Friday, August 21, 2015

துணிச்சல்காரி

மோவாபு நாட்டிலிருந்து பெத்லகேம் நோக்கி நடக்கும் ரூத்து நாளைய முதல் வாசகத்தில் (காண். ரூத்து 2:1-3, 8-11, 4:13-17) மூன்று முறை நடக்கிறாள்.

ரூத்தின் இந்த மூன்று பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எப்படி?

அன்றைய சமூக, அரசியல் சூழலின் பின்புலத்தல் ரூத்தை நாம் நிறுத்திப் பார்த்தால் அவள் மூன்று வகை புறக்கணித்தல்களுக்கு ஆளாகியிருக்க வேண்டும்: முதலில் அவள் ஒரு பெண். இரண்டாவதாக, புறவினத்தாள். மூன்றாவதாக, விதவை.

இந்த மூன்று புறக்கணிப்புகளும் மறைகிறது இந்தப் பயணங்களில்:

1. தன் வீட்டிலிருந்து வயலுக்கு. 'என்னதான் கடவுள் படியளப்பார்' என நம்பினாலும், என்னதான் நம்ம ஊரின் பெயர் 'அப்பத்தின் வீடு' (பெத்லகேம்) என அழைக்கப்பட்டாலும், வீட்டிற்குள்ளா அப்பம் வந்து விழும், நாம்தான் தேடிச்சென்று உழைக்க வேண்டும் என்று ரொம்ப ப்ராக்டிக்கலா நினைக்கிறாள் ரூத்து. முதல் ஏற்பாட்டுப் பெண்கள் இந்த வகையில் ரொம்ப ப்ராக்டிகலானவர்கள்தாம் - முதல்பெண் ஏவாளும்கூட! 'நான் வயலுக்குப் போகிறேன்!' என்று மருமகள் கேட்டவுடன், 'ஆண்டவர் உன்னைக் கருணையுடன் நோக்குவாராக!' என அனுப்புகிறார் நகோமி. பெண்களை வெறும் 'பொருளாக' பார்க்கும் மனப்பாங்கும் அன்றும் இருந்திருக்கிறது. ஆகையால்தான், ரூத்து நூலின் ஆசிரியர் போவாசு பற்றிச் சொல்லும்போது, 'போவாசு ரூத்தை கருணையுடன் பார்த்தார்!' என்று சொல்கின்றார். இதுதான் கடவுளின் பார்வையும்கூட. போவாசின் பணியாளர்கள் வேறு மாதிரியாகப் பார்த்திருந்தாலும், போவாசின் கருணை பார்வை ரூத்தின் முதல் புறக்கணிப்பிலிருந்து விடுவிக்கிறது.

2. தன் வீட்டிலிருந்து களத்திற்கு. இந்த நிகழ்வு பற்றி முழுமையாக நாளைய முதல் வாசகத்தில் விவரிக்கப்படவில்லை. ஆனால், இந்த நிகழ்வில்தான் ரூத்து ஒரு வேற்றினத்துப் பெண் என்றாலும், எப்படி எருசலேம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறாள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக, இந்த இரண்டாம் நிகழ்வில் அவள் புறவினத்தாள் என்ற புறக்கணிப்பிலிருந்து விடுதலை பெறுகிறாள்.

3. தன் வீட்டிலிருந்து போவாசின் வீட்டுக்கு. விதவையாய்ச் சென்றவள் கையில் மகளுடன் திரும்புகிறாள். அதுவும் யூதாவின் மாபெரும் அரசனாம் தாவீதின் தாத்தாவை ஈன்றெடுக்கும் பாக்கியம் பெறுகிறாள். பிறந்திருக்கும் இந்தக் குழந்தை எப்படிப்பட்டதென்று விவிலியம் எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள்! 'இவன் உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையவன்! இவன் உனக்கு புதுவாழ்வும், முதுமையில் அன்னமும் அளிப்பவன்! ஏழு மைந்தர்களுக்குச் சமமானவன்!' - இந்தக் குழந்தை ரூத்தின் வெறுமையை மட்டுமல்ல, அவளின் மாமியார் நகோமியின் வெறுமையையும் போக்க வல்லவன். ஆக, வெறுங்குடம் பொங்கி வழிகிறது!

'கடவுளின் வழிகள் கடவுளின் வழிகளே!' அவை என்றென்றும் நம் கண்களுக்கு வியப்பே. ஆக, எந்தவகை புறக்கணிப்புக்கு நாம் ஆளானாலும், நம் நிலை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் இந்த வேற்றினத்து விதவைப் பெண் சொல்லும் பாடம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது. வீட்டிலேயே ஓய்ந்திருப்பதும், கட்டிலில் முகம் புதைத்துக்கொண்டு இருப்பதும் வாழ்வை மாற்றிவிடுமா? புதிய இடம் என்றாலும், 'வயலுக்குப் போகிறேன்!' என்ற துணிச்சலை இந்த துணிச்சல்காரியிடம் நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஆக, 'உங்கள் போதகர் ஒருவரே, உங்கள் தந்தை ஒருவரே, உங்கள் ஆசிரியர் ஒருவரே!' என்ற நாளைய நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 23:1-12) சாரத்தை உட்கிரகித்துக் கொண்ட ஒருவரே இந்தத் துணிச்சல் பெற முடியும். ஏன்! இதை உட்கிரகிக்கவே நமக்கு துணிச்சல் தேவை! துணிச்சல்காரி ரூத்திடம் இது நிறையவே இருந்தது!




2 comments:

  1. " ஒரே தந்தையும்,ஒரே போதகரும்,ஒரே ஆசிரியருமான இறைவனை" தன் வாழ்வின் சாரமாகப் பற்றி கொண்ட காரணத்தால் வெறும் பொருளாக, வேற்றினத்துப் பெண்ணாக,ஒரு விதவையாக வரிக்கப்பட்ட ரூத்தானவள் பின்னால் அவளைப் பாதுகாத்து,முதுமையில் அவளுக்கும் அவளது மாமியார் நகோமிக்கும் அன்னமளிக்கக் கூடிய , அரசனாம் தாவீதின் தாத்தாவைப் பெற்றெடுக்கக் கூடிய பாக்கியம் பெறுகிறாள்.இதை விவரிக்கும் தந்தையின் " வெறுங்குடம் பொங்கி வழிகிறது".. எனும் வார்த்தைகள் அருமை.நம் மனங்களாகிய வெறுங்குடங்களும் பொங்கி வழிய வேண்டுமெனில் " வயலுக்குப் போகிறேன் என்று சொல்லும் துணிச்சலை அவரிடம் கேட்போம்.சிறிய குப்பியில் அடைத்த தேனாக வலைப்பதிவின் ஆரம்பத்தில் வரும் ஆங்கில வார்த்தைகள் வலைப்பதிவின் சிறப்பைக் கூட்டுகின்றன.தந்தையே! இதெல்லாம் எப்படி சாத்தியம்?? தங்களிடம் உள்ள துணிச்சல் தான் காரணமோ??!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Grazie Padre per il vostro messaggio ispiratore di essere coraggiosi come Ruth.è i pensieri molto piacevole e bello

    ReplyDelete