Tuesday, August 11, 2015

திரை விழும் நேரம்

பழைய கால (கொசுவத்திக்கு பதிலா வேப்ப இலை புகை போட்ட காலம் அல்ல! ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்) திரையரங்குகளுக்குள் சென்றால், சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திரை ஒன்று வெள்ளைத்திரையை மூடியிருக்கும். திரைப்படம் தொடங்குமுன் அந்தத் திரை மேலெழும்பிச் செல்லும் போது உள்ளம் குதூகலிக்கும். திரைப்படம் முடிந்து கீழே திரை இரங்கும்போது மனம் வேண்டாய் வெறுப்பாய் அதையே பார்க்கும். வெளியே வந்து பார்த்தால் சாயங்காலம் ஆனதுபோல இருக்கும். உச்சி வெயிலில் உள்ளே போய் 3 மணி நேரம் இருட்டு தந்த சுகத்தை அனுபவித்துவிட்டு, வெளிச்சத்தை மீண்டும் பார்க்க கண்கள் தயங்கவே செய்கின்றன.

ஆனால், ஏறிய திரை இறங்க வேண்டும். இது திரையரங்கின் எதார்த்தம் மட்டுமல்ல. வாழ்வின் எதார்த்தமும் கூட.

இஸ்ரயேல் மக்களின் மீட்பு வரலாற்றின் முதல் காட்சியின் திரைவிழும் நேரம்தான் நாளைய முதல் வாசகம் (காண். இச 34:1-12).

மோசே நெபோ மலையில் இறக்கும் நிகழ்வே நாளைய முதல் வாசகம்.

இந்த வாசகத்தில் 'கண்கள்' என்ற வார்த்தை மூன்றுமுறை நேரடியாவும், ஒருமுறை மறைமுகமாகவும் பயன்படுத்தப்படுகிறது:

அ. '...நிலம் இதுவே. உன் கண்களால் இதைப் பார்க்கச் செய்துவிட்டேன்.'
ஆ. 'அவரது கண்கள் மங்கினதுமில்லை...'
இ. '...இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய...'
ஈ. 'ஆண்டவர் நேருக்குநேர் சந்தித்த (பார்த்த) மோசேயைப்போல், இறைவாக்கினவர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் இருந்ததில்லை'

கண்களின் திரை விலக நாம் பிறக்கிறோம்.
கண்களின் திரை மூட நாம் இறக்கிறோம்.

நாம் எதைப் பார்க்கிறோமோ, அதோடு உறவு கொள்கிறோம். அல்லது, நாம் எதோடு உறவு கொள்கிறோமோ, அதை மட்டுமே பார்க்கின்றோம். ஒரு கல்யாண மண்டபத்தில் ஆயிரம் பேரை நாம் பார்த்தாலும், நம் கண்களை நிலைநிறுத்தி நாம் பார்ப்பது என்னவோ வெகு சிலரைத்தான்.

'கண்டுக்கவே மாட்றீயே!' என்று நம் உறவுகளைச் சீண்டும்போதும் நாம் 'கண்' மற்றும் 'காணுதலைத்தான்' பயன்படுத்துகின்றோம். தமிழர்திருநாளாம் தைத்திருநாளின் இறுதிநாள் நிகழ்வும் 'காணும் பொங்கல்' என்றே அழைக்கப்படுகின்றது.

மோசேயின் வாழ்க்கையில் அவர் முதலில் கடவுளைப் பார்க்கிறார். இரண்டாவதாக, மக்களைப் பார்க்கிறார். தான் இறக்குமுன் நிலத்தைப் பார்க்கிறார். நாம் கடவுளை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படித்தான் நம் உறவுகளை அல்லது நமக்கருகில் இருப்பவர்களைப் பார்க்கிறோம் என்று சொல்வார்கள்.

ஆக, இரண்டு விடயங்கள்: ஒன்று, நாம் பார்க்கும் வரிசை. முதலில் யாரைப் பார்க்கிறோம்? இறுதியாக யாரைப் பார்க்கிறோம்? இந்த வரிசையில் குழப்பம் வந்தாலும், வாழ்வு சரியாக அமைவதில்லை. இது நபருக்கு நபர் வேறுபடும். உதாரணத்திற்கு அருட்பணி நிலையில் இருக்கும் ஒரு இனியவரின் பார்வை மோசேயின் பார்வை போல இருக்க வேண்டும்: கடவுள், மனிதர், நிலம் என்ற அடிப்படையில். இதே தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? நிலமும், நிலம் தருகின்ற உறுதியும் அவருக்கு சோதனையாக அமைந்துவிடும். அவரின் பார்வையை கடவுளிடமிருந்து திருப்பவிடும். திருமண உறவில் இருக்கும் இனியவருக்கு தன்னைச் சார்ந்திருக்கும் கணவன், மனைவி அல்லது பிள்ளைதான் முதலில் இருக்க வேண்டும். திருமணம் முடித்துவிட்டு, வீட்டைக் கவனிக்காமல் சதா கோவிலிலேயே கிடந்தாலும் ஆபத்துதான்.

இரண்டு, நாம் கடவுளை எப்படிப் பார்க்கிறோம்? அவர் எனக்கு ஒரு பொருளா அல்லது ஆளா? ஆள் என்றால் எந்தவகையான உறவுநிலையில் நான் அவரோடு இணைந்திருக்கிறேன்.

ஆக, காணுதல் சரியாக இருந்தால் உறவுகள் சரியா இருக்கும். நாளைய நற்செய்தியிலும் (மத் 18:15-20) உறவுச்சிக்கலும், அதைத்தீர்க்கும் விதமும்தான் சொல்லப்பட்டிருக்கின்றது.

இறுதியாக, இரண்டு மூன்றுபேர் மனமொத்து ஒரே கண்களோடு பார்த்தார்கள் என்றால் அங்கே கடவுள் தெரிவார்.

மோசே என்ற நபர் பெரும் பாக்கியசாலி. கடவுளை நேருக்கு நேர் பார்த்தார்.

நாம் அவரிலும் பாக்கியசாலிகள் நம் உறவுகளில் அதே கடவுளை நேருக்குநேர் பார்த்தால்!


4 comments:

  1. என் இனிய கனிமொழிக்கு,
    எனக்கும் உனக்கும் எந்தவொரு இரத்த உறவும் இல்லை. 2011ல் புனித நாடு சென்ற போது 10 நாள்கள் ஒன்றாக உண்டு, உறங்கிப் பயணித்த ஒரே உறவு தான்.
    ஒரு தந்தை என்ற நிலையிலிருந்து உமது அனைத்துப படைப்புக்களின் மகா ரசிகன் என்ற நிலையில் மனம் குளிர வாழ்த்துகின்றேன்.

    ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன்
    எனக் கேட்ட தாய்.

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கினிய அருட்தந்தை அவர்களுக்கு,
      வணக்கம்.
      தங்களின் இனிய பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
      தொடர்ந்து என்னை ஆசீர்வதியுங்கள்.
      அன்புடன்,
      கனிமொழி

      Delete
  2. மோசே தன் ஊனக்கண்களால் நேருக்கு நேர் சந்தித்த இறைவன் அவர் வாக்குரைத்தபடி வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் அவர் பாதம் படியவிடவில்லை எனினும் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த நாட்டைக் காணச் செய்கிறார்.எத்துணை ஆசீர்வாத்த்துக்கு அவர் சொந்தக்கார்ர் என்பதைச் சொல்லும் 'அவர் கண்கள் மங்கினதுமில்லை; அவர் வலிமை குறைந்ததுமில்லை' எனும் வார்த்தைகள் நம்மை நெகிழ வைக்கின்றன.நம் பிறப்பையும், இறப்பையும் மூடித்திறக்கும் கண்களின் திரையோடு ஒப்பிட்டிருப்பது நம்மையும் இறப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது."நம் வாழ்வின் priorities சரியாக இருக்கும் பட்சத்தில் நம் வாழ்க்கையும் அழகானதொன்றாகவே இருக்கும்"....நம் புத்தியில் ஏற்றிக்கொள்ள வேண்டிய
    உண்மை.தந்தையின் அந்த இறுதி வரிகள்.." நாம் மோசேயையும் விடப் பாக்கியசாலிகள் நம் உறவுகளில் அவர் பார்த்த கடவுளை நேருக்கு நேர் பார்த்தால்"... இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கு? தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete
  3. Movie that keeps us intact

    ReplyDelete