரிக்கப்படும்போதுகூட, 'இந்தப் பக்கம் வேகவில்லை, புரட்டிப் போடுங்கள்!' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். ஆக, தன்னையே முழுமையாக இறைவனுக்குக் கொடுக்க நினைத்தவர் தூய லாரான்சு.

நற்செய்தியில் இயேசு சொல்வதும் இதுதான். 'கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிய வேண்டும்!' (யோவான் 12:24-26). முழுமையாக மடிந்தால்தான் அது புதிய உயிராக பிறக்க முடியும். அரைகுறையாக மடிந்தால் அது மட்கிப் போகிவிடும்.

நமக்கு நாமே செய்யும் வேலையாக இருந்தால்கூட - சாப்பிடும்போது சாப்பிட மட்டும் செய்வது, மின்னஞ்சல் அனுப்பும்போது மின்னஞ்சல் மட்டும் அனுப்புவது, அடுத்தவர் பேசும்போது முழுமையாகக் கேட்பது - நம் முழு ஆற்றலையும் அதற்குக் கொடுத்துச் செய்தால் நாமும் நிறைவாக விதைக்கிறோம்.

தூய லாரன்சின் பெயரைத் தாங்கியிருக்கும் அனைத்து இனியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!


2 comments:

  1. இல்லத்தரசிகளுக்காக்க் குரல் கொடுக்க முயற்சிக்கும் தந்தைக்கு ஒரு சபாஷ்! கண்டிப்பாக நாளை என்ன குழம்பு,சட்னி வைக்கலாம், என்ன சேலை கட்டலாம் என்பதிலிருந்து வீட்டைவிட்டு வெளியே சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்பது வரை எல்லாமே டென்ஷன்தான்; ஸ்ட்ரெஸ்தான்.இந்தச் சின்னப் பிரச்சனைகளை வெளியேற்ற வடிகால் இல்லாதபோது தான் அவை பெரிய பிரச்சனைகளாகத் தலை தூக்குகின்றன. தந்தையின் பாணியில் இதைப் போக்க முயற்சி செய்தாலே போதும்; அதன் பலன் கிட்டி விடும்.நம் பிரச்சனைகளை ஒதுக்கிவைத்து விட்டு நம்மைச் சுற்றியுள்ளோர் படும் அவஸ்தையை கண் திறந்து பார்க்க முயற்சிப்பது; காது கொடுத்துக் கேட்க முயற்சிப்பது.ஒருவரின் பிரச்சனைகளைக் கேட்கும் போது அவர்களுக்கு உடனே தீர்வு சொல்ல நம்மால் முடியாமல் போயினும் சுமையை இறக்கி வைத்த நிம்மதி அவர்களுக்கும்,சுமைதாங்கிகளாக செயல்பட்ட நிம்மதி நமக்கும் கிட்டும்.அந்த நிம்மதி நமக்கு முழுமையாக்க் கிட்ட நம்மையும் நாம் முழுமையாக்க் கொடுப்பது அவசியம்.இலையெனில் நம் முயற்சி 'ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்' வைத்தவனின் கதையாகிவிடும்!!

    ReplyDelete
  2. இன்றிலிருந்து அடுத்த நாளுக்கான திருப்பலி வாசகங்களைக் கொஞ்சம் சத்தமாக வாசிக்கும் தங்கள் முயற்சியை இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்! நன்றி!! இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete